06.04.2024 - சனிக் கிழமை
“நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை” - எபிரேயர் 11:1
கடவுள் மீது நம்பிக்கை, பிறர் மீது நம்பிக்கை, தன்மீது நம்பிக்கை என்று பல வழிகளில் நாம் நம்பிக்கை கொள்கிறோம். அந்த நம்பிக்கை நிலையானதாக இருக்கிறதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஒரு மனிதன் நல்வாழ்வு, நீடித்த வாழ்வு வாழ நம்பிக்கை அவசியமாக இருக்கிறது. மனிதனின் பலம் நம்பிக்கையில் இருக்கிறது என்பார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 16:9-15) இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்ப மறுத்தனர் சீடர்கள். இயேசு தங்களோடு இருந்த போது சொன்ன அந்த வார்த்தைகளை கூட அவர்கள் நினைவுக் கூறவில்லை. இயேசு இல்லையே என்று அவர்கள் துயருற்று அழுதுக் கொண்டிருந்தார்கள். இது அவர்களின் இயலாமையை சுட்டுகிறது. நம்பிக்கை அந்த அழுகையை இடமாற்றம் செய்திருக்க வேண்டும்.
ஒன்றன்பின் ஒன்றாக மற்றவர்கள் சொன்ன அந்த வார்த்தைகளின் பொருட்டாவது இயேசுவின் கூற்றையும் அவரது உயிர்த்தெழுதலையும் நம்பியிருக்க வேண்டும். சீடர்கள் கடின உள்ளத்தினராய் இருந்தார்கள். நம்பத் தயங்கினர், மறுத்தனர்.
நம்பிக்கை குறைவோடு ஒருவர் இருக்கின்றபோது நாம் செய்ய வேண்டியது என்ன? இறைவார்த்தை சொல்கிறது, “நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்” - யூதா 1:22
இன்று நம்முடைய எதார்த்த உலகில், நம்பிக்கை குறைவு அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் ஒரு சில நபர்களின் நம்பிக்கைத் துரோகம் தான். நம்பி நம்பி ஏமாந்து போனதால் அடுத்த நபர்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியா நிலை உருவாகியிருக்கிறது.
நம்பிக்கை துரோகம் ஒரு கொடிய பாவம். அன்புக்குரியவர்களிடம் பொய் சொல்லும் போது, அவர் நம்மீது வைத்த நம்பிக்கைக்கு நாம் துரோகம் செய்கிறோம்.
இயேசு நம்பிக்கைக் குன்றியவர்களை கண்டித்த போதிலும், அவர்களை மனதார மன்னித்தார். அவர்களின் நம்பிக்கையை மிகுதியாக்கினார். நம் நம்பிக்கை இறைவனில் மிகுதியாகவும், நம்பிக்கை குறைவோடு இருப்பவர்களின் வாழ்வை உயர்த்தவும் முற்படுவோம். இயேசுவின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச் சொல்வோம்.
No comments:
Post a Comment