24_04

நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் அவரிடமே…

20.04.2024 - சனிக் கிழமை

“நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலை வாழ்வு” - உரோமையர் 6:22

வெளிப்படையாக பேசுதல், வாயுக்குள்ளே முணுமுணுத்தல் இரண்டும் ஒன்றல்ல. வெளிப்படையாக பேசுகின்ற போது அடுத்தவருக்கு தெரிய வரும், அதற்கான பதில் கிடைக்க வாய்ப்புண்டு. முணுமுணுப்பதினால் உள்மனக் காயங்கள் தான் அதிகமாகும்.

இந்த முணுமுணுப்பு தான் நம் நிம்மதியையும் மற்றவர்கள் நிம்மதியையும் கெடுத்துவிடும். வார்த்தைகள் தெளிவாகவும் கருத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:60-69) ‘இயேசு நிலைவாழ்வு அளிக்கும் உணவை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது’ இந்த பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? என்று இயேசுவை சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்கள் முணுமுணுத்து இயேசுவை விட்டு பிரிந்து சென்றனர். இயேசுவின் வார்த்தையை அவர்கள் நம்பவில்லை, அவரில் நிலைவாழ்வு உண்டு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

அந்த வேளையில் இயேசு தன் சீடர்களை பார்த்து நீங்களும் என்னை விட்டு போய்விட நினைக்கிறீர்களா? என்று கேட்கிறார். அப்போது பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்” என்கிறார். 

நம்முடைய இல்லற, துறவற வாழ்வில் முணுமுணுப்புக்கும் எரிச்சலுக்கும் இடம் கொடுத்தோம் என்றால் இருக்கிற அமைதியையும் நாம் தொலைத்துவிடுவோம். இறைவனில் நம்பிக்கையும் பணிவில் தெளிவும் வார்த்தையில் உண்மையும் இருந்தால் நிலைவாழ்வு நிச்சயம் தான். 

இவ்வுலகிலே நிலைவாழ்வை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் வார்த்தையும் வாழ்க்கையும் இணைந்து செல்ல வேண்டும்.

இயேசுவை போல, பணியிலும் பணிவிலும் பேசும் வார்த்தையிலும் கருத்தாய் இருப்போம்… அதனால் நிலைவாழ்வு நமக்கு சாத்தியமே…

பிலிப்பியர் 2:14 இவ்வாறு சொல்கிறது, “முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள்”

 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...