25_04

உயிர்ப்பில் மகிமை பெற்ற இரவு...


ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா காலம் 

20.04.2025 - ஞாயிற்றுக் கிழமை 

ஒரு பாரம்பரியமான கிறிஸ்தவ கிராமத்தில் உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டங்கள் நடைபெற அனைத்தும் ஆயத்தமாக இருந்தது. திருப்பலி தொடங்குவதற்கு 2 மணி நேரம் மட்டும் இருந்தது. அந்த நேரத்தில் உயிர்த்த ஆண்டவர் சுரூபம் ஜோடனை செய்வதற்கு எடுத்து வரப்பட்டது. தவறுதலாக சுரூபம் கீழே விழுந்து உடைந்து விட்டது.

என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. பார்ப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும் அந்த சுரூபம். இன்னும் பூசை தொடங்க கொஞ்ச நேரம் தான் இருக்கு. என்ன செய்யுறது? என்று எல்லோரும் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். கடைசில ஒரு யோசனை தோணுச்சு. ஒரு பையன கடைசியாக உயிர்த்த ஆண்டவரா நடிக்க வைக்க முடிவு பண்ணினாங்க... இது வெளிய உள்ள யாருக்கும் தெரியாது. அந்த பையனுக்கு ஒரே பயம், சரின்னு சொல்லிட்டான். 

உன்னதங்களிலே கீதம் பாடப்பட இருந்தது. திரை விலக்கப்பட்டது. நடுக்கத்தில் இருந்த பையன் கொஞ்ச நேரம் நின்னு பார்த்தான். நிற்க முடியல பொதுக்கடின்னு கீழே விழுந்துட்டான். உடனே கூட்டத்தில் இருந்த ஒரு பாட்டி, "ஐய்யோ! உயிர்த்த ஆண்டவர் கீழே விழுந்துட்டாரு ஆண்டவர் கீழே விழுந்திட்டாரு, காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று கத்திட்டாங்க...

அதுக்கு பிறகு அந்த பையன மறுபடியும் தூக்கி நிறுத்திய பிறகு தான் அந்த பாட்டிக்கு உசுரே வந்துச்சு.

உயிர்ப்பில் மகிமைபெற்ற இரவு இது தான். இந்த இரவில் விழுந்து உயிர்ப்பில் எழ வேண்டும்.

ஓர் இரவு மகிமை பெற்றது என்றால் அது இயேசுவின் உயிர்ப்பினால் தான். பாஸ்கா புகழுரையில் இடம் பெறும் வாக்கியங்கள் இது, "ஒ மெய்யாகவே பேறுபெற்ற இரவே பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்!

இரவு பகல் போல் ஒளிபெறும்; நாள் மகிழ்வுற இரவும் ஒளிதரும் என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.

ஆகவே புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி தீமையை ஒழிக்கின்றது, குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது;

தவறினோருக்கு மாசின்மையையும் துயருற்றோருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது;

பகைமையை விரட்டுகின்றது, ஆணவத்தை அடக்குகின்றது; மன ஒற்றுமையை உருவாக்குகின்றது".

ஒரு இரவு இவ்வளவு மேன்மைக்குரியதாய் மாறியது என்றால் ஒருவரின் உயிர்ப்பினாலே தான்.

இயேசுவினுடைய உயிர்ப்பைக் கொண்டாடுகிறோம். ஆனால் உயிர்ப்பின் விழுமியங்களை மறந்து விடுகிறோம்.

இறப்பை நினைவுக் கூறுகிறோம், அதன் தியாகத்தை மறந்து விடுகிறோம்.

அடையாளங்களை முன்னிறுத்துகிறோம், ஆனால் அர்த்தத்தை இழந்து விடுகிறோம்.

இயேசுவின் உயிர்ப்பின் அர்த்தம் எங்கே போய் விட்டது? என்பதை இந்த இரவு நம்மை பார்த்துக் கேட்கிறது.

ஒரு இரவு பகல் போல் ஒளி பெறும் போது பழைய வாழ்வு புதிய வாழ்வாக மாற வேண்டும் என்பது இந்நாள் நமக்கு உணர்த்தும் சிந்தனை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 24:1-12) ஒளி பெறா இருளில் இருக்கக் கூடிய நபர்களை பார்க்கின்றோம். சில பெண்கள் நறுமணப் பொருட்களை கொண்டு கல்லறைக்கு செல்கிறார்கள், அங்கு நடந்தவற்றை குறித்து வியப்பும் குழப்பமும் அடைகிறார்கள். 

கல்லறையில் தங்களுக்கு சொல்லப்பட்டதை மற்ற சீடர்களுக்கு அறிவித்த போது அவர்களும் அதை நம்ப தயங்கினர்.

"மானிட மகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்பட வேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரே” என்று இயேசு உயிரோடு இருக்கும் போது சொன்னதை அவர்கள் நினைவுக் கூறவில்லை.

வார்த்தை கேட்டு விட்டு கடந்து போனதால் அவர்களால் நம்பிக்கையில் நிலைத்து நிற்க முடியவில்லை.

இவர்களில் நாமும் ஒருவராக இருந்தால் நமக்கும் உயிர்ப்புக் கொண்டாட்டம் இல்லை.

உயிர்த்தவரை கல்லறையில் தேடுவது வீண். 

இருளில் தொலைக்கப்பட்ட பொருளை இருளிலே கண்டுக் கொள்ள முடியாது. ஒளி அங்கு தேவைப்படுகிறது. 

நம் வாழ்விலும் இருள் ஒளி பெற வேண்டும். நம் வாழ்வு பழையதிலிருந்து புதியதற்கு கடந்து செல்ல வேண்டும்.

இயேசுவின் உயிர்ப்பை நினைவுக் கூர்ந்து அவர் விதைத்த உயிர்ப்பின் விழுமியங்களை (உண்மை, அன்பு, நீதி, நேர்மை, தியாகம்...) நினைவுக் கூறுவோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...