25.04.2024 - வியாழக் கிழமை
“நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு” - திருப்பாடல்கள் 27:14
எவ்வளவு உறுதியான மனிதராயிருந்தாலும் சில அடிகள் வாழ்க்கையில் விழும்போது, சில அடிகள் எடுத்து வைக்க முடியாத அளவுக்கு போய் விடுகிறது. தடுமாற்றம், துணிவின்மை, தயக்கம் இவை தான் ஒருவரை முடக்கும் ஆயுதங்கள். ஆயிரம் பேர் உடன் இருந்தாலும் மனதில் திடமும் உறுதியும் இல்லையேல் வாழ்க்கை நிலைகுலைய தான் செய்யும்.
உறுதியூட்டப்படுவதற்கான வார்த்தைகள் வெளியிலிருந்து கொடுக்கப்பட்டாலும் உறுதி கொள்வது நம் மனதாக இருக்க வேண்டும். மனதில் உறுதி வேண்டும் என்பார்களே அது இருந்தால் தான் அடுத்த பணிகள் தடையின்றி நடக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 16:15-20) இயேசு தன் சீடர்கள் செய்த அனைத்திலும் அவர்கள் உடன் இருந்து அவர்களை உறுதிப்படுத்துவதைக் காண்கிறோம். தன் பணி செய்ய தன் சீடர்களுக்கு மனத்திடமும் பணி பகிர்வும் கொடுத்து வழிநடத்துகிறார்.
நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களை செய்வர் என்று சிலவற்றை வரிசைப்படுத்துகிறார் இயேசு. பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர், பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர், கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது, உடல் நலமற்றோர் மீது தம் கைகளை வைக்க அவர்கள் குணமாவார்கள் என்ற அரும் அடையாளங்களை செய்வதற்கான ஆற்றலை அவர்களுக்கு கொடுத்திருந்தார் இயேசு.
இன்று நமது பணியாக இருப்பது, திடம் இழந்து இருப்பவர்களை உறுதியூட்ட வேண்டியது தான். பலம் இழந்து இருப்பவர்களுக்கு ஆற்றல் கொடுக்க வேண்டியது.
உறுதியான மனதுடனே மற்றவர்களின் வாழ்க்கையில் உறுதியூட்டுவோம்… இயேசுவின் அன்பு பணியில் இணைவோம்.
No comments:
Post a Comment