13.04.2024 - சனிக் கிழமை
“வலிமைபெறு; துணிவுகொள்; அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே; ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்; உன்னைக் கைவிடவும் மாட்டார்” - இணைச் சட்டம் 31:6
‘நான் உன்னோடு இருக்கிறேன்’ என்று நாம் எதிர்பார்க்கக் கூடியவர்கள் நமக்கு பதில் கொடுத்தார்கள் என்றார்கள் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை. ஆறுதல் தரும் வார்த்தைகள் ஒவ்வொருவர் வாழ்க்கையில் அவசியம். ஆறுதல் இல்லாமல் வாழ்க்கை நகர்வதில்லை.
தனிமையில் சில வார்த்தைகள் ஆறுதல், சிலரின் உடனிருப்பு ஆறுதல். வாழ்க்கை குறித்த கேள்விகளோடு இருப்பவர்களுக்கு தவிப்பும் தனிமையும் மிகப் பெரிய கொடுமை. இந்த தருணங்களில் சிலர் மனம் உடைந்து போகின்றனர், சிலர் வாழ்க்கையை வெறுத்து விடுகின்றனர்.
அஞ்சாதே! திகையாதே! நான் உன்னோடு இருக்கிறேன் என்பது வெறும் வார்த்தை அல்ல அது நம்பிக்கை…
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:16-21) சீடர்களுக்குள்ளே அச்சம் நிலவுகிறது. காரணம் அவர்கள் மாலை வேளையில் படகேறி கப்பர்நாகுமுக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள். இயேசு அவர்களோடு இல்லை, பெருங்காற்று வீசுகிறது, கடல் பொங்கி எழுகிறது, இயேசு கடல்மீது நடந்து வருகிறார், அவரை அவர்கள் இயேசு என்று அறிந்துக் கொள்ளாமல் அஞ்சுகிறார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “நான்தான் அஞ்சாதீர்கள்” என்கிறார்.
சீடர்களின் அச்சம் நீங்குகிறது, இயேசுவை படகில் ஏற்றுக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.
அச்சம் இருக்கும் இடத்தில் தயக்கம் இருக்கும். பயம் இருக்கும் இடத்தில் முன்னேற்றம் இருக்காது. அச்சம் நீங்கினால் வாழ்வில் முன்னேற்றம் தான்.
புனித தந்தை பியோ சொல்வார், ‘பயப்படாதே! கடவுள் உன்னோடு இருக்கிறார்’.
கடவுள் நம்மில் இயங்குகிறார் என்றால் நம் வழியாக மற்றவர்கள் அமைதியை பெற வேண்டும். அமைதி இருக்கும் இடத்தில் அச்சத்திற்கு இடம் இல்லை.
இயேசு தரும் அமைதியை போல் நாம் நம்மோடு வாழ்பவர்களுக்கு நம்மால் முடிந்த மட்டும் அமைதியை கொடுப்போம். அதன் மூலம் அச்சம் நீங்கும், உள்ளத்தில் ஒளி உண்டாகும்.
No comments:
Post a Comment