24_01

மாசில்லா (தூய்மையான) பேழை (பெட்டகம்) அன்னை மரியா


 இறைவனே முதலில் உனை தெரிந்தார் 

கறைசிறிதில்லா காத்திருந்தார்… (தாவீதின் குலமலரே…) 

என்ற பாடல் வரிகள் அன்னை மரியாவை இறைவன் மாசு அணுகாமல் காத்ததை எடுத்தியம்புகிறது. கடவுளின் இரக்கம் இவ்வுலக மக்கள்மீது அதிகம் இருந்ததால், மானுடத்தின் கறையினை நீக்க இறைவன் அன்னை மரியாவை கறைப்படாமல் காத்தார்.

ஒரு மரம் நல்ல கனியை தர வேண்டுமென்றால் அந்த மரம் நன்கு கவனிக்கப்பட வேண்டும், அதற்கு நல்ல சூழல் தேவை. இறைமகனை சுமக்க வேண்டுமென்றால் அன்னை மரியா தூய்மை நிறைந்தவராக இருக்க வேண்டும். (நல்ல மரமெல்லாம் நல்ல கனியை கொடுக்கும் - மத் 7:17) அந்த தூய்மை, தூய்மை நிறைந்த உள்ளம், நல்ல கனியை கொடுக்கும் தகுதி, தியாக உள்ளம்  ஆகியவை அன்னை மரியாவிடம் இருந்தது. 

திருப்பாடல்கள் ஆசிரியர் 97:12இல் “…ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்” என்று கூறிப்பிடுவது போல, அன்னை மரியா தனக்குள் கொண்டிருந்த தூய்மையான உள்ளம் இறைவனின் வருகைக்கான அழகுறு ஆலயமாக மாறியது. 

பழைய ஏற்பாட்டிலே, தொடக்க நூல் 6:8இல் “நோவாவுக்கு ஆண்டவரின் அருள்பார்வை கிடைத்தது” என்று பார்க்கிறோம். மண்ணில் மனிதரின் தீச்செயல் பெருகிய காரணத்தினால் கடவுள் மனிதரை படைத்ததற்காக மனம் வருந்தினார். மனிதரை இந்த மண்ணிலிருந்து அழிக்க எண்ணினார். இருந்தபோதிலும் எல்லோரையும் அழிக்கவில்லை. நோவாவும் அவருடைய குடும்பமும் காப்பாற்றப்படுகிறது. காரணம் நோவா நேர்மையானவராகவும் குற்றமற்றவராகவும் (தொ.நூல் 6:9) இருந்தார். பேழையினுள் இருந்தவர்கள் தூய்மையானவர்களாய், கடவுளுக்கு உரியவர்களாய் இருந்ததால் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். பேழை வழியாக கடவுள் அவர்களை காத்தார். 

கபிரியேல் என்னும் வானதூதர் அன்னை மரியாவுக்கு தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! அண்டவர் உம்மோடு இருக்கிறார் (லூக் 1:28) என்று வாழ்த்தினார். கடவுளின் அருளை பெற்ற அன்னை மரியா தூய்மை நிறைந்தவராக இருந்தார். அன்னை மரியா என்னும் தூய்மை நிறைந்த பேழை வழியாக இயேசு மனிதராக இவ்வுலகில் உருபெற்றார். மாசில்லா பேழையான அன்னை மரியா வழியாக இறைமகன் கடந்து வருகையில் அவரும் மாசற்றவராக வெளிவந்தார். இதற்கு, அன்னை மரியா அமல உற்பவியாக, மாசுமறுவற்றவராக  கடவுளால் தேர்ந்துக் கொள்ளப்பட்டது தான் காரணம்.

அன்னை மரியா மாசில்லா முறையில் உருவானார் என்பதை தொடக்கக் கால திருஅவைத் தந்தையரே ஏற்றுக் கொள்ள தயங்கினர். புனித பெர்னார்ட், புனித பெரிய ஆல்பாட், பொனவெந்தூர், அக்குவின் தோமா ஆகியோர் அவர்களுள் சிலர். மரியா பிறப்புநிலை பாவத்தால் தீண்டப்படவில்லை என்றால், இயேசு கொணர்ந்த மீட்பு மரியாவுக்கு தேவையில்லை என்றாகிடுமே என்ற கேள்வியெல்லாம் தொடக்கக் காலத்தில் எழுந்தது. 

அன்னை மரியாவின் அமல உற்பவத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இறையியல் அறிஞரும் அருளாளருமான ஜான் டன் ஸ்காட்டஸ் என்பவர் இருவகை அருள் பற்றி பேசினார். அவையாவன 1. காக்கும் அருள் 2. குணமாக்கும் அருள். திருமுழுக்கின் வழியாக நாம் பெறக்கூடிய குணமளிக்கும் அருள் நம்மை பிறப்புநிலை பாவத்திலிருந்து கழுவி தூய்மைப்படுத்துகிறது. அன்னை மரியா உலக மீட்பரை பெற்றெடுக்க வேண்டிய சூழலில், அவரும் மாசிலிருந்து (அ) பிறப்புநிலைப் பாவத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டிய  தேவையிருந்ததால் காக்கும் அருளால் அவர் முன்கூட்டியே காப்பாற்றப்பட்டார். இயேசுவின் மீட்பின் பேறுபலன்கள் எல்லா மனித உயிர்களுக்கும் தேவைதான். அந்த மீட்பின் பேறுபலன் அன்னை மரியாவுக்கு முன்கூட்டியே கொடுக்கப்பட்டது.

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை (லூக் 1:37) என்பதற்கேற்ப கடவுளின் காக்கும் அருள் அன்னை மரியாவை முன்கூட்டியே காத்து, இயேசுவின் தாயாக மாசில்லா தாயாக உருமாற்றியது. அன்னை மரியாவின் காட்சியும் இதை நமக்கு உறுதிப்படுத்துகிறது. 1858ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்குக் காட்சி கொடுத்த அன்னை மரியா தன்னை “நாமே அமல உற்பவம்” என்று வெளிப்படுத்தினார்.

மாசற்ற அன்னை ஒரு பேழையாக இருந்து மாசற்ற இறைவனை பெற்றெடுத்தார். இதோ நான் ஆண்டவரின் அடிமை என்று தன்னையே கையளிக்கும் முன்னரே கடவுள் அவரை ஏற்றுக் கொண்டார். அவரை அருளால் நிறைத்தார்.

இந்த மாசில்லா அன்னை நமக்கு சுட்டிக் காட்டக்கூடிய படிப்பினை தூய்மை என்பது நமது உள்ளத்திலும் வார்த்தையிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும் என்பது தான்.

மாசற்ற பேழையான அன்னை மரியே… எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...