15.04.2024 - திங்கட் கிழமை
"சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை" - 1 கொரிந்தியர் 1:18
நம்மிடம் எல்லாம் நிறைவாக இருந்தும் நம்மிடம் இல்லாதது மற்றவரிடம் இருப்பதை நாம் கண்டோம் என்றால், அதை அடைய வேண்டும் என்று ஆவல் நம்மிடம் வந்து விடுகிறது.
இருப்பதில் நம்முடைய மனம் எப்போதும் நிறைவு கொள்வதில்லை. எதுவெல்லாம் அழிந்து போகக் கூடியதாய் இருக்கின்றதோ, எது எல்லாம் அழிவை உண்டு பண்ணக் கூடியதாக இருக்கின்றதோ அதைத்தான் நாம் விரும்பி தேடுகிறோம்.
நிலையில்லாத உலகில் நிலையற்றவைகளை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:22-29) இயேசு செய்த அரும் அடையாளத்திற்காக அன்றி, இயேசு கொடுத்த உணவிற்காக மக்கள் கூட்டம் அவரை பின் தொடர்கிறது. இயேசு அந்த மக்கள் கூட்டத்தை பார்த்து சொல்கிற பதில்,, 'அழிந்து போகும் உணவிற்காக உழைக்க வேண்டாம். நிலை வாழ்வு தரும் அழியாத உணவிற்காக உழையுங்கள்'.
இந்த உலகத்தில் நாம் சம்பாதிக்க கூடிய, நாம் வாங்கிக் கொள்ளக்கூடிய பொருட்கள் நமக்கு பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும் அல்லது மற்றவர்களுக்கு அது பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும். பயன்படாமல் பதுக்கி வைக்கப்பட கூடிய, பாதுகாக்கப்பட கூடிய பொருட்களால் எந்த பலனும் இல்லை.
நம்முடைய வாழ்க்கையில் நிலை வாழ்வு தரக்கூடியவரை நாம் முன்னிலைப்படுத்தினோம் என்று சொன்னால் இந்த அழியும் செல்வங்கள் நமக்கு ஒரு பொருட்டாக தெரியாது.. பொருட்களை எளிதாக நாம் சம்பாதித்து விடுகிறோம், உறவுகளை நம்மால் சம்பாதிக்க முடிவதில்லை. செல்வங்களை நாம் சம்பாதித்து விடுகிறோம், ஆனால் கடவுளின் அருளை நம்மால் சம்பாதிக்க முடிவதில்லை.
கடவுள் தரக்கூடிய அந்த நிலை வாழ்வை நோக்கிய பயணத்தில் நாம் அடியெடுத்து வைப்போம். அவரில் நம்முடைய நம்பிக்கையை வைப்போம்.
அழிந்து போகக்கூடிய நிலையை விடுத்து, அழியா நிலைவாழ்வை தரும் இயேசுவில் நம் நம்பிக்கையை வைப்போம்.
இறை பற்றுள்ள கருத்துக்களை தினமும் பகிரவும் நன்றி
ReplyDelete