தவக்காலம் நான்காம் வாரம்
05.04.2025 - சனிக் கிழமை
நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்தவல்லவர்கள் - யாக்கோபு எழுதிய திருமுகம் 3:2
சிலர் பேச்சில் சிலர் சிக்கிக் கொள்வர். சிலரது பேச்சுத் திறமை வேறு யாருக்கும் வராது. பேசி பேசி வீணாய் போனவர்களும் உண்டு, பேசி பேசி பிறர் வாழ்க்கையை வீணாக்கியவர்களும் உண்டு. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும், அமைதி காக்க வேண்டிய இடத்தில் அமைதி காக்க வேண்டும்.
சில பேச்சில் விஷம் பரவி இருக்கும், சிலர் தெனொழுக பேசுவார்கள். எதிர்மறையும் பேச்சும் உண்டு நேர்மறையும் பேச்சும் உண்டு.
யார் எப்படி பேசினாலும் எதையும் கண்டுக் கொள்ளாதவர்களும் உண்டு, சிலர் பேசக் கூடிய சாதாரண வார்த்தையை பெரிதாக்கக் கூடியவர்களும் உண்டு.
வார்த்தை பேசப்படுவதை பொறுத்து அதற்கு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ ஆற்றல் உண்டு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 7: 40-53) தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, “அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர்.
இயேசு பேசிய பேச்சில் கைது செய்ய சென்றவர்களும் கூட கைதியாக மாறிப் போனார்கள். இயேசுவின் பேச்சுக்கு காவலர்கள் அடிமையானார்கள்.
பரிசேயருள் ஒருவர் நிக்கதேம் ஏற்கனவே இயேசுவை சந்தித்தவர், இப்போது மற்ற பரிசேயர்களை பார்த்து இவ்வாறு சொல்கிறார், "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?”.
(யோவான் 3:1,2
பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர்.
அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, “ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” என்றார்.)
இயேசுவின் பேச்சுக்கு அவரும் மயங்கி போனவர் தான்.
இயேசுவின் பேச்சு ஏமாற்று பேச்சு அல்ல. உண்மைக்கு சான்று பகர்வது, நீதியை நிலைநாட்டுவது.
இன்றும் நம்மிடையே போலி வார்த்தைகளால் கவர்ந்திழுக்கும் கயவர்கள் இருக்கிறார்கள். கடவுளை நோக்கி அழைத்துச் செல்வதாக சொல்லி தங்களையே பின்னாளில் கடவுளாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
நாம் மாய வார்த்தைகளுக்கும் போலி வார்த்தைகளுக்கும் அடிமையாகாமல் உண்மையின் குரலுக்கு சான்று பகர்வோம்.
ஆண்டவர் நம்மை மயக்க அவரில் மயங்கி போவோம்...
No comments:
Post a Comment