“இந்நிலையில், நான் செய்ய வேண்டியதென்ன? தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இறைவேண்டல் செய்வேன்; அறிவோடும் இறைவேண்டல் செய்வேன். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுத் திருப்பாடல் பாடுவேன்; அறிவோடும் திருப்பாடல் பாடுவேன்”. - 1 கொரிந்தியர் 14:15
மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டு போவதால் யாருடைய இறைவேண்டலும் கேட்கப்படாது. வாழ்க்கை ஒருமாதிரியாகவும் வார்த்தை வேறுமாதிரியாகவும் இருப்பது பயனற்றது. இறைவேண்டல்களும் வாழும் வாழ்க்கையும் எளிமையாக இருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டுமென்று இறைவேண்டல் செய்யும் உதடுகள் கைம்மாறு பெறுவதில்லை.
இறைவேண்டலானது புகழ்ச்சி, நன்றி, பரிந்துரை, விண்ணப்பம் என பல வடிவங்களை கொண்டுள்ளது.
“தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே”. - யாக்கோபு 3:9
இறைவேண்டலில் இறைவனை புகழ்கிற அந்த நாவே, அவரது சாயலில் படைக்கப்பட்ட மனிதரை இகழ்ந்து பேசுகிறது. இறைவேண்டல்கள் கேட்கப்பட வேண்டும் என்றால் அடுத்தவருக்கு ஆசிராக இருக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6: 7-15) இயேசு விண்ணக தந்தையை நோக்கி வேண்டுவதற்கு அழைப்பு விடுக்கிறார். இயேசு கற்பித்த இறைவேண்டல் இரு பிரிவுகளை கொண்டுள்ளது. 1. தந்தையை புகழ்தல் 2. தேவைக்காக வேண்டல்
உணவிற்காக, மன்னிப்பிற்காக, பாதுகாப்பிற்காக வேண்டுகிறோம். முடிந்த மட்டும் உணவு, மன்னிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். பகிர்பவர்கள் அதிகம் பெற்றுக் கொள்வார்கள். வெற்று வார்த்தைகளும், வெற்று சடங்குகளும் தேவையில்லை. நம்பிக்கையோடு கூடிய எளிய இறைவேண்டல் இறையாசிரை பெற்றுத்தரும்.
‘கடவுள் அமைதியான இதயத்தில் பேசுவார்; அவருக்கு செவிமடுப்பதே இறைவேண்டலின் தொடக்கம்’ என்பார் புனித அன்னை தெரசா.
கடவுளுக்கு செவிமடுப்போம்… இறையாசிரை பகிர்ந்தளிப்போம்…
அருமை
ReplyDelete