தவக் காலம் 5ஆம் வாரம்
11.04.2025 - வெள்ளிக் கிழமை
உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்; நல்லவர் தம் செயல் களின் பயனை அடைவார்.சரியானதை சரியென்று நிரூபிக்க இங்கு போராட வேண்டி இருக்கிறது - நீதிமொழிகள் 14:14
தவறு தான் விரைவில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பிடித்தவர்க்கு ஒரு நியாயம், பிடிக்காதவற்கு ஒரு நியாயம்.
நம்முடைய நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வருவதற்கு மனம் வருவதில்லை. மற்றவர் பக்கம் உள்ள நியாயத்தையும் கொஞ்சம் காது கொடுத்து தான் கேட்போமே என்பதெல்லாம் இல்லை. எல்லாம் தன் மையம் தான். நாம் தேடிக் கொண்ட புகழ், பதவி, பட்டம் எல்லாம் நம்முடைய உண்மைத்தனத்தினால் பெறப்பட்டது என்றால் கடவுளுக்கு நன்றி. நம்மிடம் இருப்பவையெல்லாம், மற்றவர்களை அடக்கி ஒடுக்கி பெறப்பட்டவையென்றால் அதனால் என்ன பயன்யென்ன?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 10:31-42) இயேசு தன்னை கடவுளாக்கிக் கொண்டார் என்று அவர்மேல் கல்யெறிய யூதர்கள் குழு முன்வருகிறது. இயேசு சொல்வது உண்மையாய் இருந்தும் அவருடைய செயல்கள் நற்செயல்களாய் இருந்தும் அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் யூதர்கள். என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, என்னுடைய செயல்களையாவது நம்புங்கள் என்று இயேசு இறங்கி வருகிறார்கள். என் செயல்கள் வழியாக என் தந்தையின் விருப்பத்தை நான் செயல்படுத்துகிறேன் என்கிறார் இயேசு.
கடவுள் பயம் என்பது இப்போதெல்லாம் இல்லாமல் போய்விட்டது. தன்னையே கடவுளாக பலர் மாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் பின்னாலும் ஒரு கூட்டம் ஓடத் தான் செய்கிறது. அறிவு இருந்தும் அதை செயல்படுத்த முடியாமல் பலர் அலைந்து திரிகிறார்கள். ஒருசில மனிதர்களை கடவுளாக்கி, ஒருசில மனிதர்களை கீழ்த்தரமாக நடத்துகின்றனர்.
உண்மையாய் இருப்பவர்கள் மற்றவர்கள் பார்வையில் தோற்றுக் கொண்டிருப்பது போல தெரியும். ஆனால் அவர்கள் தோற்கவில்லை, துவண்டு போய் இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்கள்.
கடவுளை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்பவர்கள், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களை (உண்மைக்காக குரல் கொடுப்பவர்களை) ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மைக்கு செவிமடுக்க வேண்டும். உண்மையின் பாதையில் நடக்க வேண்டும்.
எந்த செயல் உண்மையானதோ அதை விருப்பு வெறுப்புமின்றி ஏற்றுக் கொள்ள முன்வருவோம். கடவுள் சார்புநிலை என்பது உண்மையை ஏற்றுக் கொள்வதே!
No comments:
Post a Comment