24_04

கனி தர…

28.04.2024 - ஞாயிற்றுக் கிழமை

“நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” - யோவான் 15:8

வாழ்க்கை என்பது பலன் கொடுப்பதற்கே. பலன் கொடுக்காத வாழ்க்கை பண்படாத, பயன்படாத வாழ்க்கை. எல்லோரும் 100 விழுக்காடு பலன் தர வேண்டும் என்பது இல்லை. தங்களது முயற்சிகளுக்கேற்ப பலன் கொடுக்க வேண்டும். பலன் கொடுக்க நாம் செய்ய வேண்டியது இணைந்து இருக்க வேண்டும். 

யாரோடு இணைந்து இருந்தால் நாம் பலன் கொடுக்க முடியும்? பண்பட்டவர்களோடு, பலன் கொடுத்தவர்களோடு இணைந்து இருந்தாலே நாம் பலன் கொடுக்க முடியும். 

பழைய ஏற்பாட்டில் முதற்பலன், பலன், நற்பலன், நிலப்பலன் என்ற வார்த்தைகள் பல இடங்களில் வருகின்றன. இவை எவற்றை சுட்டிக் காட்டுகின்றன? படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் அதனதன் பலனை பகிர்ந்தளிக்க அழைக்கப்படுகிறது. மனிதன் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கு நன்றியாக மனிதன் திரும்ப பலன் கொடுக்க வேண்டும். 

உதாரணமாக, தொடக்க நூல் 8:17இல் இவ்வாறு காண்கிறோம், “உன்னுடன் உயிரோடு இருக்கும் பறவைகள், விலங்குகள், நிலத்தில் ஊர்வன ஆகிய உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்னுடன் வெளியே கொண்டு வா. மண்ணுலகில் அவை பன்மடங்காகட்டும். பூவுலகில் அவை பலுகிப் பெருகிப் பலன் தரட்டும்”. வெள்ளப்பெருக்கின் முடிவில் கடவுள் இவ்வாறு நோவாவிடம் சொல்கிறார். 

தனக்குள்ள திறமையை வெளிக்காட்டாமல் மறைத்து வைப்பதனால் என்ன பயன்? நான் பெற்றுக் கொண்ட நல்ல அனுபவங்களை நான் வெளிக் கொணர வேண்டும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:1-8) இயேசு திராட்சைக் கொடி உருவகத்;தை பயன்படுத்துகிறார். நானே திராட்சைக் கொடி, நீங்கள் அதன் கிளைகள் என்கிறார். திராட்சைக் கொடியோடு கிளைகள் இணைந்திருக்கும் வரை தான் அவற்றிற்கு மதிப்பு. அவை வெட்டப்பட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை.

இங்கு இயேசுவோடு இணைந்திருக்கும் வாழ்வு பலன் கொடுக்கும் அல்லது கனி கொடுக்கும் வாழ்வு. 

பலன் தராத மரத்தையோ, செடியையோ யாரும் விரும்பமாட்டார். அவற்றை அப்புறப்படுத்தி விடுவார். அது போல நமது வாழ்வு பலன் கொடுக்கவில்லையென்றால் நாமும் அப்புறப்படுத்தப்படுவோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சொல்லாடல் நமக்கு வியப்பளிக்கிறது. கனி தரக் கூடிய கிளைகளை இன்னும் அவர் கழித்துவிடுகிறார், கனித் தராத கிளைகளை அவர் தறித்துவிடுகிறார்.

நாம் அவரால் கழிக்கப்பட்டு, இன்னும் பலன் கொடுக்கும் பக்குவத்தை அடைய வேண்டும். 

நாம் அவருடைய வார்த்தைகளால் தூய்மையாக்கப்பட்டிருந்தால் நாம் மிகுந்த கனி தருவோம். நாம் அவரோடு இணைந்திருந்தால் நாம் மிகுந்த பலன் தருவோம்.

நாம் கனி கொடுக்கும் சீடர்களாக மாறினால், இவ்வுலகம் நற்கனிகளால் நிறைந்திருக்கும்.


1 comment:

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...