“நானோ, அவர்கள் நோயுற்றிருந்தபோது, சாக்கு உடுத்திக் கொண்டேன்; நோன்பிருந்து என்னை வருத்திக் கொண்டேன்; முகம் குப்புற வீழ்ந்து மன்றாடினேன்” - திருப்பாடல்கள் 35:13
தவக்காலத்தில் பலவகை ஒறுத்தல்கள் செய்யப்படுகின்றன. நாம் விரும்புபவற்றை ஒடுக்குவது தான் நோன்பு. நோன்புகளில் உண்ணா நோன்பு, ஊடக நோன்பு, சொல் நோன்பு, தொலைக்காட்சி நோன்பு, துக்க நோன்பு இன்னும் பல இருக்கின்றன.
விவிலியம் சுட்டிக் காட்டும் நோன்பு
1. பாவக் கழுவாய் நிறைவேற்றுவதற்கு முன் செய்ய வேண்டிய நோன்பு - (லேவியர் 16: 29-34)
2. போரில் வெற்றிக் காண நோன்பு (நீதித் தலைவர்கள் 20: 25-35)
3. இறப்பை குறித்து நோன்பு (1சாமுவேல் 31:13, 2சாமுவேல் 12:16)
4. உயிர்ப் பிழைக்க நோன்பு (எஸ்தர் 4:3)
5. அழிவிலிருந்து காப்பாற்றப்பட நோன்பு (யோவேல் 1:14)
நெகேமியா 1:4இல் “நான் நோன்பிருந்து விண்ணகக் கடவுளின்முன் மன்றாடினேன்” என்கிறார் நெகேமியா. அடிமைத்தனத்தில் இருந்து தப்பியவர்கள் துயரும் சிறுமையும் அடைகிறார்கள் என்நு கேள்விப்பட்டதும் தன் ஆதங்கத்தை நோன்பின் வழியாக கடவுளிடம் தெரிவிக்கிறார்.
இரண்டு நோன்புகளை இறைவன் இன்றைய முதல் வாசகத்தின் (எசாயா 58: 1-9) வழியாக நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
1. அடிமைத்தளைகளை துடைத்தெறியும் நோன்பு (எசாயா 58:6)
2. அயலானை அரவணைக்கும் நோன்பு (எசாயா 58:7)
யோவானின் சீடர்கள் தாங்கள் நோன்பு இருப்பதால், தங்களை உயர்ந்தவர்களாக எண்ணிக் கொண்டார்கள். எனவே இயேசுவிடம் அவர்களின் கேள்வி இவ்வாறு அமைந்தது. “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” - மத்தேயு 9:14
இயேசு ‘நோன்பு இருக்க வேண்டிய காலத்தில் அவர்களும் நோன்பு இருப்பார்கள்’ என்று கூறினார்.
நான் நோன்பு இருக்கிறேன் என்று பெருமைத் தேடுவதற்கு இங்கு என்ன இருக்கிறது. மற்றவர்கள் நோன்பு இருக்கிறார்களா இல்லையா என்று ஆராய்வதால் எனக்கு ஒரு பயனும் இல்லை. நான் இருக்கக் கூடிய நோன்பு, என் வாழ்வையும் முடிந்த அளவுக்கு மற்றவர்கள் வாழ்வையும் சீர்ப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment