இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகம், ஏதேன் தோட்டமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆசை நம்மிடம் இருக்கிறது. நாம் வாழக்கூடிய உலகம், இன்றும் ஏதேன் தோட்டமாக தான் இருக்கிறது. ஆனால் நம்முடைய தீட்டுப்பட்ட இதயத்தால் அவை இன்று களங்கடிக்கப்படுகின்றன. இயற்கையை அழிப்பதால், மாசுபடுத்துவதால் நாம் வாழும் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டு கொண்டிருக்கிறோம். (“ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்” – தொடக்க நூல் 3:23) இயற்கை நமக்கு எதிரி போல மாறிக் கொண்டிருக்கிறது. பருவநிலை எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது (எப்போது மழை பொழியும் என்று முன்புபோல யூகிக்க முடிவதில்லை).
இவற்றிற்கெல்லாம் காரணம் மனிதன் தன்னுடைய தீட்டுப்பட்ட இதயத்தால், தன்னுடைய சுயநலத்தால் இயற்கையை பாழ்படுத்தியதுதான். மனிதனின் உள்புறம் மாசுபட்டு போனதால் வெளிப்புறமும் மாசுப்பட்டு போக வேண்டும் என்று நினைக்கிறான்.
இயற்கையையும் தாண்டி, மனிதன் மற்றொரு மனிதனையும் தீட்டுள்ளவனாக மாற்றியுள்ளான். தான் செய்வது தான் சரியென மெய்ப்பிக்க, மற்றவரை அடக்க ஆள மனிதன் தன் கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் “தீட்டு”. கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட மனிதன் எப்படி தீட்டுள்ளவனாக இருக்க முடியும். (“கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்…” – தொடக்க நூல் 1:27). கடவுளின் பார்வையில் அனைவரும் சமம்.
உயர்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்ற வேறுபாடு இங்கில்லை. “புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்” – கொலோசையர் 3:11
தீட்டுப்பட்ட இதயம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். நம் குறைகளை களைந்து பிறரில் நிறைவு காண வேண்டும். தூய்மையான இதயத்தோடு நாமும் ஏதேன் தோட்டத்திற்குள் செல்வோமா!
No comments:
Post a Comment