24_04

உங்களுக்கு அமைதி உரித்தாகுக!

 

14.04.2024 - ஞாயிற்றுக் கிழமை

“இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில் ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்” - திருப்பாடல்கள் 4:8

அமைதி தேடி நெஞ்சங்கள் இங்கு அலைகிறது வீதிகளில். எனக்கு யார் அமைதி தருவார், எனக்கான அமைதி எங்கிருந்து வரும்? என்று கேட்காத உதடுகளும் இல்லை ஏங்காத உள்ளமும் இல்லை.

சில வேளைகளில் நாம் நம்பியிருக்க கூடியவை (தீய உறவுகள், கெட்ட செயல்கள்) மகிழ்ச்சி, அமைதி கொடுக்கிறது என்ற எண்ணத்தில் நாம் சிறைப்பட்டு விடுகிறோம். ஒருமுறை அடைபட்டோம் என்றால் மீண்டும் அதிலிருந்து மீண்டு வருவது கடினம் தான். சிலர் சிறைப்பட்டு சுகம் கண்டுவிடுகின்றனர், சிலர் சிறையிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். 

ஆனால் அடைப்பட்ட எல்லா உள்ளங்களும் முடங்கியே கிடப்பதில்லை. அடைப்பட்ட இடத்தில் இருந்து சிறகு (தெளிவு, தன்னம்பிக்கை) முளைக்கிறது. முளைத்த சிறகை திரும்பி பார்த்தவர்கள், அதன் ஆற்றலை உணர்ந்தவர்கள் அதன் உதவியால் சிறகடித்து பறக்கின்றனர்.

நாம் மற்றவர்களை நமக்குள் அனுமதிக்காத வரை, நம்முடைய அமைதியை யாரும் குலைக்க முடியாது. நம்முடைய அனுமதி இல்லாமல் யாரும் நம்மை தொந்தரவு செய்யவும் முடியாது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 24:35-48) சீடர்கள் தங்களுக்குள் அமைதியின்றி தவித்தனர். எனவே உயிர்த்த ஆண்டவர் அவர்களை வாழ்த்தும் செய்தி இவ்வாறாக அமைகிறது, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக”. அவர்களுக்குள் இருந்த அமைதியை எது சிதைத்தது? பயம் தான். இறந்தவர் இறந்தவராகவே போய்விடுவார், நம்மை வழிநடத்த இனி யாரும் இல்லை, நாம் தைரியமாக வெளியே செல்ல முடியாது என்ற பய ஓட்டம் அவர்களுக்குள் அதிகரித்தது.

இயேசுவை கண்ட போதிலும் அவர்கள் அச்சமுற்றவர்களாய் தான் காணப்பட்டார்கள். “ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஜயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டு பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று சொல்லி அவர்களின் அச்சத்தை போக்கி அமைதியை கொடுக்கிறார் இயேசு.

சீடர்கள் அச்சம் நீங்கி, அமைதி பெற்றார்கள். அதன்பிறகு அவர்கள் செய்ய வேண்டிய பணியை (பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட) அவர்களுக்கு நினைவுப்படுத்துகிறார் இயேசு.

இன்று நம்மிலும் அமைதியற்ற சூழல் காணப்படுகின்றது. யாரோ சொன்ன வார்த்தைகள் நம் அமைதியை சீர்குலைக்கின்றது. உண்மையில்லாத வதந்திகள் நம் நிம்மதியை சிதைக்கின்றது. இறுதிவரை உடன் இருப்பேன் என்று சொல்லி ஏமாற்றிய வார்த்தைகள் நம் அமைதியை நிலைகுலைய செய்கின்றது.

யார் நமக்கு அமைதியை தருவார்?

உலகம் தரமுடியாத அமைதியை தருபவர் இயேசு. யோவான் நற்செய்தி 14:27இல் இயேசு சொல்கிறார், “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்”.

மனிதர் எனக்கு எதிராக எத்தனையோ இழிவான செயல்களைச் செய்யலாம். என்னை அழிக்க திட்டம் தீட்டலாம். கடவுள் என் சார்பாக இருக்கும் போது எனக்கு எதிராக இருப்பவர் யார்?

எபிரேயர் 13:6 இவ்வாறு சொல்கிறது, “இதனால், நாம் துணிவோடு, “ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும்?” என்று கூறலாம்”.

அவரில் நம்பிக்கைக் கொள்வோர் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. அவரில் நம்பிக்கைக் கொள்வோர் அவர் தரும் அமைதியை பெறுவர்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...