25_04

மன்னிப்பது மனமாற்றும்...

தவக் காலம் 5ஆம் வாரம்

06.04.2025 - ஞாயிற்றுக் கிழமை

“நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும்”. - எசாயா 50:8 

‘நாம் நம்முடைய தவறுக்கு வாதாடுபவராகவும் பிறருடைய தவறுக்கு நீதிபதியாகவும் இருக்கிறோம்’ என்று ஒரு சொல்லாடல் உண்டு. நாம் நம்முடைய தவறை ஒருபோதும், பொதுவெளியில் அறிக்கையிடுவதில்லை, ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அடுத்தவர் செய்த சிறிய செயலையும் ஊதி ஊதி பெரியதாக்குகிறோம், அவர்களை தீர்ப்பிடுகிறோம். 

சில நேரங்களில்/இடங்களில் மன்னிப்பு புது வாழ்வு கொடுக்கிறது. சில இடங்களில் மேலும் தப்புசெய்ய வழிவகை செய்கிறது என்பதும் மறுப்பதற்கு இல்லை. அதற்காக மன்னிப்பு முழுவதும் பயன் அளிக்காது என்று சொல்வதற்கில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 8:1-11) மறைநூல் அறிஞரும் பரிசேயரும் ஒருதலை சார்பாக செயல்பட்டனர். இங்கு அந்த விபசாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை அழைத்து வந்ததன் நோக்கம் இயேசுவை சிக்க வைப்பதற்கு தான். விபச்சாரத்தில் ஈடுப்பட்டவர்களை கல்லால் எறிந்துக் கொல்ல வேண்டும் என்பது மோசேயின் சட்டம். நீர் என்ன சொல்கிறீர்? என்று இயேசுவை சிக்க வைக்க பார்த்தனர். 

விபசாரத்தில் பிடிப்பட்ட அல்லது ஈடுப்பட்ட ஒரு பெண்ணை அழைத்து வந்தனர் பரிசேயர், மறைநூல் அறிஞர். ஆனால் அவரோடு இணைந்து தவறு செய்த ஆண் ஏன் இழுத்து வரப்படவில்லை? காரணம் அது ஆணாதிக்க சமுதாயம். இருவர் இணைந்து தவறு செய்தாலும் அதில் பெண் தான் பழியைச் சுமக்க வேண்டும்.

இயேசு அவர்களின் சூழ்ச்சிகளை அறிந்தவராய் செயல்பட்டார். உங்களுள் பாவம் செய்யாதவர் இப்பெண்மேல் கல் எறியட்டும் என்றார். ஒருவரையும் காணவில்லை. அவர்கள் தீர்ப்பிடவில்லையா நானும் தீர்ப்பிடவில்லை, இனிமேல் பாவம் செய்யாதீர் என்று ஒரு தீர்ப்பை கொடுக்கிறார் இயேசு. 

மன்னிப்பு வழியாக பரிவை காட்டி, புதுவாழ்வு வாழ அழைப்பு விடுத்தார் இயேசு.

வெளிப்படையாக பெரிய தவறுகளை செய்தவர்கள், சிறிய தவறுகளை செய்தவர்களுக்கு அல்லது தவறுகளை செய்யாதவர்களுக்கு தீர்ப்பு வழங்குவது இன்றும் தானே இயல்பாக நடைபெறுகிறது. சில தீர்ப்புகள் பலரது வாழ்க்கையை அழித்திருக்கிறது, மேலே எழும்ப முடியாமல் தடுத்திருக்கிறது.

 “நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.” - மத்தேயு 7:2

நம் நிலை உணர்வோம். மன்னிப்பு என்னும் தீர்ப்பை மற்றவர்களுக்கு கொடுப்போம். ஏனென்றால் தண்டனை என்னும் தீர்ப்பு ஒருவரை முழுவதும் திருத்தாது. (ஒருவர் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்) தண்டனை மட்டும் எப்பொழுதும் தீர்வாகாது.

நான் யோக்கியன் என்றால் எந்த இடத்திலும் யாரையும் தண்டிக்கலாம். என்னுடைய தவறுக்கு மட்டும் மன்னிப்பு கேட்கும் நான் ஏன் மற்றவரை மன்னிக்க கூடாது ?

மன்னித்தால் நானும் எதிர்பாராத நேரத்தில் மன்னிப்பு பெறுவேன் என்ற சிந்தனை நம்மில் இருக்கட்டும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...