26.04.2024 - வெள்ளிக் கிழமை
“ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்” - திருப்பாடல்கள் 25:10
உண்மையின் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி… உண்மையின் பாதை கொஞ்சம் இடுக்கமான, இடறலான பாதை தான். உண்மையின் குரல் கொஞ்சம் எதிரிகளுக்கு எரிச்சலை கொடுக்கத் தான் செய்யும்.
உண்மையின் சார்பாக இருப்பவருக்கு கிடைக்கும் சன்மானம் எதிர்ப்பு, அவமானம், மிரட்டல். பிழைக்கத் தெரியாதவன் இதுதான் உண்மையை பேசுபவருக்கு உலகம் கொடுக்கும் பட்டம்.
உண்மை மாறும் போது பாதை மாறும். பாதை மாறும் போது பழக்கவழக்கங்கள் மாறும். ஒருதடவை நேர்மையாளர் உண்மையிலிருந்து விலகினார் என்றால் என்றைக்கும் அவர் உண்மையின் பக்கம் திரும்ப போவதில்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:1-6) இயேசு, நானே வழியும் உண்மையும் வாழ்வும் என்கிறார். இது வெறும் வார்த்தை அல்ல, இயேசுவின் வாழ்க்கையே அதுதான். எதை தனது வாழ்க்கையில் அறிவித்தாரோ அதை அவர் செயல்படுத்தினார். உண்மையை போதித்தார், அந்த உண்மைக்காக தனது உயிரையே கொடுத்தார்.
ஒருவர் உண்மையுள்ளவர் என்பது அவர் நம்முடன் இருக்கும்போது தெரியாது. நம் வார்த்தைகளால் உண்மையுள்ளவரை, நேர்மையானவரை காயப்படுத்தி துரத்திவிட்ட பிறகு அல்லது இழந்த பிறகு தான் தெரியும், உண்மையிலே யார் உண்மையுள்ளவர் என்று.
இயேசுவின் வாழ்வை பொருத்தவரை அவருடைய சீடர்கள் அவரை புரிந்துக் கொள்ளவில்லை. அவரிடம் உண்மை இருப்பதை தெரிந்துக் கொள்ளவில்லை. அவரின் நோக்கத்தை அறிந்துக் கொள்ளவில்லை.
உண்மையை கண்டுபிடிக்கும் வழி பெரும்பாலும் நமக்கு தெரிவதில்லை. உண்மையாய் இருப்பதற்கான வழியும் நமக்கு தெரிவதில்லை.
பொய் பேசுகிறவர்களை உலகம் மதிக்கிறது, தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. உண்மை பேசுகிறவர்களை உலகினர் கண்டுக் கொள்வதில்லை.
நாம் இயங்குவதும் இருப்பதும் உலகினருக்காக அல்ல. அடுத்தவருக்காக, அடுத்தவர் விரும்பும்படியாக நாம் வாழ்ந்தோம் என்றால் நாம் நம் சுயத்தை இழந்து விடுவோம்.
அவரின் வழியில் உண்மையை நோக்கி பயணிப்போம்… நிலைவாழ்வில் உண்மையின் பலன் நிச்சயம் இனிக்கும்…
No comments:
Post a Comment