“மின்னல் கீற்று இலக்கை நோக்கி நேராகப் பாயும்; நாணேற்றிய வில்லினின்று புறப்படும் அம்புபோல் அது முகில்களிலிருந்து குறியை நோக்கித் தாவும்” - சாலமோனின் ஞானம் 5:21
இலக்கு தெளிவில்லாத சீடத்துவ வாழ்வு இடையூறாய் அமையும். தலைவனின் பாதையில் நடந்தும் அவரை புரிந்துக் கொள்ளாதவர்கள் தலைவரை பின்தொடர்ந்தும் பயனில்லை. ஏனென்றால், பணித் தெளிவோ இலக்குத் தெளிவோ இல்லாமல் பின்தொடர்வது வீணானது.
‘நான் கிறித்தவன் என்று அழைக்கப்படுவது என் இலக்கு அல்ல; நான் கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் அதுதான் என் இலக்கு’ என்பார் புனித அந்தியோக்கு நகர் இஞ்ஞாசியார்.
கிறித்தவர்கள் என்று யாரும் அழைக்கப்படலாம். அது மட்டும் நம்முடைய இலக்காக இருக்க கூடாது. மாறாக கிறிஸ்துவின் இறையாட்சி கனவை கண்முன் கொண்டு, நாம் அவருடைய விழுமியங்களை வாழ்வாக்க வேண்டும். “இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாக கொண்டது” - உரோமையர் 14:17
இயேசுவின் இலக்கு என்பது நீதி, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம். இதை வாழ்வாக்குவது தான் கிறித்தவரின் இலக்காக இருக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:14-21) இயேசுவோடு உடன்இருந்தவர்கள், இயேசு வல்ல செயல்கள் செய்தபோது கண்கூடாக கண்டவர்கள் இயேசுவின் வல்லமையை உணராதவர்களாய் இருந்தார்கள். “அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்” மாற்கு 8:16. சீடர்களின் கவலைகளெல்லாம் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்தது. இயேசுவின் இலக்கோடு அவர்கள் இணைந்து பயணிக்க மறந்துவிட்டார்கள்.
இலக்கு இல்லாத படகு திசை மாறும். இலக்குகளற்ற கிறித்தவ வாழ்க்கை நிலை தடுமாறும்.
எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம், எது நமக்கான பாதை என்பதில் தெளிவு கொள்வோம். இலக்கு தெளிவானால் சோதனைகளும் சாதனைகளாகும்.
No comments:
Post a Comment