24_04

தீர்ப்பிட அல்ல மீட்பளிக்க…


24.04.2024 - புதன் கிழமை

“ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்” - திருப்பாடல்கள் 96:13

தவறு செய்தவர்கள் தவறு செய்யாதவர்களுக்கு தண்டனை கொடுக்கும் காலம் இது. தவறே செய்யாதவர்கள் வாய்மூடி கூனிகுறுகி நிற்கும் கொடுமை நடப்பதும் இங்கு தான் அரங்கேறும். நியாயத்தை நிரூபிக்க இங்கு நிறைய பேச வேண்டி இருக்கும். ஆனால் பொய்யை உண்மையாக்க இங்கு சிறிது பேசினால் போதும்.

எதிர்த்தவர்கள் எப்போது மாட்டுவார்கள் என்று ஆவலோடு கூட்டம் காத்திருக்கிறது. பழிவாங்க நேரமும் காலமும் கூடி வரும்போது கொடியவர்கள் ஆட்சி செய்வார்கள். தான் தவறு செய்யும்போது தட்டிக் கேட்டவர்களை வீழ்த்த கயவர்கள் எப்போதும் வலைவிரிக்க தான் செய்கிறார்கள். இங்கு தீயவர்களுக்கு பயப்பட வேண்டியது நேர்மையாளர்கள் தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 12:44-50) இயேசு உலகிற்கு தீர்ப்பு வழங்க அல்ல, அதை மீட்கவே வந்ததேன் என்கிறார். அந்த மீட்பு அவரில் நம்பிக்கை கொள்வோருக்கு கிடைக்கும். தன்னை எதிர்த்தவர்களையும் அன்பால் அரவணைத்தவர் இயேசு. தந்தையிடமிருந்து எதை பெற்றுக் கொண்டாரோ அதை அவர் மற்றவர் வாழ்வு பெற கொடுக்கிறார்.

இருளிலிருந்து ஒளிக்கு மக்களை அழைத்தவர், நம்பிக்கை கொள்வோருக்கு வாழ்வு அளித்தவர், தன் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியவர் இயேசு.

இன்று அவரை, அவருடைய வார்த்தையை பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். 

நம்முடைய கடுஞ்சொற்களால் மற்றவர்களை தீர்ப்பிடாமல், முடிந்தமட்டும் வாழ்வு கொடுக்க முயற்சி செய்வோம். வாழ்வு கொடுப்பவரை பற்றிக் கொண்டால் நம் வாழ்வு நிலைதடுமாறாது.

நாம் எந்த அளவையால் (தீர்ப்பால்) அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும். தீர்ப்பு என்னும் சுமைகளை சுமத்தாமல் மீட்பு என்னும் ஒளியை பற்ற வைப்போம்.

நம் நம்பிக்கை மற்றவர்களின் வாழ்வுக்கான விடியலாகட்டும் (மீட்பாகட்டும்)…


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...