24_04

என் கடமையைச் செய்ய…

17.04.2024 - புதன் கிழமை

"அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்" - 1 யோவான் 2:6

மனிதராய் படைக்கப்பட்ட ஒவ்வொருக்கும் கடமைகளும் உரிமைகளும் இருக்கின்றன. உரிமைகளை பெறுவதற்கு நாம் காட்டும் ஆர்வம் கடமைகளை நிறைவேற்றுவதில் இருப்பதில்லை. சில காரியங்கள் கடமைக்காக செய்யப்படுகின்றன. 

தேர்தல் காலங்களில் சிலரின் கடமையுணர்ச்சி பொங்கி வழிகிறது. (உதாரணமாக, மக்களை தேடி வருவது, முதியவர்களை சந்தித்து பணம் கொடுப்பது, குடிசையில் வாழும் மக்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்வது, சாலைகளை தூய்மைப்படுத்துவது…) தேர்தல் முடிந்ததும் நம் உரிமைகளை பெறுவதற்காக நாம் தான் ஏங்கி நிற்க வேண்டும். 

சில மனிதர்கள் போலியாக எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்றாலும் அவர்கள் பின்னாலும் ஒரு கூட்டம் நிற்க தான் செய்கிறது. போலியான வாக்குறுதிகள், போலியான பரப்புரைகள், போலியான வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் போலித்தனம். போலிகளைக் கண்டு நாமும் போலிகளாக மாறி விடுகின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:35-40) வாழ்வு தருபவராய் இருப்பவரை, தம் பணிவாழ்வில் வாழ்வு கொடுத்தவரை மக்கள் கூட்டத்தினர் ஏற்றுக் கொள்ள தயங்குகின்றனர். அடையாளங்களை கண்டிருந்தும் அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். 

இருந்தபோதிலும், தந்தை எனக்கு கொடுத்த கடமையை நிறைவேற்றவே நான் இவ்வுலகிற்கு வந்தேன் என்கிறார் இயேசு. தன் சொந்த விருப்பத்தை அல்ல தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வந்தேன் என்கிறார். இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட கடமை அல்லது பணி என்பது எவரையும் அழியவிடாமல் அனைவரையும் இறுதிநாளில் உயிர்த்தெழ செய்ய வேண்டும். மகனில் நம்பிக்கை கொள்வோர் இத்தகைய உயிர்த்தெழுதலின் வாயிலாக நிலைவாழ்வை கொண்டிருப்பர் என்பது உறுதி.

நான் இந்த உலகத்தில் படைக்கப்பட்டதன் நோக்கத்தை சரிவர நிறைவேற்றுகிறேனா? கடமைகளை கண்ணும் கருத்துமாய் செயல்படுத்துகிறேனா? என்ற கேள்விகள் நம்மில் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.

புனித அகுஸ்தினார் சொல்வார், ‘நாம் செய்ய வேண்டிய செயல்களை செய்யும்போது நாம் பாராட்டுகளை பெறுவதற்கு தகுதி அற்றவர்கள். ஏனென்றால் அது நமது கடமை’.

‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்பார்களே அது தான் நம் இலக்கு.

இயேசுவை போல கடமையை செய்வோம்… அதன் வழியாக நம் உரிமைகளை பெறுவோம்…


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...