“நாங்கள் பாவம் செய்தாலும் உம்முடையவர்களே; ஏனெனில் உமது ஆற்றலை அறிவோம். நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்; ஏனெனில் உம்முடையவர்களாக நீர் எங்களை எண்ணுவதை நாங்கள் அறிவோம்” - சாலமோனின் ஞானம் 15:2
பாவமும் நன்மையும் இணைந்தே செல்ல முடியாது. பாவியும் நேர்மையாளனும் இணைந்து வாழ முடியாது. பாவம் பாவியோடும் நன்மை நேர்மையாளனோடும் இணைந்து செல்லும்.
ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 5:27-32) ஒரு முரண்பாடு இருக்கிறது. இயேசு பாவிகளை தேடி செல்கிறார். லூக்கா 5:32இல் “நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்கிறார். இங்கு இயேசுவின் எதிர்பார்ப்பு பாவமும் பாவிகளும் பெருக வேண்டும் என்பதல்ல, மாறாக பாவிகள் பாவத்திலிருந்து மனம் (திசை) மாற வேண்டும் என்பதுதான்.
பாவம் தன்னையும் அழிக்கும் தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும். “பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது” - 1யோவான் 1:8.
அலிஸ்டர் பெக் சொல்வார், ‘பாவியை கண்டுபிடிக்க நமக்கு ஒரு கண்ணாடி தான் தேவை’ (அந்த கண்ணாடி பிரதிபலிப்பது நம்மையும் நம் பாவத்தையும் தான்). நாம் செய்த பாவத்தை ஏற்றுக் கொள்கிற போது தான், அதிலிருந்து வெளிவர முடியும். நாம் செய்வது பாவம் என்பதை அறிந்திருந்தும், தொடர்ந்து அதையே செய்கிற போது அதிலே சுகம் கண்டு விடுகிறோம்.
“உண்மை அறிந்தபின்னரும் வேண்டுமென்றே நாம் பாவத்தில் நிலைத்திருந்தால், இனி நமக்கு வேறு எந்தப் பாவம்போக்கும் பலியும் இராது” - எபிரேயர் 10:26
சமூகத்தில் பாவிகள் என்று யாரெல்லாம் முத்திரை குத்தப்பட்டார்களோ அவர்களை இயேசு தேடிச் சென்றார். ஒருவேளை அவர்கள் பாவம் செய்ததனால் அல்லது பாவிகளோடு கைக்கோர்த்ததனால் அவர்கள் பாவிகள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். (லேவி- வரிதண்டும் பணியை செய்தார், உரோமையர்களுக்கு கீழ்ப்படிந்து, யூதர்களிடமிருந்து வரி வசூலிப்பது பாவமாக கருதப்பட்டது. அதை செய்வோர் பாவி. அத்தகையோரை யூதர்கள் வெறுத்தனர்)
அத்தகைய சூழலில், இயேசு பாவியென கருதப்பட்டோரையும் தேடி சென்றார். வெறுக்கப்பட்டோரை நேசித்தார். மனம் மாற அழைத்தார். ஏனென்றால், கடவுள் பாவத்தை வெறுக்கிறார்; பாவிகளை அல்ல. ஆகவே, பாவத்திலிருந்து திசை மாறுவோம். இயேசுவின் நண்பர்களாவோம்.
Good write up fr …
ReplyDelete