பொதுக் காலம் 1ஆம் வாரம்
17.01.2025 – வெள்ளிக் கிழமை
“நாங்கள் பாவம் செய்தாலும் உம்முடையவர்களே| ஏனெனில் உமது ஆற்றலை அறிவோம். நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்| ஏனெனில் உம்முடையவர்களாக நீர் எங்களை எண்ணுவதை நாங்கள் அறிவோம்.” சாலமோனின் ஞான நூல் 15:2
நம்பிக்கை இழந்து நோய்வாய்ப்பட்டு மாண்பிழந்து கிடக்கும் மனிதர்களை இந்த சமூகத்தினர் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. அவர்களால் எங்த பயனும் இல்லை என்று வருகிற போது கவனித்து எண்ண ஆக போகிறது என்ற எண்ணம் தான் கண்டும் காணாமல் போக செய்கிறது.
எழுந்து நடமாடக்கூடிய வேளையிலேயே, இந்த உலகம் பணமில்லாதவர்களை மதிப்பதில்லை. படுத்தப் படுக்கையாய் கிடந்தால், நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்டால் இந்த உலகம் நம்மை விட்டு வைக்குமா என்ன? சிலருக்கு நோயும் சிலருக்கு வறுமையும் வாழ்க்கை மீது வெறுப்பை கொடுத்து விடுகிறது.
நோயும் வறுமையும் சிலரை சாபக்கேடாய் வாட்டி வதைக்கிறது. சிலர் முன்னால் செய்த தீமைகள், அவர்களுக்கு பின்னால் தீவினையாய் மாறுகிறது. நாம் விதைத்தது விரூட்சமாக விளைந்து நம்முன்னால் நிற்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 2:1-12) கட்டிலில் கிடத்தப்பட்டு தூக்கிவரப்பட்டவர் கடைசியில் கட்டிலை தூக்கி கொண்டு செல்கிறார். இது இறைவனின் வல்லமை...
அவர் செய்யக்கூடிய நல்லதை கூட பாராட்ட மனம் இல்லாத மறைநூல் அறிஞர்கள் 'இவன் கடவுளை பழிக்கிறான்' என்று தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள். ஒருவருக்கு நல்லது செய்வது எப்படி கடவுளை பழிப்பதாகும்?
இயேசு அந்த முடக்குவாதமுற்றவரிடம், 'மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார். நோயை குணப்படுத்தும் முன், ஏன் உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்கிறார்?
ஒருவர் செய்த தவறு அவரை நோயாளியாக மாற்றி விடுகிறது. பாவம் அதிகமாக அது அவர்மீது சுமையாக மாறிவிடுகிறது. எனவேதான் பலவேளைகளில், நோயாளர்களை இயேசு குணப்படுத்தும் முன் 'உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார். மன்னிப்பதன் வழியாக பாவங்கள் குறைக்கப்படுகிறது, அங்கு நோயாளர்கள் நலம் பெறுகிறார்கள்.
இயேசு நலம் அளிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அதை மறைநூல் அறிஞர்கள் கூட்டம் கேள்வி கேட்டது. ஆனால் எதற்கும் பயப்படாத இயேசு செய்ய வேண்டிய நன்மையை தைரியத்தோடு செய்தார் அதிகாரத்தோடு செய்தார்.
இங்கு வல்ல செயல் நடைபெற நான்கு நபர்கள் தேவைப்பட்டார்கள். நால்வரின் செயல்பாடுகளோடு கூடிய நம்பிக்கை ஒருவருக்கு நல்வாழ்வை பெற்றுக் கொடுக்கிறது.
நாம் மற்றவர்கள் நல்வாழ்வு பெற மற்றவர்கள் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும். நாம் நல்வாழ்வு பெற மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நம்பிக்கை மட்டும் போதாது, நம்பிக்கை செயல்வடிவம் பெற வேண்டும். நம்பிக்கையின்றி செயல்கள் இல்லை: செயல்களின்றி நம்பிக்கை இல்லை.
No comments:
Post a Comment