18.04.2024 - வியாழக் கிழமை
"அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்" - 1 யோவான் 2:25
உணவில்லாமல் உயிர் வாழ முடியாது. அதே போல உணர்வு இல்லாமலும் உயிர் வாழ முடியாது. இந்த இரண்டும் ஒருவரிடம் இல்லை என்றால் அவர் இறந்தவர் போன்றவரே. மரணப் படுக்கையில் இருக்கின்றவர் திட உணவு உண்பதை நிறுத்திக் கொண்டார் என்றால் நேரம் நெருங்கி வந்து விட்டது என்பதை நாம் உணர முடியும். படுக்கையில் இருப்பவர் உணர்வில்லாமல் இருந்தார் என்றாலும் அவர் அடுத்து சுயநினைவுக்கு திரும்புவாரா என்பது சந்தேகம் தான்.
பிறர் உயிர் வாழ நாம் உணவை பகிர வேண்டும், பிறர் நல்வாழ்வு வாழ பிறரின் உணர்வை நாம் மதிக்க வேண்டும். இயேசு இவ்வுலகிற்கு உணவாக வந்தார், பிறரின் உணர்வை மதித்தார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:44-51) தந்தையை நோக்கிய ஈர்ப்பு, தந்தையிடமிருந்து கற்றுக் கொள்தல், தந்தைக்கு செவிசாய்த்தல் இவை தான் நிலை வாழ்வை பெறுவதற்கான வழிமுறைகளாக கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை மகனுக்கு சான்று பகர்கிறார், மகன் தந்தைக்கு சான்று பகர்கிறார்.
பழைய ஏற்பாட்டு பாலைவன மன்னாவும் புதிய ஏற்பாட்டு இயேசுவின் உடலும் ஒன்றல்ல. பாலைவனத்தில் மன்னாவை உண்டவர்கள் மடிந்து போனார்கள். காரணம் அது அவர்களின் உடல் பசியை மட்டும் ஆற்றியது. அனுதின உணவை அவர்கள் உண்டார்கள். அவர்கள் உண்ட உணவு அவர்களுக்கு நிலைவாழ்வு கொடுக்கவில்லை.
இயேசு தன்னையே உணவாகத் தருகிறார். அவரில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்றும் வாழ்வார்கள் (இவ்வுலகில் இறப்பு உண்டு, மறுஉலகில் நாம் செய்த செயலுக்கான, நாம் கொண்ட நம்பிக்கைக்கான கைம்மாறாக நிலைவாழ்வு உண்டு).
இயேசுவின் வார்த்தை, வாழ்வுமுறை, போதனை, தியாகம் ஆகியவை நமக்கான உணவு. அவரில் நம்பிக்கை கொள்வோர் என்றும் நிலைவாழ்வு பெறுவர்.
இயேசுவின் உடலை (நற்கருணையை) நம்ப மறுப்போருக்கு புனித அகுஸ்தினாரின் பதில், “நம்முடைய கண்கள் காண்பது சாதாரண அப்பமும் திராட்சை இரசமும் தான். அப்பத்தை இயேசுவின் உடலாகவும் திராட்சை இரசத்தை இயேசுவின் இரத்தமாகவும் ஏற்றுக் கொள்ள நமது நம்பிக்கை நமக்கு உதவுகிறது. சுருக்கமாக சொல்லப்பட்டதனால் இதை புரிந்துக் கொள்ள நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் நம்பிக்கைக்கு விளக்கம் தேவையில்லை”.
இயேசுவின் உடல் நமக்கு நலமளிக்கும், நிலைவாழ்வு கொடுக்கும்.
No comments:
Post a Comment