29.04.2025 - செவ்வாய்க் கிழமை
தெரிந்தது சில தெரியாதது பல. ஆனால் எல்லாம் தெரிந்தது போல காட்டிக் கொள்ளும் அவலநிலை தான் நம்மில் அதிகம் பேருக்கு உண்டு.
கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்று சொல்வார்கள். அதே போல தான் தெரிந்தது குறைவாக இருந்தாலும் அதை கொண்டே தங்கள் ஆளுமைகளை நிலை நிறுத்திக் கொள்ள எண்ணுவோர் பலராக இருக்கிறார்கள்.
தெரியாததை தெரியாது என்று சொல்லும் போது தான் புதியதை தெரிந்துக் கொள்ள முடியும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3: 7-15) இயேசு நிக்கதேமிடம் கூறியது: “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது (மறுபடியும் பிறக்க வேண்டும்) தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.
நிக்கதேமு கற்றவராய் இருந்தாலும் இயேசு கூறியது அவருக்கு விளங்கவில்லை. புரிந்துக் கொள்ள அவர் விரும்பவில்லை என்றும் சொல்லலாம்.
கொஞ்சம் படித்தால் போதும் தலைக்கனம் தலைக்கு வந்து விடுகிறது. பெற்றுக் கொண்ட அறிவு மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும்.
எனக்கு எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, அதற்காக புதிதாக கற்றுக் கொள்ளாமல் இருக்கவும் கூடாது.
எல்லாம் தெரிந்தது போல காட்டிக் கொள்ளாமல் இருப்பதே நமக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.
Super fr
ReplyDelete