தவக் காலம் 5ஆம் வாரம்
08.04 2025 - செவ்வாய்க் கிழமை
என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும் - திருப்பாடல்கள் 81:8
சாபம் என்பது வேறு, எச்சரிக்கை என்பது வேறு. எச்சரிக்கை என்பது சாபத்தை பெறுவதை தடை செய்வது. ஒருவர் செய்யும் தவறை மற்றொருவர் கண்டு எச்சரிக்கிறார் என்றால் அவர் தவறு செய்தவருக்கு நல்வழி காட்டுகிறார் என்று அர்த்தம்.
பல நேரங்களில் நாமாகவே சாபத்தை தேடிக் கொள்கிறோம். என்றோ விதைத்த வினை பின்னாளில் விளைந்திருக்கிறது என்பது உண்மைதான்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்களே அது தான் இந்த சாபக் கேடு.
ஏன் ஒரு மனிதர் சாபத்துக்கு உள்ளாகிறார்? என்ற கேள்விக்கு இன்றைய நற்செய்தி வாசகம் (யோவான் 8: 21-30) பதிலாகிறது.
இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் 3 முறை "நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்" என்று கூறுகிறார். எல்லோரும் ஒருநாள் இறக்கத்தான் செய்வோம். ஆனால் மனம் மறாமலே இறப்பது என்பது தான் அவலம்.
அத்தகைய சாபத்தை பரிசேயர்கள் பெறுகிறார்கள். கண்ணிருந்தும் காணாதவர்களாக, காதிருந்தும் கேட்காதவர்களாக, புரிந்துக் கொள்ளாதவர்களாக இருந்த காரணத்தால் அவர்கள் இத்தகைய சாபத்தை பெறுகிறார்கள்.
இயேசுவின் போதனை தவறு செய்தவர்களுக்கு எச்சரிக்கையாக இருந்தது. தப்பறைக் கொள்கைகளுக்கு சவுக்கடி கொடுத்ததாக அமைந்தது. எனவே ஒரு கூட்டம் இயேசுவை எப்போதுமே எதிர்த்துக் கொண்டே இருந்தது.
நாம் தவறும் போது முதலில் விட்டு விடப்படுகிறோம், பின்னர் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது, அதன் பின்னரும் செவிசாய்க்காத போது தான் அது சாபமாக மாறுகிறது.
எச்சரிக்கப்படும் போதே புரிந்துக் கொள்வோம். சாபத்தை தவிர்த்திடுவோம்.
No comments:
Post a Comment