25_04

இயேசுவுக்கு சான்று பகர்வோம்...


தவக்காலம் நான்காம் வாரம்

03.04.2025 - புதன் கிழமை

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது - திருப்பாடல்கள் 16:7

நாம் கிறிஸ்தவர்கள் என்று சான்று பகர்வது நம் வெளிப்புற அடையாளங்கள் அல்ல, மாறாக நமது மனசான்று தான். வெளிப்புறத்தில் யார் யாராக வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம். உள்ளே இருப்பது தான் நம்மை தட்டி எழுப்பி விடும்.

நாம் நம் செயல்களால் கிறிஸ்துவுக்கு சான்று பகர வேண்டும். இன்று நாம் நம் செயல்களால் நம்மை பெருமைப்படுத்திக் கொள்ள எண்ணுகிறோம். எந்த செயலை எடுத்தாலும் பெருமை பாராட்டாமல் நாம் எதையும் செய்ய விரும்புவதில்லை.

கடவுளுக்குரிய காரியங்களை செய்வதற்கே இப்படி பெருமையை நாடுகிறோம் என்றால் பொதுக் காரியங்களை செய்வதில் நாம் எவ்வளவு பெருமையை நாடுவோம்.

மண்ணில் இருந்து வந்த உடல் மண்ணுக்கே திரும்பும் முன் படைத்தவருக்கு சான்று பகர வேண்டும். நாம் தரும் சான்று இறைவனுக்கு தேவையில்லை என்றாலும் நாம் அவருக்குரியவர்கள் என்பதை அது எடுத்துக் காட்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 5: 31-47) இயேசு தனக்கு தந்தை அளிக்கும் சான்று குறித்தும், திருமுழுக்கு யோவான் அளித்த சான்று குறித்தும், மோசே அளித்த சான்று குறித்தும் பேசுகிறார்.

நிலைவாழ்வு கொடுக்கும் இயேசுவை நம்பாத அந்த கூட்டத்தில் இயேசு இதை எடுத்துச் சொல்கிறார்.

சொல்லப்போனால் அவர்களும் நாமும் ஒன்று தான். அவர்கள் நேரிடையாக எதிர்த்தார்கள். நாமோ, அவரை சார்ந்து இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அவரை சார்ந்தோர் எல்லோரையும் எதிர்க்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஓர் அருமையான வார்த்தையை பதிவு செய்கிறார், "கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே!". இன்று நம் கடமையை சரிவர செய்வதை விட்டு விட்டு, எதற்கெடுத்தாலும் பெருமையை மனிதர்களிடமிருந்து தேடிக் கொள்கிறோம்.

மண்ணகத்தில் பெருமையை தேடும் உடல் அழிந்து போகும். பெருமையை தேடாது செய்யப்படும் அனைத்து செயல்களும் விண்ணகத்தில் கைம்மாறு பெறும்.

படைத்தவரை குறித்து சான்று பகிர்வோம். படைக்கப்பட்ட பொருளுக்கு பெருமை தேவையில்லை.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...