"இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு" - 2 திமொத்தேயு 4:2
திருமுழுக்கு பெற்ற அனைவரும் நற்செய்தியை தங்களது வாழ்க்கையால் அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள். திருவிவிலியம் ஏந்தி நற்செய்தி அறிவிப்பதைவிட திருவிவிலியத்தின் விழுமியங்களை ஏந்தி நற்செய்தி அறிவிப்பது இன்று சவாலாக இருக்கிறது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் (குறள் - 664)
சொல்வது எல்லோருக்கும் எளிது. ஆனால் சொல்லியதை செய்து முடிப்பதுதான் கடினம். இது இறைவார்த்தை அறிவிப்பிற்கும் பொருந்தும். அன்பு செய்ய வேண்டும், நற்செயல்கள் செய்ய வேண்டும் என்று எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் அதை வாழ்க்கையில் செயல்படுத்தாவிட்டால் அறிவித்த நற்செய்தி பலனற்றதாய் போய்விடும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நற்செய்தி அறிவிப்பை பற்றி கூறுகையில், ‘நாம் அறிவிக்கின்ற நற்செய்திக்கு நம் வாழ்க்கையால் சான்று பகர நாம் ஒருபோதும் மறந்துவிட கூடாது’ என்பார்.
ஆலயத்தில் இருந்து நாம் வெளியேறுகிறோம் என்றால், நாம் நடமாடும் இறைவார்த்தையாக மாறுகிறோம். இயேசுவின் வார்த்தை நலமளித்தது, ஆறுதளித்தது, புத்துணர்வு கொடுத்தது, புதுவாழ்வு கொடுத்தது, பேய்களை ஓட்டியது, நீதியை நிலைநாட்டியது… இன்னும் பலவற்றை இயேசுவின் வார்த்தை செய்தது. இயேசுவின் வார்த்தையை சுமக்கின்ற நாமும் சமூகத்தில் நற்செயல்கள் புரிய அழைக்கப்பட்டிருக்கிறோம்.
வார்த்தைகளை விட செயல்கள் தான் அதிகம் பேசும். நம் செயல்கள் (நற்செயல்கள்) பேசட்டும்.
No comments:
Post a Comment