25_04

உழைப்பே உயர்வு...


பாஸ்கா காலம் 2ஆம் வாரம்

01.05.2025 - வியாழக்கிழமை 

விவிலியம் உழைப்பின் பயனை மகத்துவத்தை தொடக்கத்திலேயே சுட்டிக் காட்டிவிட்டது. 

தொடக்க நூல் 2:3 இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, "கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்."

தொடக்க நூல் 3:19 இவ்வாறு சொல்கிறது, "நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும்வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்."

தொடக்க முதல் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் அதிகமாக காணப்படும் தொழில் விவசாயம், ஆடு மாடுகளை மேய்த்தல். அதை முன்னிட்டே அறுவடை விழா, ஜூபிலி கொண்டாட்டம் (கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உரிமையாளருக்கு கொடுக்கப்படல் என பல நிகழ்வுகள் நிலத்தை மையப்படுத்தியது தான்)

உழைத்து உண்ண வேண்டும் என்பது தண்டனையாக கொடுக்கப்பட்டாலும் அது ஒருவரின் உயர்வை, ஒருவரின் மதிப்பை காட்டுகிறது. ஒருவர் சமூகத்தில் உயர்ந்து நிற்கிறார் என்றால் அவரது உழைப்பு தான் காரணம். (இன்றையக் காலக் கட்டங்களில் குடும்ப சொத்துக்களை கொண்டு சிலர் உயர்ந்து நிற்கிறார்கள், பிறரை ஏமாற்றி உயர்ந்து நிற்கிறார்கள்).

இன்று தொழிலாளர் புனித யோசேப்பின் திருவிழா. தன் குடும்பத்தை மிகவும் பொறுப்புடன் நடத்தி வந்தவர். தன் உழைப்பின் வழியாக மிகுந்த கனி தந்தவர். விவிலியம் சுட்டிக் காட்டும் நேர்மையாளர். 

தன் விருப்பம் துறந்து இறைவிருப்பம் நிறைவேற்றியவர். தன் வலிகளை மறைத்து பிறர் வலி சுமந்தவர். அன்னை மரியாவை ஏற்றுக் கொண்டவர். திருக்குடும்பத்தின் பாதுகாவலர். 

விவிலியத்தில் பேசப்படுபவர், ஆனால் விவிலியத்தில் ஒரு வார்த்தையும் பேசாதவர். 

இத்தகைய சிறப்புக்குரிய நம் புனிதர் யோசேப்பு உழைப்பின் மகத்துவத்தை தன் வாழ்வால் சுட்டிக் காட்டுகிறார். தன் பணியை மட்டுமல்ல இறைபணியையும் சிறப்புடன் நிறைவேற்றியவர்.

இவர் வாழ்வு நமக்கு முன்மாதிரி ஆகட்டும்… இவரை போல நாமும் கனி கொடுப்போம்.

நல்லவர்கள் அதிகம் பேசமாட்டார்கள், அதிகம் பேசுபவர்கள் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்.

நம்பிக்கை என்னும் ஒளி...

பாஸ்கா காலம் 2ஆம் வாரம்

30.04.2025 - புதன் கிழமை

“உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை” - திருப்பாடல்கள் 9:10

சில அன்புக்குரியோர் உடனிருந்தாலே, மலையை பிளக்கக்கூடிய ஆற்றல் நம்மிடம் இருப்பது போல இருக்கும். அன்புக்குரியவர் தரும் நம்பிக்கையும் நேர்மறை சிந்தனைகளும் நம்மை எப்பொழுதும் தாங்கும். “நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள்” என்கிறது சீராக்கின் ஞான நூல் 6:14.

இன்றையக் காலக் கட்டத்தில் நம்பிக்கை கொண்டதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

சாதாரண மனிதர்களிடம் இருக்கிற நம்பிக்கையே இவ்வளவு ஆற்றல்மிக்கது என்றால், இறைவனில் நாம் நம்பிக்கை கொண்டிருந்தால் இன்னும் ஆற்றலை நாம் அதிகமாக பெற முடியும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:16-21) தன்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை என்கிறார் இயேசு கிறிஸ்து. இறைவனில் கொள்ளும் நம்பிக்கை நம்மை தண்டனைத் தீர்ப்பிலிருந்து காக்கும். எப்படி நம்பிக்கை நம்மை காக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது! நற்செய்தி தெளிவுப்படுத்துகிறது. “உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்” (யோவான் 2:21)

கடவுளில் நம்பிக்கை கொள்வோர் கடவுள் காட்டும் ஒளியில் நடப்பர், கடவுள் காட்டும் ஒளியில் நடப்போர் தண்டனைத் தீர்ப்பு பெறமாட்டார்கள். தீங்கு செய்வோருக்கு கடவுள்மீது நம்பிக்கை கிடையாது. அவர்கள் செல்வ மிதப்பில் இருப்பதனால் கடவுள் துணை அவர்களுக்கு தேவையில்லை என்று எண்ணுகிறார்கள்.

இன்று இறைவனில் நாம் கொள்ளும் நம்பிக்கை நமக்கு நலமான வாழ்வை கொடுக்கிறது. அவருடைய வார்த்தை பலம் இழந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கை என்னும் வாழ்வு கொடுக்கிறது. 

ஒளி இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும். ஒளி நல் வழி காட்டும். ஒளியை நோக்கி வருதல் இறைவனை சார்ந்து இருக்கும் நிலையை சுட்டுகிறது.

இறைவனில் இணைந்து ஒளியை நோக்கி பயணிப்போம். அதனால் உலகு நம்மை (நாம் செய்யும் நன்மையை) வெறுக்கலாம். நன்மை செய்வதால் (நம்பிக்கை கொள்வதால்) நாம் இறைவனால் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை.

எல்லாருக்கும் எல்லாம் தெரிவதில்லை...


பாஸ்கா காலம் 2ஆம் வாரம்

29.04.2025 - செவ்வாய்க் கிழமை 

தெரிந்தது சில தெரியாதது பல. ஆனால் எல்லாம் தெரிந்தது போல காட்டிக் கொள்ளும் அவலநிலை தான் நம்மில் அதிகம் பேருக்கு உண்டு.

கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்று சொல்வார்கள். அதே போல தான் தெரிந்தது குறைவாக இருந்தாலும் அதை கொண்டே தங்கள் ஆளுமைகளை நிலை நிறுத்திக் கொள்ள எண்ணுவோர் பலராக இருக்கிறார்கள்.

தெரியாததை தெரியாது என்று சொல்லும் போது தான் புதியதை தெரிந்துக் கொள்ள முடியும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3: 7-15) இயேசு நிக்கதேமிடம் கூறியது: “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது (மறுபடியும் பிறக்க வேண்டும்) தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். 

நிக்கதேமு கற்றவராய் இருந்தாலும் இயேசு கூறியது அவருக்கு விளங்கவில்லை. புரிந்துக் கொள்ள அவர் விரும்பவில்லை என்றும் சொல்லலாம்.

கொஞ்சம் படித்தால் போதும் தலைக்கனம் தலைக்கு வந்து விடுகிறது. பெற்றுக் கொண்ட அறிவு மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும். 

எனக்கு எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, அதற்காக புதிதாக கற்றுக் கொள்ளாமல் இருக்கவும் கூடாது. 

எல்லாம் தெரிந்தது போல காட்டிக் கொள்ளாமல் இருப்பதே நமக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.

புதுப்பிறப்பு பெற...


பாஸ்கா காலம் 2ஆம் வாரம்

28.04.2025 - திங்கள் கிழமை

“ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும்” - கொலோசையர் 3:9,10

மறுபடியும் பிறப்பது ஒருவரால் இயலாத காரியம். ஆனால், பிறப்பை புதுப்பிறப்பாய் மாற்றுவது நமது கையில் இருக்கிறது. புதுப்பிறப்பாய் மாறுவது என்பது தன்னுடைய இயலாமையிலிருந்தும் தன்னுடைய நிலையிலிருந்தும் மீண்டு வருவது.

அவர்களை போல நான் இல்லையே, எனக்கு திறமையே இல்லையே, என்னுடைய எண்ணங்கள் எல்லாம் எதிர்மறையாகவே இருக்கிறது, என்னுடைய முன்னேற்றத்தை என் கண்கள் எப்போது காணும்? என்னைப் போன்றோர்கள் எல்லோரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் நான் மட்டும் இப்படி இருக்கிறேன் என்று பலர் தங்களை குறித்து, இவ்வாறு வருத்திக் கொள்வது உண்டு.

இப்படி எண்ணுவதால் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை, ஒரு முன்னேற்றத்தையும் நாம் காண போவதில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:7-15) இயேசு நிக்கதேமிடம் ‘மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என்று சொல்கிறார். நிக்கதேமுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது, ஏற்கனவே பிறந்துவிட்ட நான் எப்படி மறுபடியும் பிறக்க முடியும்.

நிக்கதேமின் கேள்வி சரியாகத் தான் தோன்றுகிறது. ஆனால் இயேசு இங்குக் குறிப்பிடும் ‘மறுபடியும் பிற’ என்பது உடலின் மாற்றத்தை குறிப்பது அல்ல மாறாக, உள்ள இயல்பின் மாற்றத்தை குறிப்பது. பழைய மனித இயல்புகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

இன்று நம்மிடம் இருக்கக் கூடிய நம்மைக் குறித்த\மற்றவர்களைக் குறித்த தவறான எண்ணங்கள், இயல்புகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவை நீக்கப்படவில்லை என்றால் நம்மில் இயங்கும் இறைவனை நாம் கண்டு கொள்ள இயலாது. இயேசுவின் வார்த்தையும் நம்மில் தங்காது.

பழைய இயல்புகள் மாறட்டும்… புதுவாழ்வு தொடரட்டும்…

இரக்கத்தை பொழியும் இறைவன்...


பாஸ்கா காலம் 2ஆம் ஞாயிறு 

27.04.2025 - ஞாயிற்றுக் கிழமை

“நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்” - யோவான் 10:10

இன்று பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு. இது இறைஇரக்கத்தின் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. தன்னுடைய சீடர்களுக்கு தொடர்ந்து காட்சியின் வழியாக தன்னை வெளிப்படுத்தி, தன்னுடைய இரக்கத்தை பொழிகிறார் இயேசு. 

இயேசுவின் சீடர்களுக்கு சில கேள்விகள் இருந்திருக்கும்… இதுவரை இயேசுவை சார்ந்திருந்தது போதும், இனி இவரால் நமக்கு என்ன பயன்? இவர் திரும்பி வருவாரா? இதனால் தான் ஒருவர் சொல்லும் சாட்சியத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்றைய காலக்கட்டத்தில் நம்மிலும் சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன. கடவுளை ஏன் நம்ப வேண்டும்? கடவுளுக்கு அஞ்சுவதனால் என்ன பயன்? கடவுள் நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை அந்த அளவுக்கு உயர்ந்ததாக தெரியவில்லையே? கடவுள் இருக்கிறார் என்றால் நாம் வாழும் இந்த பூமியில் இத்தனை பிளவுகள் தேவையா? கடவுள் பெயரால் தானே இத்தனை பாகுபாடுகள் இங்கு நிலவுகிறது என்ற எண்ணங்களும் கேள்விகளும் கடவுளை மறக்கடிக்கச் செய்கின்றன.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் ஒன்றை மறந்துவிடக் கூடாது. நம்மை இயக்கக் கூடிய சக்தி இவ்வுலகில் உண்டு. கடவுள் தன்னில், பிறரில், இயற்கையில் செயலாற்றுவதை சிலர் கண்டுக் கொள்கிறார்கள். சிலர் கண்டும் உணர்வதில்லை.

கடவுள் நம்முடைய சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை (நம்முடைய சுதந்திரத்தில் எல்லா வேளையிலும் குறுக்கிட்டார் என்றார் நாம் நாமாக இயங்க முடியாது). அவர் நம்மை இயக்கும் சக்தி தான் ஆனால் நம் சுதந்திர போக்கின்படி செயல்பட நம்மை அனுமதிக்கிறார். கடவுளுக்கு நம்முடைய ஒவ்வொரு அசைவும் தெரியும். நாம் செய்தவை, செய்கிறவை, செய்யப் போறவை எல்லாம் அவர் அறிவார். 

புனித அகுஸ்தினார் சொல்வார், ‘உன்னையன்றி உன்னை படைத்தவர், உன் துணையின்றி உன்னை மீட்க மாட்டார்’.

நம்மை அவர் மீட்க, நம்முடைய முழு ஒத்துழைப்பு அவருக்கு தேவை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 20:19-31) இயேசுவோடு இருந்தவர்களே இயேசுவையும் அவரது உயிர்ப்பையும் நம்ப மறுக்கிறார்கள். அச்சத்தோடு வாழ்ந்தவர்களுக்கு முன் இயேசு தோன்றி அவர்களுக்கு அமைதியை கொடுத்து அவர்களின் அச்ச உணர்வை போக்குகிறார். தூயஆவியைக் கொடுத்து பணிவாழ்வு புரிய அழைப்பு விடுக்கிறார். இயேசுவின் உயிர்ப்பு சீடர்களின் பணி வாழ்வுக்கான தொடக்க புள்ளி. 

இயேசு தோன்றும் போது, சீடர்களுள் ஒருவரான திதிம் என்னும் தோமா அவர்களோடு இல்லை. சீடர்கள் இயேசு தங்களுக்கு காட்சிக் கொடுத்ததை அவரிடம் சொன்ன போது அவர் அதை நம்பவில்லை. மீண்டும் இயேசு எட்டு நாள்களுக்குப் பின் தன்னுடைய சீடர்களுக்கு காட்சித் தருகிறார். தோமா அப்போது அவர்களோடு இருக்கிறார். சந்தேகத்தை நீக்கிக் கொள்ள, “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்கிறார் இயேசு. 

சந்தேகம் அடைந்த தோமாவுக்கு இப்போதோ தயக்கம் ஏற்படுகிறது. அவ்வளவு வீராப்போடு பேசியவர் இப்போது கூனிக் குறுகி நிற்கிறார். 

நம்மிலும் பலர் இப்படி உண்டு. கண்ணால் கண்டால் மட்டுமே கடவுளை நம்புவேன் என்று சொல்வோரும் உண்டு. ஒருவகையில் புனித தோமாவின் சந்தேகத்தால் நாம் இன்று திடப்பட்டு நிற்கின்றோம். நாம் இறைவன்மீது முழு நம்பிக்கை கொள்ள புனித தோமா ஒரு காரணம்.

தம் பணியை தொடர இயேசு தம் சீடர்களுக்கு பணித்தார். இன்று அதே பணிப்பகிர்வு நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நம்பிக்கை குறைவுள்ளோரிடம் நம்பிக்கையை மிகுதியாக்கவும், வாழ்வு இழந்து காணப்படுவோரிடம் அவர்கள் புதுவாழ்வு பெற உழைக்கவும் நாம் முன்வர வேண்டும். இப்படி செய்யும் போது நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை மற்றவரை சென்றடையும். நம்பிக்கையினால் புதுவாழ்வு மலரும்…

நம்பிக்கை குறைவுக்கு மருந்து இரக்கம்

பாஸ்கா எண் கிழமை - சனி

26.04.2025 - சனிக் கிழமை

“நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை” - எபிரேயர் 11:1

கடவுள் மீது நம்பிக்கை, பிறர் மீது நம்பிக்கை, தன்மீது நம்பிக்கை என்று பல வழிகளில் நாம் நம்பிக்கை கொள்கிறோம். அந்த நம்பிக்கை நிலையானதாக இருக்கிறதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 

ஒரு மனிதன் நல்வாழ்வு, நீடித்த வாழ்வு வாழ நம்பிக்கை அவசியமாக இருக்கிறது. மனிதனின் பலம் நம்பிக்கையில் இருக்கிறது என்பார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 16:9-15) இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்ப மறுத்தனர் சீடர்கள். இயேசு தங்களோடு இருந்த போது சொன்ன அந்த வார்த்தைகளை கூட அவர்கள் நினைவுக் கூறவில்லை. இயேசு இல்லையே என்று அவர்கள் துயருற்று அழுதுக் கொண்டிருந்தார்கள். இது அவர்களின் இயலாமையை சுட்டுகிறது. நம்பிக்கை அந்த அழுகையை இடமாற்றம் செய்திருக்க வேண்டும். 

ஒன்றன்பின் ஒன்றாக மற்றவர்கள் சொன்ன அந்த வார்த்தைகளின் பொருட்டாவது இயேசுவின் கூற்றையும் அவரது உயிர்த்தெழுதலையும் நம்பியிருக்க வேண்டும். சீடர்கள் கடின உள்ளத்தினராய் இருந்தார்கள். நம்பத் தயங்கினர், மறுத்தனர்.

நம்பிக்கை குறைவோடு ஒருவர் இருக்கின்றபோது நாம் செய்ய வேண்டியது என்ன? இறைவார்த்தை சொல்கிறது, “நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்” - யூதா 1:22

இன்று நம்முடைய எதார்த்த உலகில், நம்பிக்கை குறைவு அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் ஒரு சில நபர்களின் நம்பிக்கைத் துரோகம் தான். நம்பி நம்பி ஏமாந்து போனதால் அடுத்த நபர்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியா நிலை உருவாகியிருக்கிறது.

நம்பிக்கை துரோகம் ஒரு கொடிய பாவம். அன்புக்குரியவர்களிடம் பொய் சொல்லும் போது, அவர் நம்மீது வைத்த நம்பிக்கைக்கு நாம் துரோகம் செய்கிறோம். 

இயேசு நம்பிக்கைக் குன்றியவர்களை கண்டித்த போதிலும், அவர்களை மனதார மன்னித்தார். அவர்களின் நம்பிக்கையை மிகுதியாக்கினார். நம் நம்பிக்கை இறைவனில் மிகுதியாகவும், நம்பிக்கை குறைவோடு இருப்பவர்களின் வாழ்வை உயர்த்தவும் முற்படுவோம். இயேசுவின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச் சொல்வோம்.

பெற்றுக் கொண்ட அழைப்பில் நிலைத்து நிற்க...


பாஸ்கா எண் கிழமை - வெள்ளி

25.04.2025 - வெள்ளிக் கிழமை

“இயேசு அவரை நோக்கி, கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல என்றார்” - லூக்கா 9:62

திரும்பிப் பார்க்கிறவர் தகுதியுள்ளவர் அல்ல என்ற சொல் துறவற வாழ்வுக்கு மட்டுமல்ல, இல்லற வாழ்வுக்கு பொருந்தும். துறவற நிலை, திருமண நிலை இரண்டும் இறைவனின் பணியை தொடர்ந்து ஆற்றுவதற்கான பணித்தளங்களே. கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று இயேசுவே கூறியிருக்கிறார். 

இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் என்னும் கலப்பையை பிடித்தவர்கள் திருமணப்பந்தத்தை இறுதிவரை காப்பாற்றிக் கொள்ளமுடியா நிலையில் இருக்கிறார்கள். கோபம், ஆணவம், செருக்கு, தலைக்கணம் மற்றொருவரை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு தடையாக இருக்கிறது. பேசப்பட்ட ஒரு வார்த்தைக்காக விவாகரத்து என்ற நிலைக்கு வந்தவர்களும் உண்டு. கடவுள் கொடுத்த வாழ்வை சிறு பிரச்சினைக்காக அழித்தவர்களும், அழிக்க காரணமாய் இருந்தவர்களும் உண்டு. 

அதேபோல துறவற வாழ்வில், கிறிஸ்து கொடுத்த அழைப்பையும் மேன்மையையும் இழந்தவர்களும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தகுதியற்றவர்களாய் மாறியதும் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 21:1-14) இயேசுவின் சீடர்களுக்கும் அதே நிலை தான் ஏற்பட்டது. இயேசுவோடு இருந்தவர்கள், இயேசுவின் இறப்பிற்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எண்ணுகிறார்கள். பேதுரு மற்ற சீடர்களிடம், ‘நான் மீன்பிடிக்கப் போகிறேன்’ என்றார், உடனே மற்ற சீடர்களும் ‘நாங்களும் உம்மோடு வருகிறோம்’ என்று சொல்லி படகில் ஏறினார்கள். சீடர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மறந்து விட்டனர், தாங்கள் சான்று பகர வேண்டும் என்பதை மறுத்து விட்டனர். நற்செய்தி பதிவு செய்கிறது, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு மூன்றாம் முறையாகத் தம் சீடர்களுக்கு தோன்றினார். 

இத்தனை காட்சிகள் கொடுத்தும் அவர்கள் உறுதிப்படவில்லை. முன்னோக்கி செல்ல வேண்டியவர்கள், நிலைதடுமாறி பின்னோக்கி பார்க்க ஆரம்பித்தனர். 

முன்னோக்கி செல்ல வேண்டிய குடும்ப வாழ்க்கை இன்று பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. திருமணத்திலும் துறவறத்திலும் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. 

நம் நிலை என்ன? கலப்பையில் வைத்திருக்கின்ற நமது கை, கடவுளின் பணியை நிறைவு செய்கின்றவரை எடுக்கப்படாமல் இருக்கின்றதா? என்பதை சிந்திப்போம். 

அழைப்பின் மேன்மையை அழித்துவிடாமல்\இழந்துவிடாமல் காப்போம்.

மறதி மகிழ்ச்சியை கொடுக்கும்...


பாஸ்கா எண் கிழமை - வியாழன் 

24.04.2025 - வியாழக் கிழமை

“எழுந்து நிமிர்ந்து நில். என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே நான் உனக்குத் தோன்றினேன். நீ என்னைக் கண்டது பற்றியும் நான் உனக்குக் காண்பிக்கப் போவதைப் பற்றியும் சான்று பகர வேண்டும்” - திருத்தூதர் பணிகள் 26:16

மனிதரை முழுமையாக நம்புவதற்கு தயக்கம் ஏற்படுகிறது. ஏற்கனவே நடந்த கசப்புணர்வினால் மீண்டும் மீண்டும் தயக்கமும் வருத்தமும் ஏற்படுகின்றது. பிறர்மீது நம்பிக்கை இல்லாத போது எப்படி மகிழ்ச்சி ஏற்படும், அவரை குறித்து வியப்பு வரும். கசப்புணர்வினால் வெறுப்புணர்வு தான் வரும்.

தனக்கு ஒருவர் செய்த நம்பிக்கை துரோகத்தை மன்னிப்பது ஒருவகை, அதை மன்னித்து மறப்பது மற்றொரு வகை. மன்னிப்பது மட்டும் போதாது, மற்றவர்களின் துரோகத்தை மன்னித்து மறக்க வேண்டும். கசப்பும் வெறுப்பும் நம் மகிழ்ச்சியை சிதைத்து விடும். மன்னிப்பும் மறப்பும் நமக்கு உள்ள அமைதியை கொடுக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 24: 35-48) இயேசு தனக்கு துரோகம் செய்தவர்களையும் தேடி செல்கிறார். அமைதி உரித்தாகுக! என்று சொல்கிறார். அவர்களின் நம்பிக்கையின்மையை போக்குகிறார். தன்னுடைய கைகளையும் கால்களையும் காட்டுகிறார். அவர்களோடு உணவு உண்ணுகிறார். 

தனது காட்சியில் எந்த இடத்திலும் ஏன் எனக்கு இப்படி துரோகம் செய்துவிட்டீர்கள் என்று இயேசு கேட்கவில்லை. தவறுகளை மன்னித்து அவர்கள் செய்த செயல்களை மறந்து அவர்களை ஏற்றுக் கொள்கிறார். 

மெசியா துன்புற்று, இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை அறிவிக்கவும், பாவமன்னிப்புப் பெற மனம்மாற அழைப்பு விடுக்கவும் தன்னுடைய சீடர்களை அனுப்புகிறார். 

நம்பிக்கை துரோகம் செய்த சீடர்களின் பரிகாரம் அவர்கள் பின்னாளில் வெளிக்கொணர்ந்த சாட்சிய வாழ்வில் வெளிப்பட்டது. துன்ப வேளையில் மகிழ்ச்சியோடும், தடுமாற்றத்தில் நம்பிக்கையோடும், இயேசுவின் பெயரால் வியப்பான வல்ல செயல்களை செய்வதிலும் அது வெளிப்பட்டது.

சாட்சிய வாழ்வு சொல் வடிவில் அல்ல… செயல் வடிவில் வெளிப்பட வேண்டும்…

நம் வாழ்வில், பணியில் இயேசுவை முன்னிலைப்படுத்துவோம், இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன் வாயிலாக நாம் உயர்த்தப்படுவோம். 

செய்த தவறுக்கு மன்னிப்பும் குற்றம் புரிந்தவர்களை மன்னித்து அவர்கள் செய்தவற்றை மறத்தலும் நமக்கு உள்ள மகிழ்ச்சியை கொடுக்கும். 

புரிந்துக் கொள்ள நேரம் தேவை

பாஸ்கா எண் கிழமை - புதன் 

23.04.2025 - புதன் கிழமை

இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி பேசுகிறோம், ஆனால் நம்முடைய உள்ளம் அவருடைய உயிர்ப்பினால் பற்றியெரிகிறதா? விதையாக விழுந்த இயேசு விடியலாக உயிர்த்தெழுந்தார். அவரின் உயிர்ப்புப் பலருக்கு புதிரே…

விதை மடிந்து விட்டது என்று எண்ணியவர்கள் பரிசேய சதுசேய கூட்டம் மட்டுமல்ல, மாறாக இயேசுவின் அன்புச் சீடர்களும் தான். 

இனி இயேசுவை காணவே முடியாது என்று எண்ணியவர்களின் உள்ளங்களில் எல்லாம் ஒளி அணைந்துக் கொண்டிருந்தது. அந்த தருணங்களில் தான் இயேசுவின் காட்சி ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது. ஒருவருடைய சாட்சியத்தை மற்றொருவர் ஏற்கவில்லை, தயங்கினார்கள். ஆனால் இயேசு உயிரோடிருக்கிறார் என்ற துளிர் அவர்கள் நடுவே முளைக்க ஆரம்பித்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 24:13-35) எம்மாவு செல்லும் வழியில் இருவரின் உள்ளம் இயேசுவின் உடனிருப்பால் பற்றி எரியும் நிகழ்வை வாசிக்க கேட்கிறோம். ‘வழிநெடுகிலும் நீங்கள் பேசிக்கொண்டிருப்பது என்ன? என்று இயேசு கேட்டதும், அவர்கள் பதில், ‘எருசலேமில் தங்கியிருப்பவருள் உமக்கு மட்டும்தான் இந்நாளில் நிகழ்ந்தவை தெரியாதோ!... நாசரேத்து இயேசுவைப் பற்றியே பேசுகின்றோம்’ என்று இயேசுவோடு இயேசுவை பற்றி பேசினார்கள்.

இறைவார்த்தையும் இறைஉணவும் பகிரப்பட்ட போது அந்த இருவர் இயேசுவை இன்னாரென்று அறிந்துக் கொண்டனர். அவர்கள் உள்ளம் பற்றியெரிந்தது.

நம்முடைய எதார்த்த வாழ்வில், உடனிருப்பவர்களின் உள்ளம் பல வேளைகளில் நம்மோடு ஒன்றிப்போவதில்லை. அவர்கள் நம்மைவிட்டு பிரிந்த பிறகு அவர்களின் நினைவுகள் நம்மைவிட்டு விலகுவதில்லை. நெருக்கமானவரின் நினைவலைகள் நம்மில் பற்றியெரிந்துக் கொண்டிருக்கும். (இருக்கும்போது அன்பு புரியாது)

இயேசுவை தெரியும் என்பது முக்கியமல்ல, இயேசுவை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறோம் என்பது தான் முக்கியம்.

அயலாரை புரிய முற்படும் போது இறைவனை புரிந்துக் கொள்ளலாம்... (புரிய முற்படுதல் பல நேரங்களில் காயப்படுத்தும்).

இயேசுவை அடுத்தவரில்\அடுத்தவரின் நலனில் கண்டோம் என்றால் ஒவ்வொரு நாளும் உயிர்ப்பின் நாளே! ஒவ்வொரு நாளும் புதுப்பொலிவின் நாளே!

அழுகையிலும் தொடர் தேடல்...

பாஸ்கா எண் கிழமை - செவ்வாய்

22.04.2025 - செவ்வாய்க் கிழமை

“அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில், நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை" - எரேமியா 31:9

ஒவ்வொரு அழுக்கைக்கு பின்னும் ஒருவிதமான எதிர்பார்ப்பு இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் மகிழ்ச்சி. நிறைவேற காலம் எடுத்தால் வருத்தம். 

சிலர் அழுகையோடு வாழ்க்கையை தொடர்கிறார்கள், அழுகையோடு நிறைவு செய்கிறார்கள். சிலர் அழுகையோடு தேடும்போது மகிழ்ச்சியைக் கண்டுக் கொள்கிறார்கள். 

சில அழுகைகள் இழப்பை தாங்க முடியாமல் வருகிறது. சில அழுகை அன்புக்குரியோரின் நிராகரிப்பினால் வருகிறது, சில அழுகை ஏமாற்றத்தை தாங்க முடியாமல் வருகிறது, சில அழுகை ஆனந்தக் களிப்பினால் வருகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 20:11-18) மரியா இயேசுவை பார்க்க கல்லறைக்கு அழுதுக் கொண்டே செல்கிறார், அழுதுக் கொண்டே கல்லறையை குனிந்து பார்க்கிறார். அவரது அழுகை இயேசுவை காணவில்லை என்பதே. அவரது அழுகையின் நிறைவில் இயேசுவைக் கண்டுக் கொள்கிறார், ஆனால் அறிந்துக் கொள்ளவில்லை. இயேசுவை தோட்டக்காரர் என்று எண்ணுகிறார். ‘மரியா’ என்று இயேசு அழைத்ததும், மரியா இயேசுவைப் பற்றிக் கொள்கிறார். அழுகை மகிழ்ச்சியாக ஆர்ப்பரிப்பாக மாறியது. அந்த மகிழ்ச்சி அறிவிப்பாக மாறியது. 

அழுகையோடு தேடியவர் இயேசுவை கண்டுக் கொண்டார். அழுகை மகிழ்ச்சியாக மாறியது. இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்று சீடரிடம் அறிவித்தார். 

ஒவ்வொரு அழுகைக்கும் பதில் உண்டு, முடிவு உண்டு. அதற்கு நாம் தேட வேண்டும். சோகத்திலும், வேதனையிலும் துவண்டு போகாமல் தொடர் பயணத்தில் ஈடுபடுவோம். அதனால் அக்களிப்போம்.

இயேசுவின் உயிர்ப்பை நம்புவோம்...


பாஸ்கா எண் கிழமை - திங்கள்

21.04.2025- திங்கள் கிழமை

“உங்கள் உள்ளம் தளராதிருக்கட்டும்; நாட்டில் உலவும் வதந்திகளைக் கேட்டுக் கலங்காதீர்கள்” எரேமியா 51:46

உலகில் உண்மையை மறைப்பதற்கு பல வதந்திகள் அல்லது பொய்யுரைகள் பரப்பப்படுகின்றன. இறுதியில் எது உண்மை? எது பொய்? என்று கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு அது போய்விடுகிறது.

நல்லவர்களை பொல்லாதவர்கள் என்று சித்தரித்து காட்டுவதற்கு பயன்படும் ஆயுதமே இந்த வதந்தி. உண்மையை மறைக்கும் கொடிய கொலைக் கருவி வதந்தி. ‘உண்மை உடனுக்குடன்’, ‘உள்ளது உள்ளப்படியே’, ‘உண்மையின் உரைக்கல்’ என்று பல்வேறு விளம்பரங்கள் செய்தித்தாளுக்கோ அல்லது தொலைக்காட்சி செய்திகளுக்கோ கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை எல்லா வேளையிலும் உண்மையை பரப்புவதில்லை, உண்மைச் சம்பவத்தை படம் பிடித்துக் காட்டுவதில்லை.

அவர்கள் உண்மையை எடுத்துரைத்தால், அவர்கள் கண்டிக்கப்படுவார்கள், அவர்களுடைய உரிமம் ரத்துச் செய்யப்படும். எனவே தங்களை காப்பாற்ற சில வதந்திகள், பொய்யுரைகள் பரப்படுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (மத் 28:8-15) இயேசுவின் உயிர்ப்பை குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன. தலைமைக் குருக்கள், மூப்பர்கள் இணைந்து படைவீரருக்கு பணம் கொடுத்து, உண்மையை மாற்றி பேச சொல்கிறார்கள். நற்செய்தி பதிவு செய்கிறது, அன்று பரப்பப்பட்ட வதந்தி இன்று வரை யூதரிடையே பரவியிருக்கிறது. 

ஒரு தடவை பரப்பப்படும் வதந்தி, காலந்தோறும் நிலைத்திருக்கும் என்பதற்கு இது உதாரணம். நீதிமொழிகள் நூல் 24:28 சொல்கிறது, “தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே; உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே.” உண்மையை திரித்துக் கூறி அடுத்தவர் வாழ்வை சிதைப்பது பாவம்.

இயேசுவின் உயிர்ப்பில் பங்கெடுக்கிறோம். நாம் உண்மையை உண்மையென்று உரைக்கும் இயேசுவின் விழுமியங்களை நமதாக்கி, அவரை பிரதிபலிப்போம். நாம் உண்மையை உலகறிய தந்தியடிப்போம்… பொய்யெனும் வதந்தியை முறியடிப்போம்…

உயிர்ப்பில் மகிமை பெற்ற இரவு...


ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா காலம் 

20.04.2025 - ஞாயிற்றுக் கிழமை 

ஒரு பாரம்பரியமான கிறிஸ்தவ கிராமத்தில் உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டங்கள் நடைபெற அனைத்தும் ஆயத்தமாக இருந்தது. திருப்பலி தொடங்குவதற்கு 2 மணி நேரம் மட்டும் இருந்தது. அந்த நேரத்தில் உயிர்த்த ஆண்டவர் சுரூபம் ஜோடனை செய்வதற்கு எடுத்து வரப்பட்டது. தவறுதலாக சுரூபம் கீழே விழுந்து உடைந்து விட்டது.

என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. பார்ப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும் அந்த சுரூபம். இன்னும் பூசை தொடங்க கொஞ்ச நேரம் தான் இருக்கு. என்ன செய்யுறது? என்று எல்லோரும் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். கடைசில ஒரு யோசனை தோணுச்சு. ஒரு பையன கடைசியாக உயிர்த்த ஆண்டவரா நடிக்க வைக்க முடிவு பண்ணினாங்க... இது வெளிய உள்ள யாருக்கும் தெரியாது. அந்த பையனுக்கு ஒரே பயம், சரின்னு சொல்லிட்டான். 

உன்னதங்களிலே கீதம் பாடப்பட இருந்தது. திரை விலக்கப்பட்டது. நடுக்கத்தில் இருந்த பையன் கொஞ்ச நேரம் நின்னு பார்த்தான். நிற்க முடியல பொதுக்கடின்னு கீழே விழுந்துட்டான். உடனே கூட்டத்தில் இருந்த ஒரு பாட்டி, "ஐய்யோ! உயிர்த்த ஆண்டவர் கீழே விழுந்துட்டாரு ஆண்டவர் கீழே விழுந்திட்டாரு, காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று கத்திட்டாங்க...

அதுக்கு பிறகு அந்த பையன மறுபடியும் தூக்கி நிறுத்திய பிறகு தான் அந்த பாட்டிக்கு உசுரே வந்துச்சு.

உயிர்ப்பில் மகிமைபெற்ற இரவு இது தான். இந்த இரவில் விழுந்து உயிர்ப்பில் எழ வேண்டும்.

ஓர் இரவு மகிமை பெற்றது என்றால் அது இயேசுவின் உயிர்ப்பினால் தான். பாஸ்கா புகழுரையில் இடம் பெறும் வாக்கியங்கள் இது, "ஒ மெய்யாகவே பேறுபெற்ற இரவே பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்!

இரவு பகல் போல் ஒளிபெறும்; நாள் மகிழ்வுற இரவும் ஒளிதரும் என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.

ஆகவே புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி தீமையை ஒழிக்கின்றது, குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது;

தவறினோருக்கு மாசின்மையையும் துயருற்றோருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது;

பகைமையை விரட்டுகின்றது, ஆணவத்தை அடக்குகின்றது; மன ஒற்றுமையை உருவாக்குகின்றது".

ஒரு இரவு இவ்வளவு மேன்மைக்குரியதாய் மாறியது என்றால் ஒருவரின் உயிர்ப்பினாலே தான்.

இயேசுவினுடைய உயிர்ப்பைக் கொண்டாடுகிறோம். ஆனால் உயிர்ப்பின் விழுமியங்களை மறந்து விடுகிறோம்.

இறப்பை நினைவுக் கூறுகிறோம், அதன் தியாகத்தை மறந்து விடுகிறோம்.

அடையாளங்களை முன்னிறுத்துகிறோம், ஆனால் அர்த்தத்தை இழந்து விடுகிறோம்.

இயேசுவின் உயிர்ப்பின் அர்த்தம் எங்கே போய் விட்டது? என்பதை இந்த இரவு நம்மை பார்த்துக் கேட்கிறது.

ஒரு இரவு பகல் போல் ஒளி பெறும் போது பழைய வாழ்வு புதிய வாழ்வாக மாற வேண்டும் என்பது இந்நாள் நமக்கு உணர்த்தும் சிந்தனை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 24:1-12) ஒளி பெறா இருளில் இருக்கக் கூடிய நபர்களை பார்க்கின்றோம். சில பெண்கள் நறுமணப் பொருட்களை கொண்டு கல்லறைக்கு செல்கிறார்கள், அங்கு நடந்தவற்றை குறித்து வியப்பும் குழப்பமும் அடைகிறார்கள். 

கல்லறையில் தங்களுக்கு சொல்லப்பட்டதை மற்ற சீடர்களுக்கு அறிவித்த போது அவர்களும் அதை நம்ப தயங்கினர்.

"மானிட மகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்பட வேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே” என்று இயேசு உயிரோடு இருக்கும் போது சொன்னதை அவர்கள் நினைவுக் கூறவில்லை.

வார்த்தை கேட்டு விட்டு கடந்து போனதால் அவர்களால் நம்பிக்கையில் நிலைத்து நிற்க முடியவில்லை.

இவர்களில் நாமும் ஒருவராக இருந்தால் நமக்கும் உயிர்ப்புக் கொண்டாட்டம் இல்லை.

உயிர்த்தவரை கல்லறையில் தேடுவது வீண். 

இருளில் தொலைக்கப்பட்ட பொருளை இருளிலே கண்டுக் கொள்ள முடியாது. ஒளி அங்கு தேவைப்படுகிறது. 

நம் வாழ்விலும் இருள் ஒளி பெற வேண்டும். நம் வாழ்வு பழையதிலிருந்து புதியதற்கு கடந்து செல்ல வேண்டும்.

இயேசுவின் உயிர்ப்பை நினைவுக் கூர்ந்து அவர் விதைத்த உயிர்ப்பின் விழுமியங்களை (உண்மை, அன்பு, நீதி, நேர்மை, தியாகம்...) நினைவுக் கூறுவோம்.

கேள்விகள் சந்தேகங்களாய்...

புனித வாரம்

16.04.2025 - புதன் கிழமை

“உன்னை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறவர்களிடம் அறிவுரை கேளாதே; உன்மேல் பொறாமை கொள்வோரிடமிருந்து உன் எண்ணங்களை மறைத்துக்கொள்” - சீராக் 37:10

சந்தேகம் வாழ்வை அழிக்கக் கூடியது. சந்தேகப்படுவோரின் வாழ்க்கையும் நரக வேதனை தான், யார் மீது சந்தேகம் முன் வைக்கப்படுகிறதோ அவர்களுடைய வாழ்க்கையும் நரக வேதனை தான். ஒருவர் மீது சந்தேகம் வருகிறது என்றால் நேராக கேட்டு விட வேண்டும். 

சந்தேகப்படுவதற்கு அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்றால் அது நல்லது. தீர்வு கிடைக்கவில்லையென்றால் அதை நாம் தான் சரிசெய்ய வேண்டும். அதைவிட்டு விட்டு இறுதிவரை சந்தேகத்திலேயே நிலைத்திருப்பது நல்லதல்ல.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 26:14-25) நான் இயேசுவை காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? என்று யூதாசு ஒரு கேள்வியை தலைமைக் குருக்களிடம் முன்வைக்கிறான். தனக்கு ஏதாவது கிடைக்குமா என்ற சந்தேகம். வெள்ளிக்காசு கிடைத்தது சந்தேகம் தீர்ந்தது. 

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள், நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும்? என்று. நகருக்குள் சென்று இன்னாரிடம் போய் சொல்லுங்கள் என்கிறார். சீடர்களுக்கு பதில் கிடைத்தது.

உங்களுள் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான் என்கிறார் இயேசு, சீடர்கள் வருத்தமுற்றவர்களாய் ஆண்டவரே அது நானோ? என்று கேட்கிறார்கள், யூதாசும் தெரிந்தும் கேட்கிறான். நீயே சொல்லிவிட்டாய் என்று பதில் கொடுக்கிறார் இயேசு. 

சந்தேகங்கள் கேள்விகளாய் மாறும் போது அங்கு பதில் கிடைக்கிறது. சந்தேகங்கள் வெளிவராமல் தேங்கி இருக்கிறபோது அது ஆபத்தானதாக மாறுகிறது. 

சந்தேகங்களை, பிரச்சனைகளை பெரிதாக்குவதற்கான கேள்விகளாக நம் கேள்விகள் அமைய கூடாது. நம் குடும்பத்தில், துறவற இல்லத்தில் நமக்கு எதிராக இருப்போரை பற்றிய சந்தேகம் எழும்போது தயக்கம் இல்லாமல் நேரிடையாக கேட்டு விடுவோம். 

சந்தேகத்தோடு உடன் பயணிப்பதைவிட சந்தேகத்தை விட்டொழித்து சந்தோசத்தோடு வாழ்வது நல்லது.

நம் வாழ்வில் கேள்விகள் வெளிவரட்டும்... சந்தேகங்கள் அழிந்தொழியட்டும்...

துரோகத்தை வெளிப்படுத்தும் துரோகி...


புனித வாரம் 

15.04.2025 - செவ்வாய்க் கிழமை 

நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்; நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள் - நீதிமொழிகள் 11:6

எல்லா மனிதர்களும் இறுதிவரை நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் அவரவர் தருணம் வரும் போது சுயத்தை காட்டி விடுவார்கள். நம் மனதே நம் சொல்லை கேட்காத போது, மற்றவர்கள் எப்படி நமக்கு ஏற்றார் போல நடப்பார்கள். 

துரோகிகளின் துரோகம் ஒருநாள் கண்டிப்பாக வெளிப்படும். தனக்காக காரியம் நிறைவேறும் வரை சிலர் பொறுமை காப்பார்கள், தனக்கான காரியம் இனி நடக்காது என்றால் எந்த எல்லைக்கும் திரும்புவார்கள்.

யார் நல்லவர்கள் என்பதை கண்டுணர்வது எல்லாம் அவ்வளவுக்கு எளிதல்ல. நமக்கு அருகில் இருக்கும் எல்லோரும் நல்லவர்கள் அல்ல, நமக்கு தூரமாக இருக்கும் அனைவரும் கெட்டவர்களும் அல்ல.

யாருக்கு அதிக துரோகம் நிகழும் - யார் பொதுக் காரியங்களில் ஈடுபடுகிறாரோ? யார் நல்லவராக இருக்கிறாரோ? யார் எல்லோரையும் எளிதாக நம்பி விடுவாரோ? இவர்கள் தான் துரோகத்தை அதிகம் பெறுவார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான்  13: 21-33, 36-38) இயேசு துரோகியை கண்டுக் கொள்கிறார். தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார். 

ஒருவர் தனக்கு துரோகம் செய்வான் என்று தெரிந்தே அவனை உடன் வைத்திருப்பது எவ்வளவு வேதனை. (அவன் மாறிவிடலாம் என்பதற்காக கூட அவனை உடன் வைத்திருக்கலாம்). நல்லவராக பல வருடம் தேவை, கெட்டவராக ஒரு நொடி போதும். 

நல்லவர்கள் போல எத்தனை ஆண்டுகள் வேணாலும் இருக்கலாம்.

ஏன் யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்? உரோமையர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே கசப்புணர்வு, வெறுப்புணர்வு அதிகம் உண்டு. உரோமையர்களை யூதாசு அதிகம் வெறுத்தான். இயேசுவைக் கொண்டு உரோமையர்களை அடித்து விரட்டி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான் யூதாசு. 

ஆனால் இயேசு போதித்ததோ அகிம்சை வழி, அன்பு வழி. இது ஒரு பயனும் விளைவிக்காது என்று எண்ணி அவரை காட்டிக் கொடுத்தான். அதன் காரணமாகவாவது அவர் பொங்கியெழுவார் என்று எண்ணினான். அதுவும் பயனளிக்காமல் போனது. 

இயேசுவுக்கு துரோகியாக மாறி அவரை காட்டிக் கொடுத்து விட்டான். 

நம்மை சுற்றியும் காரியக்காரர்கள் இருப்பார்கள். காரியம் ஆனது என்றால் உடன் இருப்பார்கள். காரியம் ஆகாது என்றால் நம்மையும் காட்டிக் கொடுத்து விடுவார்கள்.

கனி கொடுக்கும் மரம் கல்லடி படத்தான் செய்யும். 

நம்மை சுற்றி ஆயிரம் எதிரிகள் இருந்தாலும் நாம் யாருக்கும் எதிரியாய்/எதிராய் இல்லாதவாறு பார்த்துக் கொள்வோம்.

இயேசுவுக்கு பணிவிடை செய்வோமா?

புனித வாரம்

14.04.2025 - திங்கள் கிழமை 

“நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவதுபோல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன் - மலாக்கி 3:17

பணி செய்து செய்து களைத்து போன உறவுகளுக்கு ஓய்வு தேவை. உழைத்து உழைத்து சிவந்த கரங்களுக்கு ஆறுதல் தேவை. தந்தையர் குடும்பத்துக்காக ஓய்வின்றி உழைக்கிறார், தாய்மார்கள் விடுப்பு இன்றி உழைக்கிறார்.

என்னுடைய சுமை என்று தீரும் ? என்ற கேள்விக்கு பதில் முதுமை. இறுதிவரை வேலை தான். ஓய்வு முதுமையின் பரிசாக கிடைக்கிறது.

தனக்காக வாழ்ந்த தாய் தந்தை இறுதியில் முதியோர் இல்லத்திலோ, தனி வீட்டிலோ, ஒரு மாதம் ஒரு இடத்தில் மறு வாரம் மறுஇடத்தில் என்று தனித்து விடப்படுகிறார்கள்.

தன்னை கவனித்தவர்களுக்கு இறுதிக் காலத்தில் பணிவிடை செய்யப்படுவதில்லை. பணிச் சுமை குறைந்தாலும் மனச் சுமை அதிகமாகிறது முதுமையில்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 12: 1-11) மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். இயேசுவுக்கு பணிவிடை புரிகிறார் மரியா.

யூதாசு அதையும் தடுக்க பார்க்கிறான். ஏழைகள் பால் கொண்ட அன்பினால் அல்ல விலையுயர்ந்த நறுமணத் தைலம் பணமாக கொடுக்கப்பட்டிருந்தால் அதை தனக்கென பயன்படுத்தி இருக்கலாம் என்பதற்காக. பணம் தனக்கு பணிவிடை புரியட்டும் என்பது யூதாசின் எண்ணம்.

தனது சகோதரன் உயிர் பெற்றதன் கைம்மாறாக இந்த பணிவிடை மரியாவால் செய்யப்பட்டது. 

இவ்வுலகில் மனிதர் சுயநலமிக்க மனிதர்களாக தான் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டாலும் பெற்றுக் கொள்ளாதவர்களாக தான் பயணிக்கிறார்கள். 

தான் பெற்ற பணிவிடைக்கு சிறிதளது கைம்மாறு செய்தாலே இவ்வுலகம் நன்மையால் நிறைந்திருக்கும். ஆனால் பெறுதல் மட்டுமே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. 

இயலாதவர்களுக்கு செய்யும் பணிவிடை இறைவனை சென்று அடையும். தங்கமோ வெள்ளியோ, கோடிக் கணக்கான பணமோ இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதில்லை. நாம் செய்யும் சிறிய உதவி விண்ணகத்தில் பேரானந்தத்தை கொடுக்கும்.

தாய் தந்தையை கண்டுக் கொள்வோம். அதனால் அவரின் அன்பை பெறுவோம்.

ஆர்ப்பரிப்பும் பாடுகளும்...

குருத்து ஞாயிறு 

13.04.2025 - ஞாயிற்றுக் கிழமை

எதையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டால் அது சுமையாக தெரியாது. குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு பிரசவ வலி வேதனை அல்ல, தன் பிள்ளைகளுக்காக உழைக்கும் தந்தையின் மன வலி வேதனை அல்ல, முதியோர் இல்லத்தில் இருந்தாலும் தன் பிள்ளைகளுக்காக செபிக்க மறவாத தாய், தந்தை உள்ளங்களின் வேதனை வெறுப்பல்ல.

சிலர் ஏமாற்றங்களை கண்டு நொந்துவிடுகிறார்கள், சிலர் வாழ பழகிக் கொள்கிறார்கள், சிலர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள். எதிர்ப்பு இல்லாத ஏற்றுக் கொள்தல்கள் நிறைந்த பலனை கொடுக்கத் தான் செய்யும். சிலருக்கு தன்னை இழந்து பிறர் வாழ்வை உயர்த்துவதில் மகிழ்ச்சி. சிலருக்கு இருப்பதை பகிர்ந்து கொடுப்பதில் மகிழ்ச்சி. பிறரின் தேவையை பூர்த்தி செய்வதில் ஒருசிலருக்கு மகிழ்ச்சி.

இப்படி அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வோரின் வாழ்வு ஆர்ப்பரிப்பில் (மகிழ்வில்) தொடங்குகிறது. இறுதியில் செய்த நன்மைக்கு கைம்மாறாக துன்பத்தில் முடிவடைகிறது. இறைவாக்கினர் எரேமியா கேட்பது போல இருக்கிறது நன்மை செய்தோரின் வாழ்க்கை, “நன்மைக்குக் கைம்மாறு தீமையா?” - எரேமியா 18:20

இவ்வுலகில் தான் நன்மைக்கு கைம்மாறு தீமை, நாம் எதிர்நோக்கி இருக்கும் அவ்வுலகில் நன்மைக்குக் கைம்மாறு நன்மை தான், தீமைக்குக் கைம்மாறு தீமை தான். 

செய்த (நன்மையான) செயலுக்கு எதையும் எதிர்பாராதவர்கள் துன்பம் வந்தாலும் துவண்டு போவதில்லை. இப்படிபட்ட வாழ்க்கை வாழ்வதற்கும் மனதில் உறுதி (தில்) வேண்டும். ‘இது உனக்கு தேவையா?’ என்று நம் உறவுகளே நம்மை கேட்கும். ‘இருக்கிறத வச்சி ஒழுங்கா வாழ தெரியல இவுங்களுக்கு’ என்று ஊரே எள்ளி நகையாடும். மற்றவர்கள் நமக்கு செய்த துரோகம் கூட நமக்கு வலிக்காது, ஆனால் வெந்த புண்ணில் இன்னும் வேதனையை கூட்டும் உடன் உறவுகளின் வார்த்தைகள் தான் வேதனையை அதிகரிக்கும்.

இயேசுவுக்கும் இது விதிவிலக்கல்ல…

இன்று பாடுகளின் ஞாயிறுக்குள் அடியெடுத்து வைக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் லூக்கா நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது (லூக்கா 22:14-23:56). நான்கு நற்செய்தியாளர்களை பொருத்தவரை, வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைகிறார் இயேசு. இது தனது பாடுகளின் தொடக்கம் என்பது இயேசுவுக்கு தெரியும். ஓசான்னா என்று சொன்னவர்கள் சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்! என்று சொல்வார்கள் என்பது இயேசுவுக்கு நன்றாகவே தெரியும்.

வாழ்க! வாழ்க! என்ற ஆர்ப்பரிப்போடு ஆரம்பாகிறது இயேசுவின் எருசலேம் நுழைவு. ஒழிக! ஒழிக! என்ற ஆர்ப்பரிப்போடு அரங்கேறுகிறது இயேசுவின் சிலுவை ஏற்பு.

“அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்” - எசாயா 53:5

இயேசுவும் இந்த கேள்வியை கேட்டிருக்கலாம்!, “நன்மைக்குக் கைம்மாறு தீமையா?”

நீண்ட நெடிய துயரமும் பாடுகளும் இயேசுவை எவ்வளவு வேதனைக்கு உள்ளாக்கியிருக்கும். அன்று மட்டுமல்ல, இன்றும் இயேசுவின் பெயரால் செய்யப்படும் அநியாயங்கள், இயேசு விரும்பாததை இயேசு விரும்புவதாக செய்யும் செயல்கள் இயேசுவை வேதனைக்கு உள்ளாக்கத் தான் செய்கிறது. 

மனிதர்கள் முன் நல்லவர்களாக காட்டிக் கொள்வது முக்கியல்ல… கடவுளின் முன்னிலையில் நல்லவர்களாக இருப்பது தான் முக்கியம்.

மகிழ்வின் ஆர்ப்பரிப்பு தொடக்கம் தான். ஆர்ப்பரிப்பை தொடர்ந்து வரும் மிரட்டல்கள், இடையூறுகள், தடுமாற்றங்கள், துன்பங்கள் ஆகியவற்றில் நிலை தளர்ந்துவிடாமல் இருப்போம். அவ்வுலகில் நாம் பெறப் போகும் கைம்மாறு தான் ஆர்ப்பரிப்பின் நிறைவு.

நம் சுமைகளை ஒருபோதும் மற்றவர்கள் மேல் சுமத்தாத நல்வாழ்வு இயேசு விரும்பும் வாழ்வு. மற்றவர்களின் சிலுவைகளை சுமந்து அவர்களுக்கு உதவி செய்வதன் வழியாக, இயேசுவின் பாடுகளில் பங்கெடுப்போம். புனித வாரத்தில் மனித மாண்புகளை சுமந்தவர்களாய் பயணிப்போம்… 


நமது மறைமுக வாழ்க்கை...


தவக்காலம் 5ஆம் வாரம்

12.04.2025 - சனிக் கிழமை 

தீயோர் என்னை அழிக்கக் காத்திருக்கின்றனர்; நானோ உம் ஒழுங்குமுறைகளை ஆழ்ந்து சிந்திக்கின்றேன் - திருப்பாடல்கள் 119:95

எல்லா மனிதரிடமும் மறைமுக வாழ்க்கையும் உண்டு, வெளிப்படையான வாழ்க்கையும் உண்டு. எல்லாவற்றையும் வெளிப்படையாக காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக எல்லாவற்றையும் மறைமுகமாக செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. 

சில காரியங்களை மறைமுகமாகத் தான் செய்ய வேண்டும், சில காரியங்களில் வெளிப்படைத் தன்மை கட்டாயம் தேவை.

சிலர், தாங்கள் செய்யக்கூடிய காரியங்களை பலர் பார்க்க வேண்டும் என்றும் பாராட்ட வேண்டும் என்றும் செய்வார்கள். 

சிலர் செய்ய வேண்டிய காரியங்களை சரியாக செய்துவிட்டு அமைதி காப்பார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 11: 45-57) பரிசேயர் தலைமைச் சங்கத்தாரை கூட்டி இயேசுவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள். இந்த சதித்திட்டம் வெளிப்படையாக திட்டம் தான். பலருக்காக ஒருவர் இறப்பது நல்லது என்று நயவஞ்சகமாக பேசினார்கள். இந்த வார்த்தைகளை கண்டு இயேசு மறைமுக வாழ்க்கை வாழவில்லை.

இவர்களின் மிரட்டலுக்கு பயந்து தலைமறைவாகவில்லை. தனது நேரம் இன்னும் வராததால் அவர் சில காலம் இவர்களிடமிருந்து விலகி இருந்தார்.

இயேசு தான் செய்த அனைத்தையும் வெளிப்படையாக செய்தார், போதித்தார். இதனால் கோவம் கொண்ட கயவர் கூட்டம் அவரை அழித்து விட எண்ணியது. 

மறைமுக சதி செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் ஒருவகையில் சொல்லப்போனால் அக்கயவர்கள் இயேசுவை வெளிப்படையாக எதிர்த்தார்கள்.

இன்று பல மனிதர்கள் நேரில் ஒரு மாதிரியாக, பின்னால் ஒரு மாதிரியாக பேசுகிறார்கள். நமக்கு எதுவும் தெரியாது என்று எண்ணி நடிக்கிறார்கள். இப்படிபட்ட மனிதர்களிடமிருந்து நாம் மறைமுக வாழ்க்கை வாழ வேண்டி இருக்கிறது.

மறைத்து மறைத்து பேசும் நண்பனை விட நேர்ப்பட பேசும் எதிரியே மேல்.

பொல்லாப் பகைவர் கூட்டம் நம்மை ஒழித்து கட்ட திட்டம் பல போட்டாலும் அவர் அசைவின்றி ஒன்றும் அசையாது. அழிக்க எண்ணுவோர் முன்னிலையில் எழுந்து ஒளி வீசுவோம். 

உண்மையுள்ள செயல்களை நம்பலாமே!


தவக் காலம் 5ஆம் வாரம்

11.04.2025 - வெள்ளிக் கிழமை 

உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்; நல்லவர் தம் செயல் களின் பயனை அடைவார்.சரியானதை சரியென்று நிரூபிக்க இங்கு போராட வேண்டி இருக்கிறது - நீதிமொழிகள் 14:14

தவறு தான் விரைவில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பிடித்தவர்க்கு ஒரு நியாயம், பிடிக்காதவற்கு ஒரு நியாயம்.

நம்முடைய நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வருவதற்கு மனம் வருவதில்லை. மற்றவர் பக்கம் உள்ள நியாயத்தையும் கொஞ்சம் காது கொடுத்து தான் கேட்போமே என்பதெல்லாம் இல்லை. எல்லாம் தன் மையம் தான். நாம் தேடிக் கொண்ட புகழ், பதவி, பட்டம் எல்லாம் நம்முடைய உண்மைத்தனத்தினால் பெறப்பட்டது என்றால் கடவுளுக்கு நன்றி. நம்மிடம் இருப்பவையெல்லாம், மற்றவர்களை அடக்கி ஒடுக்கி பெறப்பட்டவையென்றால் அதனால் என்ன பயன்யென்ன? 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 10:31-42) இயேசு தன்னை கடவுளாக்கிக் கொண்டார் என்று அவர்மேல் கல்யெறிய யூதர்கள் குழு முன்வருகிறது. இயேசு சொல்வது உண்மையாய் இருந்தும் அவருடைய செயல்கள் நற்செயல்களாய் இருந்தும் அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் யூதர்கள். என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, என்னுடைய செயல்களையாவது நம்புங்கள் என்று இயேசு இறங்கி வருகிறார்கள். என் செயல்கள் வழியாக என் தந்தையின் விருப்பத்தை நான் செயல்படுத்துகிறேன் என்கிறார் இயேசு.

கடவுள் பயம் என்பது இப்போதெல்லாம் இல்லாமல் போய்விட்டது. தன்னையே கடவுளாக பலர் மாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் பின்னாலும் ஒரு கூட்டம் ஓடத் தான் செய்கிறது. அறிவு இருந்தும் அதை செயல்படுத்த முடியாமல் பலர் அலைந்து திரிகிறார்கள். ஒருசில மனிதர்களை கடவுளாக்கி, ஒருசில மனிதர்களை கீழ்த்தரமாக நடத்துகின்றனர்.

உண்மையாய் இருப்பவர்கள் மற்றவர்கள் பார்வையில் தோற்றுக் கொண்டிருப்பது போல தெரியும். ஆனால் அவர்கள் தோற்கவில்லை, துவண்டு போய் இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்கள்.

கடவுளை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்பவர்கள், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களை (உண்மைக்காக குரல் கொடுப்பவர்களை) ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மைக்கு செவிமடுக்க வேண்டும். உண்மையின் பாதையில் நடக்க வேண்டும்.

எந்த செயல் உண்மையானதோ அதை விருப்பு வெறுப்புமின்றி ஏற்றுக் கொள்ள முன்வருவோம். கடவுள் சார்புநிலை என்பது உண்மையை ஏற்றுக் கொள்வதே!

உண்மையை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்...


தவக் காலம் 5ஆம் வாரம்

10.04.2025 - வியாழக்கிழமை 

இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு; கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார் - சீராக்கின் ஞானம் 4:28

சிலருக்கு உண்மையை பிடிக்கும். ஆனால் உண்மை பேசுபவர்களை பிடிக்காது. அதிலும் குறிப்பாக பிடிக்காத நபர் பேசுவது உண்மையாக இருந்தாலும் கூட, அது பிடிக்கவே பிடிக்காது.

எதிரிகள் இவ்வுலகில் உருவாக்கப்படுகிறார்கள். உண்மை பேசுபவர்கள் எதிரியாக பார்க்கப்படுகிறார்கள். ஏன் பிறருக்கு எதிரியாக மாற வேண்டும் என்ற எண்ணமே நம்மை ஆளுக்கு ஏற்றார் போல பேச வைத்து விடுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 8: 51-59) இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

யூதர்கள் அவரிடம், “நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” என்றார்கள்.

இயேசுவின் வார்த்தையை மேலோட்டமாக காணும் போது அது சாதாரண அர்த்தத்தை தான் கொடுக்கும். "சாகமாட்டார்கள்" என்ற வார்த்தையை இவ்வுலக பார்வையிலே அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.

இறப்பைக் கடந்த வாழ்வு உண்டு என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இவ்வுலகில் கூட சிலர் இப்படி சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இறந்தாலும் அவர் நம்மில் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார். (ஒருவர் செய்த நற்செயல் வாயிலாக அவர் என்றும் வாழ்ந்துக்கொண்டே தான் இருப்பார்).

சிலர் ஆற்றிய தொண்டுச் செயல் வாயிலாக அவர்கள் புகழ் இவ்வுலகில் நிலைத்து நிற்க தான் செய்யும்.

இயேசுவின் வார்த்தையை ஏற்று நடப்பவர்கள் இவ்வுலகால் நிராகரிக்கப்பட்டது போல தோன்றினாலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அவ்வுலகில் அவர்களுக்கு பெருமை சேர்க்கும்...

உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம். உண்மை நமக்கு விடுதலை அளிக்கும்...

அடிமைத்தனமா? விடுதலையா?


தவக் காலம் 5ஆம் வாரம்

09.04.2025 - புதன் கிழமை 

ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு - உரோமையர் 6:22

யாரும் யாருக்கும் அடிமை இல்லை, யாரும் எதற்கும் அடிமை இல்லை. இது நிதர்சனமான உண்மை. ஆனால் நாம் பார்க்கும், கேட்கும், உணரும் அணைத்திருக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம்.

அடிமைத்தனம் நம்மை அசைய கூட விடாது. எல்லா வகையான அடிமைத்தனமும் முதலில் அன்பில் ஆரம்பிக்கும் பின்னர் வெறுப்பில் முடியும்.

ஏன் காதலித்தோம்? ஏன் நேசித்தோம்? ஏன் தேர்ந்தெடுத்தோம்? ஏன் விடமுடியவில்லை ? என்ற கேள்விகளிலே தொடரும்.

அடிமைத்தனதுக்கு வாய்க்கால் மட்டுமல்ல தடுப்பும் உண்டு. சரியான அணுகு முறை இருந்தால் அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வந்து விடலாம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 8: 31-42) இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்றார்.

நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!” என்றவர்களுக்கு, இயேசு சொன்ன பதில், “பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை.

சிலர் அடிமைத்தனத்தில் இருக்கிறோம் என்பதை அறியாமலேயே அடிமையாய் இருக்கிறார்கள். அடிமைத்தனத்தை அறியாதவர்கள் வாழ்வு ஆபத்தில் போய் முடியும்.

வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த இடத்திலாவது அடைப்பட்டு தான் கிடப்போம்.

உண்மையை அறிந்துக் கொண்டால் அதிலிருந்து விடுதலை பெறலாம். பிஞ்சு முள் குத்தினால் வலிக்காது. அது காய்ந்த பிறகு அதன் வேலையை காட்டும்.

எந்த ஆபத்தும் தொடக்கத்தில் சுகம் கொடுக்க தான் செய்யும். ஒன்றின் தொடக்கமல்ல அதன் முடிவே கவனிக்கத்தக்கது.

யாருக்கும் எதற்கும் எதிலும் அடிமையாய் இராதவாறு பார்த்துக் கொள்வோம்.

சாபமா? எச்சரிக்கையா?


தவக் காலம் 5ஆம் வாரம்

08.04 2025 - செவ்வாய்க் கிழமை 

என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும் - திருப்பாடல்கள் 81:8

சாபம் என்பது வேறு, எச்சரிக்கை என்பது வேறு. எச்சரிக்கை என்பது சாபத்தை பெறுவதை தடை செய்வது. ஒருவர் செய்யும் தவறை மற்றொருவர் கண்டு எச்சரிக்கிறார் என்றால் அவர் தவறு செய்தவருக்கு நல்வழி காட்டுகிறார் என்று அர்த்தம்.

பல நேரங்களில் நாமாகவே சாபத்தை தேடிக் கொள்கிறோம். என்றோ விதைத்த வினை பின்னாளில் விளைந்திருக்கிறது என்பது உண்மைதான்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்களே அது தான் இந்த சாபக் கேடு.

ஏன் ஒரு மனிதர் சாபத்துக்கு உள்ளாகிறார்? என்ற கேள்விக்கு இன்றைய நற்செய்தி வாசகம் (யோவான் 8: 21-30) பதிலாகிறது.

இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் 3 முறை "நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்" என்று கூறுகிறார். எல்லோரும் ஒருநாள் இறக்கத்தான் செய்வோம். ஆனால் மனம் மறாமலே இறப்பது என்பது தான் அவலம்.

அத்தகைய சாபத்தை பரிசேயர்கள் பெறுகிறார்கள். கண்ணிருந்தும் காணாதவர்களாக, காதிருந்தும் கேட்காதவர்களாக, புரிந்துக் கொள்ளாதவர்களாக இருந்த காரணத்தால் அவர்கள் இத்தகைய சாபத்தை பெறுகிறார்கள்.

இயேசுவின் போதனை தவறு செய்தவர்களுக்கு எச்சரிக்கையாக இருந்தது. தப்பறைக் கொள்கைகளுக்கு சவுக்கடி கொடுத்ததாக அமைந்தது. எனவே ஒரு கூட்டம் இயேசுவை எப்போதுமே எதிர்த்துக் கொண்டே இருந்தது. 

நாம் தவறும் போது முதலில் விட்டு விடப்படுகிறோம், பின்னர் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது, அதன் பின்னரும் செவிசாய்க்காத போது தான் அது சாபமாக மாறுகிறது.

எச்சரிக்கப்படும் போதே புரிந்துக் கொள்வோம். சாபத்தை தவிர்த்திடுவோம்.

ஒளியின் பாதையில் நடப்போம்...


தவக் காலம் 5ஆம் வாரம்
07.04.2025 - திங்கட்கிழமை 

என் பகைவனே, என்னைக் குறித்துக் களிப்படையாதே; ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சிபெறுவேன். நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார் - மீக்கா 7:8

ஒளி - இருள், பள்ளம் - மேடு இவற்றில் நாம் தேர்ந்தெடுப்பது ஒளியும் மேடும் தான். ஆனால் நாம் அறிந்ததே இருளிலும் பள்ளத்திலும் விழுந்து விடுகிறோம். நல்ல வழிகாட்டி இல்லை, பக்கத்துணை இல்லை. எனவே நான் வழி தவறி விட்டேன் என்று சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறோம். 

வழிதவறி நடப்பவர்கள் வழி தவறியவர்களுக்கு சரியான பாதையை காட்ட முடியாது. ஆனால் நான் தவறி விட்டேன் நீங்களும் தவறி விடாதீர்கள் என்று எச்சரிக்கலாம்.
நானே உலகின் ஒளி என்று சொன்ன இயேசுவின் அடிச்சுவட்டுகளை பின்பற்றி, நாமும் உலகின் ஒளியாக இருக்க அழைக்கப்படுகிறோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் 8: 12-20 இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்கிறார். 

ஒளியைக் கண்டுக் கொள்ளாதவர்கள், ஒளியை இழந்தார்கள். 

நம்முடைய வாழ்வில் நாம் ஏன் ஒளியை நிராகரிக்கிறோம்?
- நாம் செல்லும் பாதை தவறாக இருப்பதால்
- நாம் தீமைக்கு சான்று பகர்வதால்
- நம்முடைய தவறு வெளிப்பட்டு விடும் என்பதால்
- எப்போதும் நல்லவர்களாக இருக்க வேண்டும்/நன்மை செய்ய வேண்டும் என்பதால்

இயேசு ஒளியாக இருந்ததால் அவரை பலர் எதிர்த்தார்கள், குற்றம் சாட்டினார்கள், ஏற்றுக் கொள்ள தயங்கினார்கள்.

நாம் இவ்வுலகை சார்ந்தவர்கள் என்றால் ஒளியை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. 
ஆனால் நாம் அவ்வுலகை சார்ந்தவர்கள் என்பதால் ஒளியின் பாதையில் நடக்கவும், மற்றவர்களுக்கு ஒளியாக இருக்கவும் அழைக்கப்படுகிறோம்.

மன்னிப்பது மனமாற்றும்...

தவக் காலம் 5ஆம் வாரம்

06.04.2025 - ஞாயிற்றுக் கிழமை

“நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும்”. - எசாயா 50:8 

‘நாம் நம்முடைய தவறுக்கு வாதாடுபவராகவும் பிறருடைய தவறுக்கு நீதிபதியாகவும் இருக்கிறோம்’ என்று ஒரு சொல்லாடல் உண்டு. நாம் நம்முடைய தவறை ஒருபோதும், பொதுவெளியில் அறிக்கையிடுவதில்லை, ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அடுத்தவர் செய்த சிறிய செயலையும் ஊதி ஊதி பெரியதாக்குகிறோம், அவர்களை தீர்ப்பிடுகிறோம். 

சில நேரங்களில்/இடங்களில் மன்னிப்பு புது வாழ்வு கொடுக்கிறது. சில இடங்களில் மேலும் தப்புசெய்ய வழிவகை செய்கிறது என்பதும் மறுப்பதற்கு இல்லை. அதற்காக மன்னிப்பு முழுவதும் பயன் அளிக்காது என்று சொல்வதற்கில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 8:1-11) மறைநூல் அறிஞரும் பரிசேயரும் ஒருதலை சார்பாக செயல்பட்டனர். இங்கு அந்த விபசாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை அழைத்து வந்ததன் நோக்கம் இயேசுவை சிக்க வைப்பதற்கு தான். விபச்சாரத்தில் ஈடுப்பட்டவர்களை கல்லால் எறிந்துக் கொல்ல வேண்டும் என்பது மோசேயின் சட்டம். நீர் என்ன சொல்கிறீர்? என்று இயேசுவை சிக்க வைக்க பார்த்தனர். 

விபசாரத்தில் பிடிப்பட்ட அல்லது ஈடுப்பட்ட ஒரு பெண்ணை அழைத்து வந்தனர் பரிசேயர், மறைநூல் அறிஞர். ஆனால் அவரோடு இணைந்து தவறு செய்த ஆண் ஏன் இழுத்து வரப்படவில்லை? காரணம் அது ஆணாதிக்க சமுதாயம். இருவர் இணைந்து தவறு செய்தாலும் அதில் பெண் தான் பழியைச் சுமக்க வேண்டும்.

இயேசு அவர்களின் சூழ்ச்சிகளை அறிந்தவராய் செயல்பட்டார். உங்களுள் பாவம் செய்யாதவர் இப்பெண்மேல் கல் எறியட்டும் என்றார். ஒருவரையும் காணவில்லை. அவர்கள் தீர்ப்பிடவில்லையா நானும் தீர்ப்பிடவில்லை, இனிமேல் பாவம் செய்யாதீர் என்று ஒரு தீர்ப்பை கொடுக்கிறார் இயேசு. 

மன்னிப்பு வழியாக பரிவை காட்டி, புதுவாழ்வு வாழ அழைப்பு விடுத்தார் இயேசு.

வெளிப்படையாக பெரிய தவறுகளை செய்தவர்கள், சிறிய தவறுகளை செய்தவர்களுக்கு அல்லது தவறுகளை செய்யாதவர்களுக்கு தீர்ப்பு வழங்குவது இன்றும் தானே இயல்பாக நடைபெறுகிறது. சில தீர்ப்புகள் பலரது வாழ்க்கையை அழித்திருக்கிறது, மேலே எழும்ப முடியாமல் தடுத்திருக்கிறது.

 “நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.” - மத்தேயு 7:2

நம் நிலை உணர்வோம். மன்னிப்பு என்னும் தீர்ப்பை மற்றவர்களுக்கு கொடுப்போம். ஏனென்றால் தண்டனை என்னும் தீர்ப்பு ஒருவரை முழுவதும் திருத்தாது. (ஒருவர் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்) தண்டனை மட்டும் எப்பொழுதும் தீர்வாகாது.

நான் யோக்கியன் என்றால் எந்த இடத்திலும் யாரையும் தண்டிக்கலாம். என்னுடைய தவறுக்கு மட்டும் மன்னிப்பு கேட்கும் நான் ஏன் மற்றவரை மன்னிக்க கூடாது ?

மன்னித்தால் நானும் எதிர்பாராத நேரத்தில் மன்னிப்பு பெறுவேன் என்ற சிந்தனை நம்மில் இருக்கட்டும்...

அவரின் பேச்சில் மயங்கி போனீர்களா!


தவக்காலம் நான்காம் வாரம்

05.04.2025 - சனிக் கிழமை 

நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்தவல்லவர்கள் - யாக்கோபு எழுதிய திருமுகம் 3:2

சிலர் பேச்சில் சிலர் சிக்கிக் கொள்வர். சிலரது பேச்சுத் திறமை வேறு யாருக்கும் வராது. பேசி பேசி வீணாய் போனவர்களும் உண்டு, பேசி பேசி பிறர் வாழ்க்கையை வீணாக்கியவர்களும் உண்டு. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும், அமைதி காக்க வேண்டிய இடத்தில் அமைதி காக்க வேண்டும்.

சில பேச்சில் விஷம் பரவி இருக்கும், சிலர் தெனொழுக பேசுவார்கள். எதிர்மறையும் பேச்சும் உண்டு நேர்மறையும் பேச்சும் உண்டு.

யார் எப்படி பேசினாலும் எதையும் கண்டுக் கொள்ளாதவர்களும் உண்டு, சிலர் பேசக் கூடிய சாதாரண வார்த்தையை பெரிதாக்கக் கூடியவர்களும் உண்டு.

வார்த்தை பேசப்படுவதை பொறுத்து அதற்கு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ ஆற்றல் உண்டு. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 7: 40-53) தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, “அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர். 

இயேசு பேசிய பேச்சில் கைது செய்ய சென்றவர்களும் கூட கைதியாக மாறிப் போனார்கள். இயேசுவின் பேச்சுக்கு காவலர்கள் அடிமையானார்கள். 

பரிசேயருள் ஒருவர் நிக்கதேம் ஏற்கனவே இயேசுவை சந்தித்தவர், இப்போது மற்ற பரிசேயர்களை பார்த்து இவ்வாறு சொல்கிறார், "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?”.

(யோவான் 3:1,2

பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர்.

அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, “ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” என்றார்.)

இயேசுவின் பேச்சுக்கு அவரும் மயங்கி போனவர் தான்.

இயேசுவின் பேச்சு ஏமாற்று பேச்சு அல்ல. உண்மைக்கு சான்று பகர்வது, நீதியை நிலைநாட்டுவது.

இன்றும் நம்மிடையே போலி வார்த்தைகளால் கவர்ந்திழுக்கும் கயவர்கள் இருக்கிறார்கள். கடவுளை நோக்கி அழைத்துச் செல்வதாக சொல்லி தங்களையே பின்னாளில் கடவுளாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். 

நாம் மாய வார்த்தைகளுக்கும் போலி வார்த்தைகளுக்கும் அடிமையாகாமல் உண்மையின் குரலுக்கு சான்று பகர்வோம்.

ஆண்டவர் நம்மை மயக்க அவரில் மயங்கி போவோம்... 

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு...


தவக்காலம் நான்காம் வாரம் 

04.04.2025 - வெள்ளிக் கிழமை 

உம் பக்கம் ஆயிரம்போர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது - திருப்பாடல்கள் 91:7

நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும். நேரம் வரும்வரை செயல்பட வேண்டும். கடமையை தொடர்ந்து செய்ய வேண்டும், அதை கடமைக்காக செய்யக் கூடாது, மாறாக கடமை உணர்வோடு செய்ய வேண்டும்.

சிலர் நேரத்தை தள்ளி போடுகிறார்கள். சிலர் நேரத்தை சேமிக்கிறார்கள். நேரத்தை தள்ளி போட்டால் நேரம் நம்மை தள்ளி போடும்.

சிலர், மற்ற மனிதர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள். அதிக நேர வேலை சுமையை கொடுத்து, குறைந்த அளவு கூலியை கொடுத்து மற்ற மனிதரை சுரண்டுகிறார்கள். சிலர் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரியாமலேயே ஏமாற்றப்படுகிறார்கள். 

சிலர் சிலரை தீர்த்துக் கட்ட நேரம் குறிக்கிறார்கள். யார் நேரத்தை குறித்தாலும் நம் நேரம் வராமல் நாம் எங்கும் போக முடியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 7:1,210,25-30) இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.

இயேசுவுக்கு ஒரு கூட்டம் நேரம் குறித்தது. படைத்தவருக்கே நேரம் குறிக்கப்படுகிறது. 

எதற்காக இயேசுவுக்கு நேரம் குறிக்கப்பட்டது? அவர் தனது கடமையை செய்தார், தந்தை கடவுள் தனக்கு கொடுத்த பணியை செய்தார். இயேசுவை அனுப்பியவர் உண்மையானவர், அவருக்கு இயேசு உண்மையாக இருந்தார். 

யூதர்கள் செய்த குற்றங்களை சுட்டிக் காட்டினார். இது அவர்களுக்கு இயேசுவின் மேல் வெறுப்பை தூண்டியது.

நற்செய்தி பதிவு செய்கிறது, "அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை." - யோவான் 7:30

இன்று நம் கதையை முடித்து விட பலர் துடிக்கிறார்கள். இவன்(ள்) நமக்கு சரிப்பட்டு வரமாட்டான்(ள்). நமக்கு சார்பாக இல்லாதவர்களை நாம் ஒழித்து விடுவது சரியென்று ஒரு கூட்டம் சதித்திட்டம் தீட்டுகிறது.

ஆயிரம் பேர் ஆயிரம் செய்தாலும் நம் நேரம் முடியும் வரை அவர்கள் சூழ்ச்சி நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

சதித்திட்டம் தீட்டுவோர் தீட்டிக் கொண்டே இருக்கட்டும். அவர்கள் விரிக்கும் கண்ணியில் அவர்களே சிக்கிக் கொள்வார்கள்.

இயேசுவுக்கு சான்று பகர்வோம்...


தவக்காலம் நான்காம் வாரம்

03.04.2025 - புதன் கிழமை

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது - திருப்பாடல்கள் 16:7

நாம் கிறிஸ்தவர்கள் என்று சான்று பகர்வது நம் வெளிப்புற அடையாளங்கள் அல்ல, மாறாக நமது மனசான்று தான். வெளிப்புறத்தில் யார் யாராக வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம். உள்ளே இருப்பது தான் நம்மை தட்டி எழுப்பி விடும்.

நாம் நம் செயல்களால் கிறிஸ்துவுக்கு சான்று பகர வேண்டும். இன்று நாம் நம் செயல்களால் நம்மை பெருமைப்படுத்திக் கொள்ள எண்ணுகிறோம். எந்த செயலை எடுத்தாலும் பெருமை பாராட்டாமல் நாம் எதையும் செய்ய விரும்புவதில்லை.

கடவுளுக்குரிய காரியங்களை செய்வதற்கே இப்படி பெருமையை நாடுகிறோம் என்றால் பொதுக் காரியங்களை செய்வதில் நாம் எவ்வளவு பெருமையை நாடுவோம்.

மண்ணில் இருந்து வந்த உடல் மண்ணுக்கே திரும்பும் முன் படைத்தவருக்கு சான்று பகர வேண்டும். நாம் தரும் சான்று இறைவனுக்கு தேவையில்லை என்றாலும் நாம் அவருக்குரியவர்கள் என்பதை அது எடுத்துக் காட்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 5: 31-47) இயேசு தனக்கு தந்தை அளிக்கும் சான்று குறித்தும், திருமுழுக்கு யோவான் அளித்த சான்று குறித்தும், மோசே அளித்த சான்று குறித்தும் பேசுகிறார்.

நிலைவாழ்வு கொடுக்கும் இயேசுவை நம்பாத அந்த கூட்டத்தில் இயேசு இதை எடுத்துச் சொல்கிறார்.

சொல்லப்போனால் அவர்களும் நாமும் ஒன்று தான். அவர்கள் நேரிடையாக எதிர்த்தார்கள். நாமோ, அவரை சார்ந்து இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அவரை சார்ந்தோர் எல்லோரையும் எதிர்க்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஓர் அருமையான வார்த்தையை பதிவு செய்கிறார், "கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே!". இன்று நம் கடமையை சரிவர செய்வதை விட்டு விட்டு, எதற்கெடுத்தாலும் பெருமையை மனிதர்களிடமிருந்து தேடிக் கொள்கிறோம்.

மண்ணகத்தில் பெருமையை தேடும் உடல் அழிந்து போகும். பெருமையை தேடாது செய்யப்படும் அனைத்து செயல்களும் விண்ணகத்தில் கைம்மாறு பெறும்.

படைத்தவரை குறித்து சான்று பகிர்வோம். படைக்கப்பட்ட பொருளுக்கு பெருமை தேவையில்லை.

விண்ணகம் செல்ல நன்மை செய்...


தவக்காலம் நான்காம் வாரம் 
02.04.2025 - புதன் கிழமை 

நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார் - ஆமோஸ் 5:14

சிலர் தங்கள் உள்ளத்தில் இவ்வாறு எண்ணிக் கொள்கிறார்கள் இறந்த பிறகு என்ன நடந்தா என்ன? இறந்த பிறகு யார் பார்க்க போகிறார்? இருக்கிற வரை எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு செல்வோம் என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது.

இறந்த பிறகு இரண்டு வழிகள் உள்ளன 1. நீடித்த நிலையான வாழ்வு 2. தண்டனைத் தீர்ப்பு
இறந்த பிறகு மீண்டும் எப்படி இறக்க முடியும்? 
அந்த இறப்பு என்பது கடவுளை விட்டு தொலை தூரத்தில் நிற்கும் நிலை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்களே அது தான் இந்த இறப்பு. கடவுளை காண முடியும், ஆனால் 

இவ்வுலக வாழ்வில் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு உண்டு. நல்லதை செய்தால் நல்லது கிட்டும்,  தீயது செய்தால் தீமை தான் வந்து விளையும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 5: 17-30) தான் செய்த நன்மையை எதிர்த்த யூதர்களுக்கு இயேசு பதில் சொல்கிறார். இயேசு செய்த செயல் சரியாக இருந்தும் கூட யூதர்கள் அவரை துன்புறுத்தினார்கள்.

என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 
நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.

இறுதி நாளில் நாம் செய்த  செயலுக்கேற்ற/வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏற்ப கைம்மாறு வழங்கப்படும். இயேசு செய்த நன்மையை பாராது ஓய்வு நாள் சட்டம் தான் பெரிது என்று சட்டத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மனித மாண்பை மறந்தார்கள் யூதர்கள்.

இன்றும் நாம் நன்மை செய்ய தவறும் போது, நன்மை செய்வோருக்கு இடையூறாக இருக்கும் போது நாம் கிறிஸ்துவின் விழுமியங்களுக்கு எதிராக செயல்படுகிறோம். 
கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் புதிய வாழ்வு உண்டு.

விண்ணகம் சார்ந்த வாழ்வு இம்மண்ணக வாழ்வில் தொடங்கப்பட வேண்டும்.
கிறிஸ்துவை நம்புகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் மட்டும் மகிழ்ச்சி காணாது அவரின் விழுமியங்களை நம்பிக்கை நிறைந்த செயல்களால் வெளிக் காட்டுவோம். 

நன்மை செய்து, நல்லவற்றுக்கு துணை நின்று விண்ணகம் வாழ்வை நமதாக்குவோம்.

அவரன்பில் பணியாற்ற

மரியாளின் மாசற்ற இதயம்

பொதுக்காலம் 12ஆம் வாரம் 28.06.2024 - சனிக் கிழமை  பிறப்பில் எல்லோருடைய இதயமும் தூய்மையானது தான். வாழ்க்கை நகர்கின்ற போது இதயம் மாசுபடிந்ததாக...