19.04.2024 - வெள்ளிக் கிழமை
“வயிறு எல்லா வகை உணவுகளையும் உட்கொள்கிறது; எனினும் ஒரு வகை உணவு மற்றொன்றைவிட மேலானது” - சீராக் 36:18
இயற்கை (தாவரங்கள், விலங்குகள், கடல் உயிரினங்கள்) தன்னை இழந்து பிறர்நிலை உயர உணவாகிறது. அவற்றின் உடல்தான் நமக்கு உணவு. சைவம், அசைவம் என்று நாம் தான் பிரித்து வைத்திருக்கின்றோம். ஆனால் ஏதாவது ஒன்றின் உயிரை கொன்று தான் நாம் உணவை நாம் பெறுகிறோம். இது தான் சார்புநிலை.
நாம் இறைவனையும் சார்ந்து இருக்கிறோம். அவரது உடலும் இரத்தமும் நமக்கு உணவாக மாறுகிறது. நாம் வாழ்வு பெற அவர் தன்னை இழக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:52-59) நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? என்ற வாக்குவாதம் யூதர்களிடையே எழுவதை பார்க்கிறோம். இயேசு தனது உடலையே உணவாகத் தருகிறார். தன் இரத்தத்தை பானமாக தருகிறார்.
இயேசுவின் உடலை உண்பவர்களை தொடக்கக் காலத் திருஅவையில் தன் இனம் திண்ணும் கூட்டத்தினர் (Cannibals) என்று அழைத்தனர். இதை போன்ற வாக்குவாதம் தான், இயேசு தன் உடலை அப்பத்தின் வடிவில் உணவாக கொடுத்த நேரத்திலும் (அவர் வாழ்ந்த காலத்திலும்) எழுந்தது. எப்படி நாம் அவருடைய உடலை உணவாக உண்ண முடியும் என்பது அவர்களுடைய வாக்குவாதம்.
இங்கு இயேசு தன் உடலை தருதல் என்பது தன்னை இழப்பது, தியாகம் செய்வது, பிறரன்பு பணிசெய்வது ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறது. யார் மீது நாம் அதிக அன்பு வைத்திருக்கின்றோமோ அவர்களுக்காக நாம் நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கையளிக்க தயாராக இருப்போமே அது தான் இங்கு புலப்படுகிறது.
நம்மை அன்பு செய்வோரை, நாம் பதிலன்பு செய்வோம். ஆனால் இங்கு தம் பகைவருக்காகவும் இயேசு தமது உடலை இழக்கத் துணிகிறார். இது தான் தெய்வ அன்பு.
உரோமையர் திருமுகம் 5:7,8இல் நாம் இவ்வாறு காண்கிறோம், “நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்”.
தன்னையே கொடுத்து மற்றவர்களுக்காக தன்நிலை இழக்க இயேசு அழைப்பு விடுக்கிறார்.
நாம் நம்மை பகிர்ந்து கொடுக்க வேண்டாம், நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுப்போம். ஒருவேளை பகிர்ந்து கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, பிறரிடமிருந்து பிடுங்கிக் கொள்ளாமலாவது இருப்போம்.
No comments:
Post a Comment