24_04

உள்ளத்தில் குடிகொள்ள…

29.04.2024 - திங்கட் கிழமை

“இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்” - இணைச் சட்டம் 6:6

அன்புக்குரியவர்களின் உள்ளத்தில் நம் நினைவுகள் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு. அன்புக்குரியவர்கள் எதிரியாக மாறுகின்ற வரை நம் உள்ளத்தில் எப்போதும் அவர்களுக்கும் இடம் உண்டு.

நினைவுகள் நீங்கி விட்டால் வாழ்வில் வருத்தங்கள். அதன்பின் அவர்கள் ஏற்படுத்திய வடுக்கள் ஆறாத தழும்பாய் குத்திக் கொண்டே இருக்கும். பேசிய வார்த்தைகள் காயங்களாய் மாறிவிடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:21-26) யார் கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிக்கிறார்களோ, வார்த்தையை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுடன் நானும் தந்தையும் வந்து குடிகொள்வோம் என்று இயேசு கூறுகிறார். கட்டளைகளை கடைப்பிடிப்போர் அன்புக்குரியோர் ஆகின்றார். அன்புக்குரியோர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக் கொள்கின்றார். 

கட்டளைகளை கடைப்பிடிப்போருக்கு தூய ஆவி என்னும் துணையாளரை இயேசு தருகிறார். தூயஆவியானவர்  இரண்டு காரியங்களை செய்கின்றார். 1. அனைத்தையும் கற்றுத் தருதல், 2. அனைத்தையும் நினைவூட்டுதல்

நாம் அன்பு செய்கின்றவர்கள் கூறிய வார்த்தைகள் நம் உள்ளத்தில் நிறைந்து இருக்கும். அந்த அன்பு நிறை வார்த்தைகள் மகிழ்வை கொடுக்கும், ஆறுதலை கொடுக்கும், மனநிறைவை கொடுக்கும். ஆனால் அதையும் கடந்த இறைவனின் வார்த்தை எவ்வளவு சிறப்புமிக்கது. 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் (4:12) சுட்டிக் காட்டுவது போல “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. 

இறைவன் உள்ளத்தில் உறைந்தால் நம் நோக்கங்கள் திசை மாறாது. நம் சிந்தனைகள் சிதறடிக்கப்படாது. எல்லாம் அன்பு மயமே. அவருடைய வார்த்தையும் அன்பே… அவருடைய உடனிருப்பும் அன்பே… அவருடைய இயக்கமும் அன்பே…

கடவுளுடைய வார்த்தையை கடைப்பிடிப்போர் உள்ளத்தில் இறைவன் தங்குவார். நற்கருணை வடிவில் இறைவார்த்தையின் வடிவில் அவர் ஒவ்வொரு நாளும் நம்முள் வசிக்கின்றார். 


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...