24_04

ஆன்ம உணவைத் தேடி...


16.04.2024 - செவ்வாய்க் கிழமை

"வயிற்றுக்காகவே ஒருவர் வேலை செய்கிறார்; ஆனால், அவருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை" - சபை உரையாளர் 6:7 

மனித வாழ்க்கையின் போராட்டமே உணவில் தான் தொடங்குகிறது. உணவு இல்லை என்றால் நாம் நிச்சயமாக வாழ முடியாது. உணவு நம்முடைய அடிப்படை தேவைகளில் ஒன்றாக இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. 

தினமும் ஒருவேளை உணவு இல்லாமல் உறங்கச் செல்லக்கூடிய மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது வருந்தத்தக்க விஷயம்.

வயிற்றை நிரப்புவது மட்டும் நம்முடைய நோக்கமாக இருந்தது என்று சொன்னால் நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாக இருக்காது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:30-35) உணவிற்காக ஒரு கூட்டம் இயேசுவை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் உம்மை கண்டு நம்புவதற்கு எங்களுக்கு அரும் அடையாளம் ஒன்றை காட்டும் என்றும் அவர்கள் சோதிக்கின்றனர். பாலைவனத்தில் எங்களுடைய முன்னோர் மன்னாவை உண்டனர் என்று அவர்கள் பழைய ஏற்பாட்டின் நிகழ்வை அங்கு நினைவுப்படுத்துகிறார்கள். 

அந்த உணவு என் தந்தை வானில் இருந்து அவர்களுக்கு கொடுத்த உணவு என்பதை இயேசு அங்கு தெளிவுப்படுத்துகிறார். வானிலிருந்து அவர் தரும் உணவை உண்போர் வாழ்வை கொண்டிருப்பர் என்கிறார் இயேசு. 

அந்த வாழ்வு தரும் உணவு நானே என்கிறார். என்னிடம் வருபவருக்கு பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொள்கிறவருக்கு தாகமே இராது என்கிறார் இயேசு.

தங்களுடைய வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள ஏதாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு அலைந்து திரிபவர்கள் ஏராளம். தேடுவதை கண்டு கொண்டால் மகிழ்ச்சி, இல்லையென்றால் வாழ்க்கை குறித்த கவலை தான் எழுகிறது. 

தேடுதல் என்பது உணவை குறித்த தேடுதலாக இருக்கலாம், உறவை குறித்த தேடுதலாக இருக்கலாம், உணர்வு சார்ந்த தேடுதலாக இருக்கலாம். உடலுக்கு ஊட்டம் தரும் உணவும் ஆன்மாவிற்கு உறுதி ஊட்டும் உணவும் நம்முடைய வாழ்க்கைக்கு அவசியம். 

என்னுடைய தேடுதல் என்பது என்னுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டும் நின்று விடாமல் என்னுடைய ஆன்மிக தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் இருக்க வேண்டும். 

கடவுள் மீது நம்பிக்கை என்பது வழிபாடுகளை நிறைவேற்றுவதில் மட்டுமல்ல வழிபாட்டை வாழ்வாக மாற்றுவதில் தான் இருக்கிறது. 

எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு எனச் சொல்கிறவர்கள் அதை தன்னுடைய செயல்களில் காட்டாவிட்டால் அந்த நம்பிக்கை என்பது பயனற்றது.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...