25_04

நம்பிக்கை என்னும் ஒளி...

பாஸ்கா காலம் 2ஆம் வாரம்

30.04.2025 - புதன் கிழமை

“உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை” - திருப்பாடல்கள் 9:10

சில அன்புக்குரியோர் உடனிருந்தாலே, மலையை பிளக்கக்கூடிய ஆற்றல் நம்மிடம் இருப்பது போல இருக்கும். அன்புக்குரியவர் தரும் நம்பிக்கையும் நேர்மறை சிந்தனைகளும் நம்மை எப்பொழுதும் தாங்கும். “நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள்” என்கிறது சீராக்கின் ஞான நூல் 6:14.

இன்றையக் காலக் கட்டத்தில் நம்பிக்கை கொண்டதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

சாதாரண மனிதர்களிடம் இருக்கிற நம்பிக்கையே இவ்வளவு ஆற்றல்மிக்கது என்றால், இறைவனில் நாம் நம்பிக்கை கொண்டிருந்தால் இன்னும் ஆற்றலை நாம் அதிகமாக பெற முடியும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:16-21) தன்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை என்கிறார் இயேசு கிறிஸ்து. இறைவனில் கொள்ளும் நம்பிக்கை நம்மை தண்டனைத் தீர்ப்பிலிருந்து காக்கும். எப்படி நம்பிக்கை நம்மை காக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது! நற்செய்தி தெளிவுப்படுத்துகிறது. “உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்” (யோவான் 2:21)

கடவுளில் நம்பிக்கை கொள்வோர் கடவுள் காட்டும் ஒளியில் நடப்பர், கடவுள் காட்டும் ஒளியில் நடப்போர் தண்டனைத் தீர்ப்பு பெறமாட்டார்கள். தீங்கு செய்வோருக்கு கடவுள்மீது நம்பிக்கை கிடையாது. அவர்கள் செல்வ மிதப்பில் இருப்பதனால் கடவுள் துணை அவர்களுக்கு தேவையில்லை என்று எண்ணுகிறார்கள்.

இன்று இறைவனில் நாம் கொள்ளும் நம்பிக்கை நமக்கு நலமான வாழ்வை கொடுக்கிறது. அவருடைய வார்த்தை பலம் இழந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கை என்னும் வாழ்வு கொடுக்கிறது. 

ஒளி இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும். ஒளி நல் வழி காட்டும். ஒளியை நோக்கி வருதல் இறைவனை சார்ந்து இருக்கும் நிலையை சுட்டுகிறது.

இறைவனில் இணைந்து ஒளியை நோக்கி பயணிப்போம். அதனால் உலகு நம்மை (நாம் செய்யும் நன்மையை) வெறுக்கலாம். நன்மை செய்வதால் (நம்பிக்கை கொள்வதால்) நாம் இறைவனால் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...