25_04

துரோகத்தை வெளிப்படுத்தும் துரோகி...


புனித வாரம் 

15.04.2025 - செவ்வாய்க் கிழமை 

நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்; நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள் - நீதிமொழிகள் 11:6

எல்லா மனிதர்களும் இறுதிவரை நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் அவரவர் தருணம் வரும் போது சுயத்தை காட்டி விடுவார்கள். நம் மனதே நம் சொல்லை கேட்காத போது, மற்றவர்கள் எப்படி நமக்கு ஏற்றார் போல நடப்பார்கள். 

துரோகிகளின் துரோகம் ஒருநாள் கண்டிப்பாக வெளிப்படும். தனக்காக காரியம் நிறைவேறும் வரை சிலர் பொறுமை காப்பார்கள், தனக்கான காரியம் இனி நடக்காது என்றால் எந்த எல்லைக்கும் திரும்புவார்கள்.

யார் நல்லவர்கள் என்பதை கண்டுணர்வது எல்லாம் அவ்வளவுக்கு எளிதல்ல. நமக்கு அருகில் இருக்கும் எல்லோரும் நல்லவர்கள் அல்ல, நமக்கு தூரமாக இருக்கும் அனைவரும் கெட்டவர்களும் அல்ல.

யாருக்கு அதிக துரோகம் நிகழும் - யார் பொதுக் காரியங்களில் ஈடுபடுகிறாரோ? யார் நல்லவராக இருக்கிறாரோ? யார் எல்லோரையும் எளிதாக நம்பி விடுவாரோ? இவர்கள் தான் துரோகத்தை அதிகம் பெறுவார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான்  13: 21-33, 36-38) இயேசு துரோகியை கண்டுக் கொள்கிறார். தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார். 

ஒருவர் தனக்கு துரோகம் செய்வான் என்று தெரிந்தே அவனை உடன் வைத்திருப்பது எவ்வளவு வேதனை. (அவன் மாறிவிடலாம் என்பதற்காக கூட அவனை உடன் வைத்திருக்கலாம்). நல்லவராக பல வருடம் தேவை, கெட்டவராக ஒரு நொடி போதும். 

நல்லவர்கள் போல எத்தனை ஆண்டுகள் வேணாலும் இருக்கலாம்.

ஏன் யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்? உரோமையர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே கசப்புணர்வு, வெறுப்புணர்வு அதிகம் உண்டு. உரோமையர்களை யூதாசு அதிகம் வெறுத்தான். இயேசுவைக் கொண்டு உரோமையர்களை அடித்து விரட்டி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான் யூதாசு. 

ஆனால் இயேசு போதித்ததோ அகிம்சை வழி, அன்பு வழி. இது ஒரு பயனும் விளைவிக்காது என்று எண்ணி அவரை காட்டிக் கொடுத்தான். அதன் காரணமாகவாவது அவர் பொங்கியெழுவார் என்று எண்ணினான். அதுவும் பயனளிக்காமல் போனது. 

இயேசுவுக்கு துரோகியாக மாறி அவரை காட்டிக் கொடுத்து விட்டான். 

நம்மை சுற்றியும் காரியக்காரர்கள் இருப்பார்கள். காரியம் ஆனது என்றால் உடன் இருப்பார்கள். காரியம் ஆகாது என்றால் நம்மையும் காட்டிக் கொடுத்து விடுவார்கள்.

கனி கொடுக்கும் மரம் கல்லடி படத்தான் செய்யும். 

நம்மை சுற்றி ஆயிரம் எதிரிகள் இருந்தாலும் நாம் யாருக்கும் எதிரியாய்/எதிராய் இல்லாதவாறு பார்த்துக் கொள்வோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...