12.04.2024 - வெள்ளிக் கிழமை
“நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்” - எபிரேயர் 4:15
நமக்கு ஒருவரை எதற்காக பிடிக்க ஆரம்பிக்கிறது? ஒருவர் நல்லவர் என்பதால், அவர் பேசுவது ஆறுதல் தரும் என்பதால், அவரின் உடனிருப்பே இன்பம் கொடுக்கும் என்பதால், தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வார் என்பதால், தன் குறைகளை பெரிதுப்படுத்த மாட்டார் என்பதனால், தனது ஆசைகளை நிறைவேற்றுவார் என்பதனால்… இவ்வாறாக பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நமக்கு ஒருவரை பிடிக்கிறது என்றாலும் காரணம் உண்டு, நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றாலும் காரணம் உண்டு.
மனிதர்கள் பல வேளையில் கண்மூடித்தனமாக மற்றவர்களை பின்பற்றுகிறார்கள். தங்களின் முன்மாதிரியாக, தலைவராக, ஹீரோவாக சிலரை கொண்டுள்ளனர். இன்றைய கால தலைவர்கள் எல்லோரும் தலைமைத்துவ பண்மை கொண்டுள்ளனரா என்பது கேள்விக்குறி! பணம், அதிகாரம் நல்ல தலைவர்களை உருவாக்காது. அது அடிமைச் சமூகத்தை தான் உருவாக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:1-15) இயேசுவை ஒரு கூட்டம் பின்பற்றுகிறது. எல்லாம் தேவைக்காக, ஆதாய நோக்கில் தான். இயேசு செய்த அரும் அடையாளங்களை கண்டு அவரை பின்பற்றியோர் பலர். பலன் முடிந்ததும் கைக்கழுவி விடும் கூட்டம் இது. இயேசு என்னும் தலைவர் மக்களின் தேவைகளை கண்டுணர்கிறார், நோய்களை நீக்குகிறார், பசியாற்றுகிறார், பரிவு கொள்கிறார், பகிர்ந்தளிக்கிறார், தன்னுடைய சீடர்களில் தலைமைத்துவ பண்பை ஏற்படுத்துகிறார்.
இயேசு கொணரும் தலைமைத்துவம் என்பது இல்லாமையை நீக்குவது, இருப்பதிலிருந்து பகிர்வது.
எனக்குள்ளும் தலைமைத்துவம் இருக்கிறது. அதை நான் சரிவர வெளிக்கொணர்கிறேனா? என்னையும் மக்கள் பின்தொடர்கிறார்களா? என்னால் தூவப்பட்ட தலைமைத்துவம் மற்றவர்களை தலைவர்களாக உருவாக்கியிருக்கிறதா? என்ற கேள்விகள் நம்மில் எழுப்பப்படட்டும்.
தலைமைத்துவத்தை நோக்கி படையெடுப்போம்… புதிய சமூகம் படைக்க…
No comments:
Post a Comment