புனித வாரம்
16.04.2025 - புதன் கிழமை
“உன்னை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறவர்களிடம் அறிவுரை கேளாதே; உன்மேல் பொறாமை கொள்வோரிடமிருந்து உன் எண்ணங்களை மறைத்துக்கொள்” - சீராக் 37:10
சந்தேகம் வாழ்வை அழிக்கக் கூடியது. சந்தேகப்படுவோரின் வாழ்க்கையும் நரக வேதனை தான், யார் மீது சந்தேகம் முன் வைக்கப்படுகிறதோ அவர்களுடைய வாழ்க்கையும் நரக வேதனை தான். ஒருவர் மீது சந்தேகம் வருகிறது என்றால் நேராக கேட்டு விட வேண்டும்.
சந்தேகப்படுவதற்கு அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்றால் அது நல்லது. தீர்வு கிடைக்கவில்லையென்றால் அதை நாம் தான் சரிசெய்ய வேண்டும். அதைவிட்டு விட்டு இறுதிவரை சந்தேகத்திலேயே நிலைத்திருப்பது நல்லதல்ல.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 26:14-25) நான் இயேசுவை காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? என்று யூதாசு ஒரு கேள்வியை தலைமைக் குருக்களிடம் முன்வைக்கிறான். தனக்கு ஏதாவது கிடைக்குமா என்ற சந்தேகம். வெள்ளிக்காசு கிடைத்தது சந்தேகம் தீர்ந்தது.
புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள், நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும்? என்று. நகருக்குள் சென்று இன்னாரிடம் போய் சொல்லுங்கள் என்கிறார். சீடர்களுக்கு பதில் கிடைத்தது.
உங்களுள் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான் என்கிறார் இயேசு, சீடர்கள் வருத்தமுற்றவர்களாய் ஆண்டவரே அது நானோ? என்று கேட்கிறார்கள், யூதாசும் தெரிந்தும் கேட்கிறான். நீயே சொல்லிவிட்டாய் என்று பதில் கொடுக்கிறார் இயேசு.
சந்தேகங்கள் கேள்விகளாய் மாறும் போது அங்கு பதில் கிடைக்கிறது. சந்தேகங்கள் வெளிவராமல் தேங்கி இருக்கிறபோது அது ஆபத்தானதாக மாறுகிறது.
சந்தேகங்களை, பிரச்சனைகளை பெரிதாக்குவதற்கான கேள்விகளாக நம் கேள்விகள் அமைய கூடாது. நம் குடும்பத்தில், துறவற இல்லத்தில் நமக்கு எதிராக இருப்போரை பற்றிய சந்தேகம் எழும்போது தயக்கம் இல்லாமல் நேரிடையாக கேட்டு விடுவோம்.
சந்தேகத்தோடு உடன் பயணிப்பதைவிட சந்தேகத்தை விட்டொழித்து சந்தோசத்தோடு வாழ்வது நல்லது.
நம் வாழ்வில் கேள்விகள் வெளிவரட்டும்... சந்தேகங்கள் அழிந்தொழியட்டும்...
No comments:
Post a Comment