24_04

மேலானவரின் மேல் நம்பிக்கை…

 

11.04.2024 - வியாழக் கிழமை

“மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும்விட உயர்ந்தது அவரது மாட்சி” - திருப்பாடல்கள் 113:4

யார் பெரியவர்? யார் சிறந்தவர்? யார் உயர்ந்தவர்? என்ற பல கேள்விகள் மனிதர்களிடம் கேட்கப்படுகின்றன. மண்ணகத்தில் ஒருவரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. உயர்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவினை மனிதர்களால் கொண்டு வரப்பட்டது. படைத்தவரை விட படைக்கப்பட்ட பொருள் உயர்ந்தது இல்லை. 

இன்று மனிதர்கள் தங்களை உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்கிறார்கள். தங்களை உயர்ந்தவர்களாக எண்ணுவது தவறில்லை, ஆனால் மற்றவர்களை தாழ்வாக எண்ணுவது மிகத் தவறு. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:31-36) மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர் என்கிறார் இயேசு. இங்கு இயேசு தன்னை பெருமைப்படுத்தவில்லை, மாறாக தனது பணி அங்கீகரிக்கப்படவில்லை என்பதை எடுத்துச் சொல்கிறார். நான் தரும் சான்றை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை, நான் கடவுளின் சார்பாக பேசுகிறேன் என்பதையும் நீங்கள் புரிந்துக் கொள்வதில்லை என்கிறார். தந்தை மகன் மீது நம்பிக்கை கொண்டு அனைத்தையும் அவரிடத்தில் ஒப்படைத்திருக்கிறார் என்பதை நீங்கள் நம்பவில்லை என்றால் நீங்கள் வாழ்வு பெற மாட்டீர்கள் என்கிறார். 

இங்கு மேலானவரை நம்புதல் என்பது அவரது வார்த்தையை ஏற்றுக் கொள்தலையும், அதன்படி நடத்தலையும் குறிக்கிறது. அவரது வார்த்தையின் படி நடப்போர் ஒருபோதும் நிலைவாழ்வை பெறாமல் போவதில்லை.

கடவுளை நாம் சார்ந்து இருக்கும்போது நாம் நம்மை உயர்வாக எண்ண மாட்டோம். தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துவோர் பிறர்மீது அக்கறை கொள்ளமாட்டார். 

இன்று சக மனிதர்கள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை கூட, நாம் இறைவன் மீது வைப்பதில்லை. இன்று நம்முடைய நம்பிக்கையெல்லாம் உடனடி பலனை (கைம்மாறை) எதிர்பார்க்கிறது. எதாவது கிடைக்குமா என்பது அல்ல நம்பிக்கை, எல்லாமே கைக்கூடும் என்பதே நம்பிக்கை.

எளிய நம்பிக்கையாக அல்ல… மேலான நம்பிக்கையாக நம் நம்பிக்கை மாறட்டும்…


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...