24_04

நாம் விரும்பும் அமைதி…

 

30.04.2024 - செவ்வாய்க் கிழமை

“பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்” - திருப்பாடல்கள் 23:2

அமைதி, மகிழ்ச்சி இவையிரண்டையும் வேண்டாம் என்று சொல்லாத நபர்கள் கிடையாது. இன்றைய காலக் கட்டத்தில் மனிதன் அமைதிக்காக எங்கெங்கோ அலைந்து திரிகிறான். சக மனிதரில் கிடைக்காத அமைதியை பலவற்றிற்கு (ஊடகம், மது, கேளிக்கை…) அடிமையாகி அடைய எண்ணுகிறான் மனிதன். 

இவ்வுலகம் நிரந்தர அமைதி கொடுக்காது என்பது மனிதனுக்கு தெரியும். உடனடி நிவாரணம் கிடைத்தால் போதும் என்பதனால் மனதோடு அலைபாய்ந்துக் கொண்டிருக்கிறான். 

இவ்வுலகம் தருகின்ற அமைதி எதிர்பார்ப்பின் அடிப்படையிலே அமையும். நான் எதிர்பார்ப்பதை நீங்கள் செய்தால், நீங்கள் எதிர்பார்ப்பதை நான் செய்வேன் (Do and Receive). என்னுடைய ஆசைகள் நிறைவேறினால் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். அது தான் நம் அமைதியின், மகிழ்ச்சியின் அடிப்படையான விதியாக மாறிவிட்டது அல்லது மாற்றிவிட்டோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:27-31) ‘நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல’ என்கிறார் இயேசு. தன் தந்தையின் கட்டளையின்படி செயல்பட்ட அவர் உள்ளத்தில் அமைதியை பெற்றிருந்தார், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார். அவரில் நம்பிக்கை கொள்வோர் உள்ள அமைதியை நிறைவாக பெறுவர்.

இன்று மனிதர்கள் பலர் தங்களது ஆணவத்தால், அதிகாரத்தால், அதட்டலால் நம் அமைதியை குலைக்க பார்க்கிறார்கள். நம்முடைய பொறுமையை சோதித்து நம் அமைதியை சிதைக்கப் பார்க்கிறார்கள்.

உலகம் தரும் அமைதி அல்ல இறைஅமைதி நம் உள்ளத்தில் குடிக் கொள்ள வேண்டும்.

அமைதியை குலைக்கும் ஆணவக்காரரிடமிருந்து விலகி இருப்போம். இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதின் வழியாக நம் அமைதியை பெற்றுக் கொள்வோம்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...