25_04

இரக்கத்தை பொழியும் இறைவன்...


பாஸ்கா காலம் 2ஆம் ஞாயிறு 

27.04.2025 - ஞாயிற்றுக் கிழமை

“நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்” - யோவான் 10:10

இன்று பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு. இது இறைஇரக்கத்தின் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. தன்னுடைய சீடர்களுக்கு தொடர்ந்து காட்சியின் வழியாக தன்னை வெளிப்படுத்தி, தன்னுடைய இரக்கத்தை பொழிகிறார் இயேசு. 

இயேசுவின் சீடர்களுக்கு சில கேள்விகள் இருந்திருக்கும்… இதுவரை இயேசுவை சார்ந்திருந்தது போதும், இனி இவரால் நமக்கு என்ன பயன்? இவர் திரும்பி வருவாரா? இதனால் தான் ஒருவர் சொல்லும் சாட்சியத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்றைய காலக்கட்டத்தில் நம்மிலும் சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன. கடவுளை ஏன் நம்ப வேண்டும்? கடவுளுக்கு அஞ்சுவதனால் என்ன பயன்? கடவுள் நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை அந்த அளவுக்கு உயர்ந்ததாக தெரியவில்லையே? கடவுள் இருக்கிறார் என்றால் நாம் வாழும் இந்த பூமியில் இத்தனை பிளவுகள் தேவையா? கடவுள் பெயரால் தானே இத்தனை பாகுபாடுகள் இங்கு நிலவுகிறது என்ற எண்ணங்களும் கேள்விகளும் கடவுளை மறக்கடிக்கச் செய்கின்றன.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் ஒன்றை மறந்துவிடக் கூடாது. நம்மை இயக்கக் கூடிய சக்தி இவ்வுலகில் உண்டு. கடவுள் தன்னில், பிறரில், இயற்கையில் செயலாற்றுவதை சிலர் கண்டுக் கொள்கிறார்கள். சிலர் கண்டும் உணர்வதில்லை.

கடவுள் நம்முடைய சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை (நம்முடைய சுதந்திரத்தில் எல்லா வேளையிலும் குறுக்கிட்டார் என்றார் நாம் நாமாக இயங்க முடியாது). அவர் நம்மை இயக்கும் சக்தி தான் ஆனால் நம் சுதந்திர போக்கின்படி செயல்பட நம்மை அனுமதிக்கிறார். கடவுளுக்கு நம்முடைய ஒவ்வொரு அசைவும் தெரியும். நாம் செய்தவை, செய்கிறவை, செய்யப் போறவை எல்லாம் அவர் அறிவார். 

புனித அகுஸ்தினார் சொல்வார், ‘உன்னையன்றி உன்னை படைத்தவர், உன் துணையின்றி உன்னை மீட்க மாட்டார்’.

நம்மை அவர் மீட்க, நம்முடைய முழு ஒத்துழைப்பு அவருக்கு தேவை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 20:19-31) இயேசுவோடு இருந்தவர்களே இயேசுவையும் அவரது உயிர்ப்பையும் நம்ப மறுக்கிறார்கள். அச்சத்தோடு வாழ்ந்தவர்களுக்கு முன் இயேசு தோன்றி அவர்களுக்கு அமைதியை கொடுத்து அவர்களின் அச்ச உணர்வை போக்குகிறார். தூயஆவியைக் கொடுத்து பணிவாழ்வு புரிய அழைப்பு விடுக்கிறார். இயேசுவின் உயிர்ப்பு சீடர்களின் பணி வாழ்வுக்கான தொடக்க புள்ளி. 

இயேசு தோன்றும் போது, சீடர்களுள் ஒருவரான திதிம் என்னும் தோமா அவர்களோடு இல்லை. சீடர்கள் இயேசு தங்களுக்கு காட்சிக் கொடுத்ததை அவரிடம் சொன்ன போது அவர் அதை நம்பவில்லை. மீண்டும் இயேசு எட்டு நாள்களுக்குப் பின் தன்னுடைய சீடர்களுக்கு காட்சித் தருகிறார். தோமா அப்போது அவர்களோடு இருக்கிறார். சந்தேகத்தை நீக்கிக் கொள்ள, “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்கிறார் இயேசு. 

சந்தேகம் அடைந்த தோமாவுக்கு இப்போதோ தயக்கம் ஏற்படுகிறது. அவ்வளவு வீராப்போடு பேசியவர் இப்போது கூனிக் குறுகி நிற்கிறார். 

நம்மிலும் பலர் இப்படி உண்டு. கண்ணால் கண்டால் மட்டுமே கடவுளை நம்புவேன் என்று சொல்வோரும் உண்டு. ஒருவகையில் புனித தோமாவின் சந்தேகத்தால் நாம் இன்று திடப்பட்டு நிற்கின்றோம். நாம் இறைவன்மீது முழு நம்பிக்கை கொள்ள புனித தோமா ஒரு காரணம்.

தம் பணியை தொடர இயேசு தம் சீடர்களுக்கு பணித்தார். இன்று அதே பணிப்பகிர்வு நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நம்பிக்கை குறைவுள்ளோரிடம் நம்பிக்கையை மிகுதியாக்கவும், வாழ்வு இழந்து காணப்படுவோரிடம் அவர்கள் புதுவாழ்வு பெற உழைக்கவும் நாம் முன்வர வேண்டும். இப்படி செய்யும் போது நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை மற்றவரை சென்றடையும். நம்பிக்கையினால் புதுவாழ்வு மலரும்…

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...