24_04

ஆயனின் அன்பு வழியில்…

21.04.2024 - ஞாயிற்றுக் கிழமை

“ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்” - எசேக்கியேல் 34:12

இன்றைய நாள் இறையழைத்தல் ஞாயிறாகவும், நல்லாயன் ஞாயிறாகவும் சிறப்பிக்கப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில், இஸ்ராயேல் மக்கள் கடவுள் உறவு என்பது ஆயன் மந்தை என்னும் உருவகம் வழியாகவே விளக்கப்படுகிறது. ஆயனை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஆயனை நோக்கி வருதல், இது தான் பழைய ஏற்பாட்டு நிகழ்வு. 

கடவுள் இஸ்ராயேல் மக்களின் ஆயராக இருந்த போது அவர்கள் குறைகளை கண்டதில்லை. இதைத் தான் தாவீது அரசர் திருப்பாடல் 23இல் இவ்வாறு பாடுகிறார், “ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை”. ஆயரை விட்டு வழிமாறிய மந்தை தீமையை சந்திக்க நேருகிறது. அடிமைத்தன வீட்டிற்கு இழுத்துச் செல்லப்படுகிறது. 

கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகள் முக்கியமல்ல தனது உயிர் தான் முக்கியம். ஆனால் ஆயனுக்கு தன் மந்தையும் முக்கியம், தனது உயிரும் முக்கியம். தனது உயிரை பணயம் வைத்து ஆடுகளை காப்பாற்றுவதில் கூலிக்கு மேய்ப்பவரை விட ஆயனுக்கு அதிக ஈடுபாடு உண்டு. 

என்னதான் பார்த்து பார்த்து வளர்த்தாலும் அந்த ஆடு அடிமைவிலைக்கோ, கறிகடைக்கோ தான் செல்லும். இருந்தபோதிலும் அந்த ஆயன் வருவாயை ஈட்டி விடுவார். அங்கு இழப்பு இருக்கிறது, அதே சமயத்தில் உழைப்பின் பலன் இருக்கிறது.

இன்றைய நாளின் நற்செய்தி (யோவான் 10:11-18) வாசகத்தில் இயேசு நல்ல ஆயனாக உருவகப்படுத்தப்படுகிறார்.

ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு இந்த ஆடுகளால் பலன் உண்டு, பயன் உண்டு. ஆனால் இயேசு என்னும் ஆயனுக்கு இந்த மக்கள் என்னும் மந்தையால் என்ன பலன் உண்டு என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

“அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்” (யோவான் 6:39)

இது தான் இயேசு ஆயனாக இருந்து பெறும் பலன், பயன். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே அவர் பெறும் பலனாக இருக்கிறது.

பிரிந்து கிடக்கும் மந்தையை ஒன்று சேர்ப்பதும், மனங்களால் சிதறி கிடக்கும் மக்களை கூட்டிச் சோப்பதும் தான் இந்த ஆயனின் வேலை.

இயேசு என்னும் ஆயன் இன்று நம் வழியாக செயலாற்றப்பட வேண்டும். ஒரே ஆயனின் ஒரே மந்தையாக எல்லோரும் இணைய நாம் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு நமக்குள் இருக்கும் கட்சி மனப்பான்மை, சாதிய உணர்வுவெறி, உயர்த்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் வேறுபாடு ஆகியவை களையப்பட வேண்டும். 

இறைவார்த்தையை அறிவிப்பதனால் மட்டும் நாம் இறைவனின் திருவுளத்தை  நிறைவேற்றிவிட முடியாது, தினசரி திருப்பலியில் பங்கெடுப்பதனால் மட்டும் இறைவனின் மனம் குளிர்ந்துவிடாது. 

இறைவனை போல 

நம்மை இழந்து, 

நல்ல ஆயனாக இருந்து,

நம்பிக்கை இழந்தோரை தூக்கிவிடும்போது, 

பசித்தோருக்கு உணவளிக்கும்போது, 

வாழ்விழந்தோருக்கு வாழ்விற்கான வழியை காட்டும்போது, 

வார்த்தையிலும் செயலிலும் இறையன்பை பிரதிபலிக்கும்போது 

நாம் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் ஆயராக இருக்க முடியும். 


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...