பாஸ்கா எண் கிழமை - செவ்வாய்
22.04.2025 - செவ்வாய்க் கிழமை
“அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில், நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை" - எரேமியா 31:9
ஒவ்வொரு அழுக்கைக்கு பின்னும் ஒருவிதமான எதிர்பார்ப்பு இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் மகிழ்ச்சி. நிறைவேற காலம் எடுத்தால் வருத்தம்.
சிலர் அழுகையோடு வாழ்க்கையை தொடர்கிறார்கள், அழுகையோடு நிறைவு செய்கிறார்கள். சிலர் அழுகையோடு தேடும்போது மகிழ்ச்சியைக் கண்டுக் கொள்கிறார்கள்.
சில அழுகைகள் இழப்பை தாங்க முடியாமல் வருகிறது. சில அழுகை அன்புக்குரியோரின் நிராகரிப்பினால் வருகிறது, சில அழுகை ஏமாற்றத்தை தாங்க முடியாமல் வருகிறது, சில அழுகை ஆனந்தக் களிப்பினால் வருகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 20:11-18) மரியா இயேசுவை பார்க்க கல்லறைக்கு அழுதுக் கொண்டே செல்கிறார், அழுதுக் கொண்டே கல்லறையை குனிந்து பார்க்கிறார். அவரது அழுகை இயேசுவை காணவில்லை என்பதே. அவரது அழுகையின் நிறைவில் இயேசுவைக் கண்டுக் கொள்கிறார், ஆனால் அறிந்துக் கொள்ளவில்லை. இயேசுவை தோட்டக்காரர் என்று எண்ணுகிறார். ‘மரியா’ என்று இயேசு அழைத்ததும், மரியா இயேசுவைப் பற்றிக் கொள்கிறார். அழுகை மகிழ்ச்சியாக ஆர்ப்பரிப்பாக மாறியது. அந்த மகிழ்ச்சி அறிவிப்பாக மாறியது.
அழுகையோடு தேடியவர் இயேசுவை கண்டுக் கொண்டார். அழுகை மகிழ்ச்சியாக மாறியது. இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்று சீடரிடம் அறிவித்தார்.
ஒவ்வொரு அழுகைக்கும் பதில் உண்டு, முடிவு உண்டு. அதற்கு நாம் தேட வேண்டும். சோகத்திலும், வேதனையிலும் துவண்டு போகாமல் தொடர் பயணத்தில் ஈடுபடுவோம். அதனால் அக்களிப்போம்.
No comments:
Post a Comment