“நான் ஆண்டவரிடமிருந்து ஒளிந்து கொள்வேன்; உயர் வானிலிருந்து யார் என்னை நினைப்பார்? இத்துணை பெரிய மக்கள் திரளில் என்னை யாருக்கும் தெரியாது; அளவற்ற படைப்பின் நடுவே நான் யார்?’ என்று சொல்லிக் கொள்ளாதே”. - சீராக்கின் ஞானம் 16:17
நான் யார்? என்னை பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? என்னை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? இவையெல்லாம் மனிதருக்குள் இயல்பாய் எழும் கேள்விகள்.
இன்று விளம்பரப்படுத்திக் கொள்வதில் மனிதர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த விளம்பரத்தின் வழியாக தற்பெருமை, ஆணவம் அதிகரிக்கிறது. இப்படிப்பட்டவர்கள் ஒருபோதும் தன்னை கண்டுக் கொள்ளமாட்டார்கள்.
‘தன்னை அறிவதே ஞானத்தின் தொடக்கம்’ என்பார் சாக்ரட்டீஸ். தன்னை அறிதல் என்பது தலைக்கணத்தின் அடையாளம் அல்ல, மாறாக தனக்குள் இருக்கும் கடவுளை கண்டுக் கொள்வதற்கான வெளிப்பாடு. (‘நான் யார்’ என்று கேள்வி கேட்பதோடு நின்றுவிட கூடாது. கேள்விகளுக்கான தொடர் தேடலில் ஈடுபட வேண்டும்.)
“கடவுள் நம்முடன் இருக்கிறார்” - மத்தேயு 1:23.
“இயேசு கிறிஸ்து உங்களுள் செயலாற்றுகிறார் என உணராமலா இருக்கிறீர்கள்? நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தீர்கள் என்றால் அதை உணர்வீர்கள்”. 2கொரிந்தியர் 13:5
தன்னை அறிதலும் கடவுள் தனக்குள் இருப்பதை உணர்வதும் ஒருவரை முழுமனிதனாக்கும். தன்நிலை உணர்ந்தவர் பிறர்நிலை உணர்ந்து செயல்படுவார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 16:13-19) மானிடமகனை மக்கள் யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? என்ற இரண்டு கேள்விகளை கேட்கிறார் இயேசு. எதற்காக இந்த கேள்விகள்? இயேசுவின் பணிவாழ்வை பார்த்து, இயேசுவை யாரென்று மக்கள் உணர்ந்து கொண்டார்களா? இயேசுவின் இறையாட்சி பணி குறித்த தெளிவை பெற்றுக் கொண்டார்களா? என்பதை அறிந்து கொள்ளவும் அதனை தனது சீடர்கள் புரிந்துக் கொள்ளவுமே இத்தகைய கேள்விகள்.
சீமோன் பேதுரு இயேசுவை இன்னாரென்று கண்டு கொண்டு, ‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்’ என்று அறிவித்தார். இயேசுவும் அவரை தமது பணியின் முதன்மையாக தேர்ந்துக் கொண்டார்.
புனித அகுஸ்தினாரின் இறைவேண்டல், ‘கடவுளே! நான் உம்மை அறியவும் என் நிலை உணரவும் எனக்கு கற்பியும்’.
நாம் இறைவனின் படைப்பில் அழகுமிக்கவர்கள். தனிப்பட்ட பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். நம் நிலை உணர்வோம்… பிறர்நிலை உயர வைப்போம்… இயேசுவை கண்டு கொள்வோம்…
No comments:
Post a Comment