25_04

புதுப்பிறப்பு பெற...


பாஸ்கா காலம் 2ஆம் வாரம்

28.04.2025 - திங்கள் கிழமை

“ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும்” - கொலோசையர் 3:9,10

மறுபடியும் பிறப்பது ஒருவரால் இயலாத காரியம். ஆனால், பிறப்பை புதுப்பிறப்பாய் மாற்றுவது நமது கையில் இருக்கிறது. புதுப்பிறப்பாய் மாறுவது என்பது தன்னுடைய இயலாமையிலிருந்தும் தன்னுடைய நிலையிலிருந்தும் மீண்டு வருவது.

அவர்களை போல நான் இல்லையே, எனக்கு திறமையே இல்லையே, என்னுடைய எண்ணங்கள் எல்லாம் எதிர்மறையாகவே இருக்கிறது, என்னுடைய முன்னேற்றத்தை என் கண்கள் எப்போது காணும்? என்னைப் போன்றோர்கள் எல்லோரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் நான் மட்டும் இப்படி இருக்கிறேன் என்று பலர் தங்களை குறித்து, இவ்வாறு வருத்திக் கொள்வது உண்டு.

இப்படி எண்ணுவதால் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை, ஒரு முன்னேற்றத்தையும் நாம் காண போவதில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:7-15) இயேசு நிக்கதேமிடம் ‘மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என்று சொல்கிறார். நிக்கதேமுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது, ஏற்கனவே பிறந்துவிட்ட நான் எப்படி மறுபடியும் பிறக்க முடியும்.

நிக்கதேமின் கேள்வி சரியாகத் தான் தோன்றுகிறது. ஆனால் இயேசு இங்குக் குறிப்பிடும் ‘மறுபடியும் பிற’ என்பது உடலின் மாற்றத்தை குறிப்பது அல்ல மாறாக, உள்ள இயல்பின் மாற்றத்தை குறிப்பது. பழைய மனித இயல்புகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

இன்று நம்மிடம் இருக்கக் கூடிய நம்மைக் குறித்த\மற்றவர்களைக் குறித்த தவறான எண்ணங்கள், இயல்புகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவை நீக்கப்படவில்லை என்றால் நம்மில் இயங்கும் இறைவனை நாம் கண்டு கொள்ள இயலாது. இயேசுவின் வார்த்தையும் நம்மில் தங்காது.

பழைய இயல்புகள் மாறட்டும்… புதுவாழ்வு தொடரட்டும்…

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...