பாஸ்கா எண் கிழமை - புதன்
23.04.2025 - புதன் கிழமை
இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி பேசுகிறோம், ஆனால் நம்முடைய உள்ளம் அவருடைய உயிர்ப்பினால் பற்றியெரிகிறதா? விதையாக விழுந்த இயேசு விடியலாக உயிர்த்தெழுந்தார். அவரின் உயிர்ப்புப் பலருக்கு புதிரே…
விதை மடிந்து விட்டது என்று எண்ணியவர்கள் பரிசேய சதுசேய கூட்டம் மட்டுமல்ல, மாறாக இயேசுவின் அன்புச் சீடர்களும் தான்.
இனி இயேசுவை காணவே முடியாது என்று எண்ணியவர்களின் உள்ளங்களில் எல்லாம் ஒளி அணைந்துக் கொண்டிருந்தது. அந்த தருணங்களில் தான் இயேசுவின் காட்சி ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது. ஒருவருடைய சாட்சியத்தை மற்றொருவர் ஏற்கவில்லை, தயங்கினார்கள். ஆனால் இயேசு உயிரோடிருக்கிறார் என்ற துளிர் அவர்கள் நடுவே முளைக்க ஆரம்பித்தது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 24:13-35) எம்மாவு செல்லும் வழியில் இருவரின் உள்ளம் இயேசுவின் உடனிருப்பால் பற்றி எரியும் நிகழ்வை வாசிக்க கேட்கிறோம். ‘வழிநெடுகிலும் நீங்கள் பேசிக்கொண்டிருப்பது என்ன? என்று இயேசு கேட்டதும், அவர்கள் பதில், ‘எருசலேமில் தங்கியிருப்பவருள் உமக்கு மட்டும்தான் இந்நாளில் நிகழ்ந்தவை தெரியாதோ!... நாசரேத்து இயேசுவைப் பற்றியே பேசுகின்றோம்’ என்று இயேசுவோடு இயேசுவை பற்றி பேசினார்கள்.
இறைவார்த்தையும் இறைஉணவும் பகிரப்பட்ட போது அந்த இருவர் இயேசுவை இன்னாரென்று அறிந்துக் கொண்டனர். அவர்கள் உள்ளம் பற்றியெரிந்தது.
நம்முடைய எதார்த்த வாழ்வில், உடனிருப்பவர்களின் உள்ளம் பல வேளைகளில் நம்மோடு ஒன்றிப்போவதில்லை. அவர்கள் நம்மைவிட்டு பிரிந்த பிறகு அவர்களின் நினைவுகள் நம்மைவிட்டு விலகுவதில்லை. நெருக்கமானவரின் நினைவலைகள் நம்மில் பற்றியெரிந்துக் கொண்டிருக்கும். (இருக்கும்போது அன்பு புரியாது)
இயேசுவை தெரியும் என்பது முக்கியமல்ல, இயேசுவை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறோம் என்பது தான் முக்கியம்.
அயலாரை புரிய முற்படும் போது இறைவனை புரிந்துக் கொள்ளலாம்... (புரிய முற்படுதல் பல நேரங்களில் காயப்படுத்தும்).
இயேசுவை அடுத்தவரில்\அடுத்தவரின் நலனில் கண்டோம் என்றால் ஒவ்வொரு நாளும் உயிர்ப்பின் நாளே! ஒவ்வொரு நாளும் புதுப்பொலிவின் நாளே!
No comments:
Post a Comment