புனித வாரம்
14.04.2025 - திங்கள் கிழமை
“நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவதுபோல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன் - மலாக்கி 3:17
பணி செய்து செய்து களைத்து போன உறவுகளுக்கு ஓய்வு தேவை. உழைத்து உழைத்து சிவந்த கரங்களுக்கு ஆறுதல் தேவை. தந்தையர் குடும்பத்துக்காக ஓய்வின்றி உழைக்கிறார், தாய்மார்கள் விடுப்பு இன்றி உழைக்கிறார்.
என்னுடைய சுமை என்று தீரும் ? என்ற கேள்விக்கு பதில் முதுமை. இறுதிவரை வேலை தான். ஓய்வு முதுமையின் பரிசாக கிடைக்கிறது.
தனக்காக வாழ்ந்த தாய் தந்தை இறுதியில் முதியோர் இல்லத்திலோ, தனி வீட்டிலோ, ஒரு மாதம் ஒரு இடத்தில் மறு வாரம் மறுஇடத்தில் என்று தனித்து விடப்படுகிறார்கள்.
தன்னை கவனித்தவர்களுக்கு இறுதிக் காலத்தில் பணிவிடை செய்யப்படுவதில்லை. பணிச் சுமை குறைந்தாலும் மனச் சுமை அதிகமாகிறது முதுமையில்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 12: 1-11) மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். இயேசுவுக்கு பணிவிடை புரிகிறார் மரியா.
யூதாசு அதையும் தடுக்க பார்க்கிறான். ஏழைகள் பால் கொண்ட அன்பினால் அல்ல விலையுயர்ந்த நறுமணத் தைலம் பணமாக கொடுக்கப்பட்டிருந்தால் அதை தனக்கென பயன்படுத்தி இருக்கலாம் என்பதற்காக. பணம் தனக்கு பணிவிடை புரியட்டும் என்பது யூதாசின் எண்ணம்.
தனது சகோதரன் உயிர் பெற்றதன் கைம்மாறாக இந்த பணிவிடை மரியாவால் செய்யப்பட்டது.
இவ்வுலகில் மனிதர் சுயநலமிக்க மனிதர்களாக தான் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டாலும் பெற்றுக் கொள்ளாதவர்களாக தான் பயணிக்கிறார்கள்.
தான் பெற்ற பணிவிடைக்கு சிறிதளது கைம்மாறு செய்தாலே இவ்வுலகம் நன்மையால் நிறைந்திருக்கும். ஆனால் பெறுதல் மட்டுமே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இயலாதவர்களுக்கு செய்யும் பணிவிடை இறைவனை சென்று அடையும். தங்கமோ வெள்ளியோ, கோடிக் கணக்கான பணமோ இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதில்லை. நாம் செய்யும் சிறிய உதவி விண்ணகத்தில் பேரானந்தத்தை கொடுக்கும்.
தாய் தந்தையை கண்டுக் கொள்வோம். அதனால் அவரின் அன்பை பெறுவோம்.
No comments:
Post a Comment