24_02

நோய் நீங்கி நலம் பெற

நோயில்லா நல்வாழ்வு தேவை என்பது எல்லோரின் எதிர்பார்ப்பு. நோயில்லா வாழ்வு தான் ஒருவருக்கு மனநிறைவை கொடுக்கும். இன்று மட்டுமல்ல அன்றும் பல்வேறு நபர்கள் இயேசுவிடம் நலம்வேண்டி நின்றார்கள். 

இயேசுவை தேடிவந்தவர்கள், இயேசுவை தொட்டவர்கள், இயேசு யாரை தேடி சென்றாரோ, இயேசு யாரை தொட்டாரோ அவர்கள் எல்லோரும் நலம் பெற்றார்கள். (“பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர். இயேசு அவர்களைக் குணமாக்கினார்” – மத்தேயு 21:14). 

நோய் நீங்க நலம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

நோய் நீங்க 

1. இயேசுவில் நம்பிக்கை கொள்ள வேண்டும்

2. இயேசுவை தேடிவர வேண்டும்

3. இயேசு தொட அனுமதிக்க வேண்டும் (அ) இயேசுவை தொட வேண்டும்

4. இயேசுவுக்கு நன்றி சொல்ல வேண்டும்

நலம் பெற

1. தவறுகளுக்கு மனம்வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் (“உன் பழைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேள்” – சீராக் 21:1)

2. தவறுகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் (மன்னிக்க வேண்டியவர்களை மன்னிக்க (அ) மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்) (“மன்னியுங்கள்; மன்னிப்பு பெறுவீர்கள்” – லூக்கா 6:37)

3. கோபம், எரிச்சல், பகைமை, பழிவாங்கும் எண்ணம் ஆகியவற்றை நீக்க வேண்டும். (“என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார்” – திருப்பாடல்கள் 66:18)

4. மருத்துவரின் அறிவுரைக்கு செவிமடுக்க வேண்டும் (“உன் தேவைக்கு ஏற்ப மருத்துவர்களுக்கு உரிய மதிப்பு வழங்கு; ஆண்டவரே அவர்களை படைத்தார்” – சீராக் 38:1)

இவற்றையெல்லாம் செய்கின்ற போது நோயும் நீங்கும் நலமும் பெறுவோம். இன்று உடல் நோயாலும் உளநோயாலும் வருந்துவோர் ஏராளம். மருந்து மட்டும் நலமளிக்காது, செயல்களற்ற நம்பிக்கை நலம் அளிக்காது, நம்பிக்கையோடு கூடிய செயல்முறைகளே நமக்கு நல்வாழ்வு அளிக்கும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 1:40-45) தொழுநோயாளர் இயேசுவில் நம்பிக்கை கொண்டு அவரை தேடி வந்தார், தன்னை முழுவதும் கையளித்தார். “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” (மாற்கு 1:40) என்ற உயர்ந்த நம்பிக்கை அவரிடம் இருந்தது (“நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” - மாற்கு 9:23). அவருடைய செயல்களோடு கூடிய (தேடி வருதல், தன்னை கையளித்தல்) நம்பிக்கை அவருக்கு நலம் தந்தது. அவர் நோய் நீங்கி நல்வாழ்வு பெற்றார்.

இன்றைய நற்செய்தி குறித்த சில கேள்விகளும் பதில்களும்

1. இயேசு ஏன் தொழுநோயாளரை குணப்படுத்தினார்?

தொழுநோயாளர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். (காண்க - லேவியர் 13:45-46) அவர்கள் மனிதராக வாழ்வதற்குரிய மாண்பை இழந்து இருந்தார்கள். எனவே இயேசு தொழுநோயாளரை தொட்டு குணப்படுத்துகிறார்.

2. தொழுநோயாளர் தான் நலம்பெற்றதை ஏன் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயேசு கூறினார்?

இயேசு வல்ல செயல்கள் செய்கிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் மக்கள் வருவதைவிட, இறைவார்த்தைமேல் கொண்ட தாகத்தால் மக்கள் அவரிடம் வர வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

3. தொழுநோயாளர் நலம்பெற்றதை ஏன் குருவிடம் காட்ட வேண்டும்?

குரு பரிசோதனை செய்து தொழுநோய் இல்லை என்று சான்று பகர்ந்தால் மட்டுமே, அவர் ஊருக்குள்ளே நுழைய முடியும். (காண்க - லேவியர் 14:1-32) ஆகவே தான் இயேசு அவரை குருவிடம் காட்ட சொல்கிறார்.

4. தொழுநோயாளர் இயேசுவுக்கு கீழ்ப்படியவில்லையா?

ஒருவகையில் சொல்லப்போனால், இயேசு பணித்ததை அவர் நிறைவேற்றவில்லை. அதே வேளையில், தான் பெற்றுக்கொண்ட நன்மைத்தனத்தை மற்றவர்களும் அறிந்து கொள்ள அறிவித்தார்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...