பாஸ்கா காலம் 2ஆம் வாரம்
01.05.2025 - வியாழக்கிழமை
விவிலியம் உழைப்பின் பயனை மகத்துவத்தை தொடக்கத்திலேயே சுட்டிக் காட்டிவிட்டது.
தொடக்க நூல் 2:3 இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, "கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்."
தொடக்க நூல் 3:19 இவ்வாறு சொல்கிறது, "நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும்வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்."
தொடக்க முதல் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் அதிகமாக காணப்படும் தொழில் விவசாயம், ஆடு மாடுகளை மேய்த்தல். அதை முன்னிட்டே அறுவடை விழா, ஜூபிலி கொண்டாட்டம் (கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உரிமையாளருக்கு கொடுக்கப்படல் என பல நிகழ்வுகள் நிலத்தை மையப்படுத்தியது தான்)
உழைத்து உண்ண வேண்டும் என்பது தண்டனையாக கொடுக்கப்பட்டாலும் அது ஒருவரின் உயர்வை, ஒருவரின் மதிப்பை காட்டுகிறது. ஒருவர் சமூகத்தில் உயர்ந்து நிற்கிறார் என்றால் அவரது உழைப்பு தான் காரணம். (இன்றையக் காலக் கட்டங்களில் குடும்ப சொத்துக்களை கொண்டு சிலர் உயர்ந்து நிற்கிறார்கள், பிறரை ஏமாற்றி உயர்ந்து நிற்கிறார்கள்).
இன்று தொழிலாளர் புனித யோசேப்பின் திருவிழா. தன் குடும்பத்தை மிகவும் பொறுப்புடன் நடத்தி வந்தவர். தன் உழைப்பின் வழியாக மிகுந்த கனி தந்தவர். விவிலியம் சுட்டிக் காட்டும் நேர்மையாளர்.
தன் விருப்பம் துறந்து இறைவிருப்பம் நிறைவேற்றியவர். தன் வலிகளை மறைத்து பிறர் வலி சுமந்தவர். அன்னை மரியாவை ஏற்றுக் கொண்டவர். திருக்குடும்பத்தின் பாதுகாவலர்.
விவிலியத்தில் பேசப்படுபவர், ஆனால் விவிலியத்தில் ஒரு வார்த்தையும் பேசாதவர்.
இத்தகைய சிறப்புக்குரிய நம் புனிதர் யோசேப்பு உழைப்பின் மகத்துவத்தை தன் வாழ்வால் சுட்டிக் காட்டுகிறார். தன் பணியை மட்டுமல்ல இறைபணியையும் சிறப்புடன் நிறைவேற்றியவர்.
இவர் வாழ்வு நமக்கு முன்மாதிரி ஆகட்டும்… இவரை போல நாமும் கனி கொடுப்போம்.
நல்லவர்கள் அதிகம் பேசமாட்டார்கள், அதிகம் பேசுபவர்கள் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment