பாஸ்கா எண் கிழமை - திங்கள்
21.04.2025- திங்கள் கிழமை
“உங்கள் உள்ளம் தளராதிருக்கட்டும்; நாட்டில் உலவும் வதந்திகளைக் கேட்டுக் கலங்காதீர்கள்” எரேமியா 51:46
உலகில் உண்மையை மறைப்பதற்கு பல வதந்திகள் அல்லது பொய்யுரைகள் பரப்பப்படுகின்றன. இறுதியில் எது உண்மை? எது பொய்? என்று கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு அது போய்விடுகிறது.
நல்லவர்களை பொல்லாதவர்கள் என்று சித்தரித்து காட்டுவதற்கு பயன்படும் ஆயுதமே இந்த வதந்தி. உண்மையை மறைக்கும் கொடிய கொலைக் கருவி வதந்தி. ‘உண்மை உடனுக்குடன்’, ‘உள்ளது உள்ளப்படியே’, ‘உண்மையின் உரைக்கல்’ என்று பல்வேறு விளம்பரங்கள் செய்தித்தாளுக்கோ அல்லது தொலைக்காட்சி செய்திகளுக்கோ கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை எல்லா வேளையிலும் உண்மையை பரப்புவதில்லை, உண்மைச் சம்பவத்தை படம் பிடித்துக் காட்டுவதில்லை.
அவர்கள் உண்மையை எடுத்துரைத்தால், அவர்கள் கண்டிக்கப்படுவார்கள், அவர்களுடைய உரிமம் ரத்துச் செய்யப்படும். எனவே தங்களை காப்பாற்ற சில வதந்திகள், பொய்யுரைகள் பரப்படுகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (மத் 28:8-15) இயேசுவின் உயிர்ப்பை குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன. தலைமைக் குருக்கள், மூப்பர்கள் இணைந்து படைவீரருக்கு பணம் கொடுத்து, உண்மையை மாற்றி பேச சொல்கிறார்கள். நற்செய்தி பதிவு செய்கிறது, அன்று பரப்பப்பட்ட வதந்தி இன்று வரை யூதரிடையே பரவியிருக்கிறது.
ஒரு தடவை பரப்பப்படும் வதந்தி, காலந்தோறும் நிலைத்திருக்கும் என்பதற்கு இது உதாரணம். நீதிமொழிகள் நூல் 24:28 சொல்கிறது, “தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே; உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே.” உண்மையை திரித்துக் கூறி அடுத்தவர் வாழ்வை சிதைப்பது பாவம்.
இயேசுவின் உயிர்ப்பில் பங்கெடுக்கிறோம். நாம் உண்மையை உண்மையென்று உரைக்கும் இயேசுவின் விழுமியங்களை நமதாக்கி, அவரை பிரதிபலிப்போம். நாம் உண்மையை உலகறிய தந்தியடிப்போம்… பொய்யெனும் வதந்தியை முறியடிப்போம்…
No comments:
Post a Comment