23.04.2024 - செவ்வாய்க் கிழமை
“எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்” - யோவான் 17:21
எதிர்பார்ப்பில்லா, பொறாமையில்லா, சமுதாய சீர்கேடு இல்லா அந்த காலம் எவ்வளவு அருமையாய் இருந்தது. அன்று தொலைத் தூர பயணம் இல்லை, தொலைத் தொடர்பு சாதனம் இல்லை. ஆனால் உறவு ஒன்றிப்புக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்று எல்லாம் இருக்கிறது, ஆனால் உறவு ஒன்றிப்பு தான் இல்லை.
எல்லாரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று சிந்தனையில் எண்ணினோம் செயலில் காட்டினோம். ஆனால் இன்று மனதளவில் கூட அந்த ஒன்றிப்பு எண்ணம் வருவதில்லை. இணைந்திருப்போரை பிரிக்க சதித்திட்டம் தீட்டும் கூட்டம் இங்கு அதிகம். அதிலும் அந்த சதிக்கார கூட்டம் வீட்டுக்குள்ளே இருக்கிறது என்பது தான் வருந்ததக்கது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 10:22-30) மந்தையோடு ஒன்றித்திருக்கும் ஆயனை பற்றி வாசிக்க கேட்கிறோம். இந்த ஆயனிடமிருந்து மந்தையை பிரிக்க எவராலும் முடியாது. காரணம் அந்த ஆடுகள் அவரது குரலுக்கு செவிசாய்க்கின்றன. ஆடுகள் ஆயனோடு இணைந்திருக்கின்றன. தந்தையிடமிருந்து மகன் அவற்றை பெற்றிருக்கிறார், அவற்றிற்கு அவர் நிலைவாழ்வு அளிக்கிறார்.
தந்தை மகனோடும் மகன் தந்தையோடும் ஒன்றித்திருப்பது போல நாமும் இணைந்து வாழ வேண்டும். இணைப்பில் தான் அமைதி உண்டாகும். ஒன்றிப்பில் தான் மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்து வாழ்ந்து, எதையும் நாம் அனுபவிக்காமலும் மற்றவர்கள் பெற்றுக் கொள்ளாமலும் போவதைவிட இருக்கும் வரை இணைந்து பயணிப்போம்.
சிந்தனையிலும் ஒன்றிப்பு தேவை, பேச்சிலும் ஒன்றிப்பு தேவை. (பல நேரங்களில் ஒன்றிப்பை சிதைப்பதே, நாம் வாய்த் தவறி விட்ட வார்த்தைகள் தான்) இறை உறவில் இழப்பு இல்லை. இறை மனித ஒன்றிப்பில் தோல்வி இல்லை.
பிளவை உண்டாக்கும் சந்தர்ப்பவாதிகளை தூரெடுப்போம். அதன் மூலம் நம் உறவுகள் தூய்மை பெறும். உறவுகள் இணைக்கப்படும்.
No comments:
Post a Comment