04.04.2024 - வியாழக் கிழமை
“எழுந்து நிமிர்ந்து நில். என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே நான் உனக்குத் தோன்றினேன். நீ என்னைக் கண்டது பற்றியும் நான் உனக்குக் காண்பிக்கப் போவதைப் பற்றியும் சான்று பகர வேண்டும்” - திருத்தூதர் பணிகள் 26:16
மனிதரை நம்புவதற்கு தயக்கம் ஏற்படுகிறது. ஏற்கனவே நடந்த கசப்புணர்வினால் மீண்டும் மீண்டும் தயக்கமும் வருத்தமும் ஏற்படுகின்றது. பிறர்மீது நம்பிக்கை இல்லாத போது எப்படி மகிழ்ச்சி ஏற்படும், அவரை குறித்து வியப்பு வரும். கசப்புணர்வினால் வெறுப்புணர்வு தான் வரும்.
தனக்கு ஒருவர் செய்த நம்பிக்கை துரோகத்தை மன்னிப்பது ஒருவகை, அதை மன்னித்து மறப்பது மற்றொரு வகை. மன்னிப்பதால் மட்டும் ஒருபயனும் இல்லை, மற்றவர்களின் துரோகத்தை மன்னித்து மறக்க வேண்டும். கசப்பும் வெறுப்பும் நம் மகிழ்ச்சியை சிதைத்து விடும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 24: 35-48) இயேசு தனக்கு துரோகம் செய்தவர்களையும் தேடி செல்கிறார். அவர்களின் நம்பிக்கையின்மையை போக்குகிறார். அவர்களோடு உணவு உண்ணுகிறார். தனது காட்சியில் எந்த இடத்திலும் ஏன் எனக்கு இப்படி துரோகம் செய்துவிட்டீர்கள் என்று இயேசு கேட்கவில்லை. தவறுகளை மன்னித்து அவர்கள் செய்த செயல்களை மறந்து அவர்களை ஏற்றுக் கொள்கிறார்.
மெசியா துன்புற்று, இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை அறிவிக்கவும், பாவமன்னிப்புப் பெற மனம்மாற அழைப்பு விடுக்கவும் தன்னுடைய சீடர்களை அனுப்புகிறார்.
நம்பிக்கை துரோகம் செய்த சீடர்களின் பரிகாரம் அவர்கள் பின்னாளில் வெளிக்கொணர்ந்த சாட்சிய வாழ்வில் வெளிப்பட்டது. துன்ப வேளையில் மகிழ்ச்சியோடும், தடுமாற்றத்தில் நம்பிக்கையோடும், இயேசுவின் பெயரால் வியப்பான வல்ல செயல்களை செய்வதிலும் அது வெளிப்பட்டது.
சாட்சிய வாழ்வு சொல் வடிவில் அல்ல… செயல் வடிவில் வெளிப்பட வேண்டும்…
நம் வாழ்வில், பணியில் இயேசுவை முன்னிலைப்படுத்துவோம், இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன் வாயிலாக நாம் உயர்த்தப்படுவோம்.
No comments:
Post a Comment