01.05.2024 - சனிக் கிழமை
“நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்” - மத்தேயு 7:17
தாய் தந்தையோடு இணைந்திருக்கும் போது கிடைக்கும் கனி பாசம். நண்பர்களோடு இணைந்திருக்கும் போது கிடைக்கும் கனி மகிழ்ச்சி. உறவினரோடு இணைந்திருக்கும் போது கிடைக்கும் கனி ஒன்றிப்பு.
இவற்றில் விரிசல் ஏற்படும்போது வாழ்வில் பலம் இழந்து போகிறோம். இணைந்திருக்கும் போது கிடைத்த கனிகள் இழப்பின் போது (அன்புக்குரியவர்களின் பிரிவில்) தான் கண்டுணரப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:1-8) நானே திராட்சைக் கொடி. என்னில் இணைந்திருப்போர் மிகுந்த கனி தருவார்கள் என்கிறார் இயேசு. அவருக்கு செவிக்கொடுப்போர் அவரில் இணைந்திருப்பதினால் மிகுந்த கனி தருவர். வார்த்தையை வாழ்வாக்குவது தான் இணைந்திருப்பதன் அடையாளம்.
பெயரளவில் இணைந்திருப்பவர்கள் கனி கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் கொடியோடு உள்ள உறவு நிலையிலிருந்து நீக்கப்படுவர். ஆனால் இயேசு என்னும் கொடி கிளைமீது அளவுக் கடந்த அன்பு கொண்டுள்ளது. கிளைகள் தறிக்கப்படும் முன் கனி தர வாய்ப்பு தரப்படுகிறது.
நாம் கொடியோடு இணைக்கப்பட்ட கிளையாக இருந்து கனிதர போகிறோமா? அல்லது இயேசுவின் உறவிலிருந்து விலகி நிற்க போகிறோமா?
இறை உறவிலும் மனித உறவிலும் இணைந்திருந்து மிகுந்த கனி தருவோம்… அதன் வழியாக தந்தைக்கு மாட்சி அளிப்போம்.
இன்று தொழிலாளர் புனித யோசேப்பின் திருவிழா. தன் குடும்பத்தை மிகவும் பொறுப்புடன் நடத்தி வந்தவர். தன் உழைப்பின் வழியாக மிகுந்த கனி தந்தவர். விவிலியம் சுட்டிக் காட்டும் நேர்மையாளர்.
தன் விருப்பம் துறந்து இறைவிருப்பம் நிறைவேற்றியவர். தன் வலிகளை மறைத்து பிறர் வலி சுமந்தவர். அன்னை மரியாவை ஏற்றுக் கொண்டவர். திருக்குடும்பத்தின் பாதுகாவலர்.
விவிலியத்தில் பேசப்படுபவர், ஆனால் விவிலியத்தில் ஒரு வார்த்தையும் பேசாதவர்.
இத்தகைய சிறப்புக்குரிய நம் புனிதர் யோசேப்பு உழைப்பின் மகத்துவத்தை தன் வாழ்வால் சுட்டிக் காட்டுகிறார். தன் பணியை மட்டுமல்ல இறைபணியையும் சிறப்புடன் நிறைவேற்றியவர்.
இவர் வாழ்வு நமக்கு முன்மாதிரி ஆகட்டும்… இவரை போல நாமும் கனி கொடுப்போம்.
No comments:
Post a Comment