தவக் காலம் 5ஆம் வாரம்
09.04.2025 - புதன் கிழமை
ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு - உரோமையர் 6:22
யாரும் யாருக்கும் அடிமை இல்லை, யாரும் எதற்கும் அடிமை இல்லை. இது நிதர்சனமான உண்மை. ஆனால் நாம் பார்க்கும், கேட்கும், உணரும் அணைத்திருக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம்.
அடிமைத்தனம் நம்மை அசைய கூட விடாது. எல்லா வகையான அடிமைத்தனமும் முதலில் அன்பில் ஆரம்பிக்கும் பின்னர் வெறுப்பில் முடியும்.
ஏன் காதலித்தோம்? ஏன் நேசித்தோம்? ஏன் தேர்ந்தெடுத்தோம்? ஏன் விடமுடியவில்லை ? என்ற கேள்விகளிலே தொடரும்.
அடிமைத்தனதுக்கு வாய்க்கால் மட்டுமல்ல தடுப்பும் உண்டு. சரியான அணுகு முறை இருந்தால் அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வந்து விடலாம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 8: 31-42) இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்றார்.
நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!” என்றவர்களுக்கு, இயேசு சொன்ன பதில், “பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை.
சிலர் அடிமைத்தனத்தில் இருக்கிறோம் என்பதை அறியாமலேயே அடிமையாய் இருக்கிறார்கள். அடிமைத்தனத்தை அறியாதவர்கள் வாழ்வு ஆபத்தில் போய் முடியும்.
வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த இடத்திலாவது அடைப்பட்டு தான் கிடப்போம்.
உண்மையை அறிந்துக் கொண்டால் அதிலிருந்து விடுதலை பெறலாம். பிஞ்சு முள் குத்தினால் வலிக்காது. அது காய்ந்த பிறகு அதன் வேலையை காட்டும்.
எந்த ஆபத்தும் தொடக்கத்தில் சுகம் கொடுக்க தான் செய்யும். ஒன்றின் தொடக்கமல்ல அதன் முடிவே கவனிக்கத்தக்கது.
யாருக்கும் எதற்கும் எதிலும் அடிமையாய் இராதவாறு பார்த்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment